Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 182

தொடர்ந்து அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்!

0

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உணவு வாங்க வரிசையில் நின்றவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக தி கார்டியன் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளை என்கிற பெயரில், காசாவில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று காசாவின் தெற்குப் பகுதியில் அறக்கட்டளையிலிருந்து உணவு வாங்க காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், உணவு வாங்க காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

இஸ்ரேலின் படுகொலை
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இது ஒரு ‘படுகொலை’ என்று விவரித்தனர். மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அறக்கட்டளையின் உதவி மையத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ள டெய்னா பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் குழந்தைகளும் அதிக அளவில் இருந்திருக்கின்றன. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ரஃபா அருகே உணவு வழங்கும் அறக்கட்டளை அமைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. அதில் 9 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கார் ரேஸ் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார்!

இத்தாலியில் கார் ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஸின் போது டிராக்கில் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் குமார் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. அஜித்குமார் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நின்றதால் அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதியது.

எனினும் நடிகர் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் ரேஸிங் தொடங்கிய அரை மணி நேரத்தில் டிராக்கில் முன்னால் சென்ற கார் நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் அஜித்குமார் காரின் இடதுபுறத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து டிராக்கில் இருந்து அந்த கார்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. காரில் இருந்து வெளியே வந்த நடிகர் அஜித்குமார் காரின் உடைந்து கிடந்த பாகங்களை ஒன்றாக எடுத்து போட்டார். அஜித்குமார் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கி/ரீ.பீ. ஜாயா பாடசாலையில் கௌரவிப்பு விழா!

திரு/கிண்ணியா/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும், க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்குமான கௌரவிப்பி நிகழ்வு கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இந்நிகழ்வின், பிரதம அதிதியாக பிரபல்ய சமூக சேவையாளரும், பரக்கா சரட்டி நிறுவனத்தின் தெற்காசியா பிராந்தியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.

இதன்போது, சட்டத்தரணி முஜீப் அமீன் செய்துவரும் சமூக சேவைகளை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினரால் சினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்று!

கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய (20) தினம் சிறப்பாக இடம்பெற்றது….!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கரைச்சி பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் இன்றய தினம் தினம் காலை 9 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஜெ.சுகந்தன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிர்வாக தெரிவு மற்றும் கலந்துரையாடலில் கரைச்சி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சகல கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இவ் நிகழ்வில் விருந்தினர்களாக தேசிய இளைஞர் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.ஐ தேவேந்திரன் அவர்களும், தேசிய இளைஞர் மன்றத்தில் கடந்த கால செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும், செல்வி கீர்த்திகா மயில் வாகனம் (CPR நிறுவனத்தின் கணக்காளர்) அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சவுதி இளவரசர் காலமானார்!

0

விபத்தில் சிக்கியதால் 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருந்த 36 வயதான சவுதி இளவரசர் அல்வலீத் பின் காலித் காலமானார்.

2005ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள இராணுவ அகாடமியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார் இளவரசர் அல்வலீத். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது, மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை குணப்படுத்த இயலவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையிலேயே சுயநினைவின்றி இருந்து வந்தார்.

வைத்தியர்கள் கைவிரித்தாலும் இத்தனை ஆண்டுகளாக இளவரசர் காலித் தனது மகனை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. தொடர்ந்து மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இஸ்லாமிய நிகழ்வுகளின் போது தனது மகன் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்தும் வந்தார்.

2005ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இளவரசர் அல்வலீத் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரத்திற்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்தார். அவரை மீண்டும் காப்பாற்றும் நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் உலகம் முழுவதிலுமிருந்து மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்தனர். அவ்வப்போது நம்பிக்கை அளிக்கும் அசைவுகள் தென்பட்டாலும், பல ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த வந்த அல்வலீத் பின் காலித் தனது 36ஆவது வயதில் உயிரிழந்ததாக அவரது தந்தையும் இளவரசருமான கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

0

மோசமான காலநிலை: மூன்று மீனவர்கள் மாயம், இருவர் மீட்பு; கடற்றொழிலாளர்களுக்கு அவசர கடும் எச்சரிக்கை!

தற்போதைய மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் அலைகள் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திரு. கஹவத்த வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

காணாமல் போன மீனவர்கள்:

  1. சிலாபம்: கடந்த 18ஆம் திகதி சிலாபம் பகுதியிலிருந்து ஒருநாள் தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற “OFRP-A-2925CHW” படகில் பயணித்த நிஹால் ரஞ்சன் பெர்னாண்டோ மற்றும் ஜூட் லக்ஷ்மன் பெர்னாண்டோ ஆகிய இரண்டு மீனவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை.

    இலங்கை விமானப்படை வானூர்தி மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. கடலின் கொந்தளிப்பான தன்மை காரணமாக கடற்படை கப்பல்களை ஈடுபடுத்த முடியவில்லை. காலநிலை சீரானவுடன் இலங்கை கடற்படை தேடுதல் பணிகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது.
  2. பேருவளை: பேருவளை துறைமுகத்திலிருந்து கடந்த 15ஆம் திகதி புறப்பட்ட “சுப பெத்தும்” (KLT 919) என்ற மீன்பிடிக் கப்பல், மோசமான காலநிலை காரணமாக 19ஆம் திகதி மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எஸ். எம். சில்வா என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்க உயிர் காக்கும் கவசங்களை அணிவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். நீர்கொழும்பு பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான போதிலும், அதில் பயணித்த இரண்டு மீனவர்களும் உயிர் காக்கும் கவசங்களை முறையாக அணிந்திருந்ததால் நீந்திக் கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், உயிர் காக்கும் உபகரணங்களின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து கவலை தெரிவித்த பணிப்பாளர் நாயகம், “கடற்றொழில் தடையால் மீனவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உங்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பளிப்பதே எமது முன்னுரிமை” என்று குறிப்பிட்டார்.

எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இந்த அபாயகரமான பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏனைய பகுதிகளில் உள்ள மீனவர்களும் காலநிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி!

0

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 

நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்ததுடன், இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மீமுரே விபத்தில், வேனில் பயணித்த 6 பேரில் நால்வர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்து!

0

மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விபத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த நிலையிலேயே இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவடைந்த வடக்கு நீலங்களின் 14வது சமர்!

வடக்கின் நீலங்களின் 14வது சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் அமோக வெற்றி பெற்றது.

வடக்கு நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்குமிடையிலான 14வது நீலங்களின் சமர் கிரிக்கெட் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.

நேற்றைய முதல் நாள் போட்டியில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 134 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி முதல் இனிங்சில் 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 169 ஓட்டங்களை பெற்று, கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 48.3 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.

இது வரை நடைபெற்ற 14 வடக்கின் நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 போட்டிகளிலும், கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 04 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 05போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

14வது வடக்கின் நீலங்களின் சமர் தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக இந்துக்கல்லூரி அணியின் வீரர் கே.கரிசாந்தன் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரி அணியின் வீரர் ஜெ.மதுஷன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி அணி வீரர் என். சாருஜன் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி அணி வீரர் ஜீ.கெளசிகன் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

புத்தளம், கரிக்கட்டையில் எசல பெரஹெர!

0

புத்தளம், கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வில், சமகி ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் ஐந்தாவது முறையாகவும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வு, கரிக்கட்டையில் ஆரம்பாகி, நாகவில்லு வரை சென்று, மீண்டும் கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன், சமகி ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமகி ஆரம்பப் பாடசாலை பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.