Home Blog Page 182

புதையலை விற்கச் சென்றவர்கள் கல்பிட்டி பகுதியில் கைது!

ஜூட் சமந்த

புதையலில் இருந்து பெறப்பட்டதாகக் கூறி ரத்தினக் கல்லை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று 2.10.2025 கல்பிட்டி, திஹலிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் வென்னப்புவ – லுனுவில, கல்பிட்டி – ஆலங்குடாவ மற்றும் கல்பிட்டி – திஹாலிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 56, 54 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதையலில் இருந்து பெறப்பட்ட ரத்தினக் கல்லை விற்பனை செய்யத் தயாராகும் குழு குறித்து நொரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வினை நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.2025) கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் மாலை 4.00மணிக்கு “சுற்றுலாவும் அதன் நிலைபெறான நிலை மாற்றமும்” என்னும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலக சுற்றுலா தின நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (03.10.2025) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது பழைய மாவட்ட செயலகத்திலிருந்து பசுமை பூங்கா வரையிலான நடைபவனி ஒழுங்குகள், பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக்கூடங்கள், மேடை ஒழுங்கமைப்பு, ஒலி – ஒளி அமைப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.

இக் கலந்துரையாடவில் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் வை.யசோதா, கிளிநொச்சி மாவட்ட சமர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்பிட்டியில் பிடிபட்ட 408 கி.கிராம் பீடி இலைகள்!

ஜூட் சமந்த

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 408 கிலோகிராம் பீடி இலைகளை கொண்டு செல்ல தயாரான சந்தேக நபரை நுரைச்சோலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி, ஏத்தாளை பகுதியில் நேற்று 2 ஆம் தேதி இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

காவல்துறை சிறப்பு பணியகத்தின் கல்பிட்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 13 பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பொலேரோ ஜீப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பீடி இலைகளுடன் புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஜீப் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

நுரைச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

94 மில்லியன் செலவில் மன்னாரில் நீச்சல் குளம் திறப்பு!

மன்னார் மாவட்ட விளையாட்டு கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் (swimming pool) நாளை திறந்துவைக்கப்பட உள்ளது.

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீச்சல் குளம், விளையாட்டு அபிவிருத்தி துறையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.94 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நானாட்டம் பிரதேச பிரிவின் நாராவில குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந் நீச்சல் குளம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் திறந்துவைக்கப்பட உள்ளது.

இதேவேளை புனித சேவியர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட உள்ள, உள்ளக விளையாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நாளைய தினம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனமடுவையில் ரூ.163 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்!

வறுமையை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு அரசு ஊழியர்களுக்கும் ஒரு அசைக்க முடியாத வரலாற்றுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் ரூ.163 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

35 பிரிவுகளைச் சேர்ந்த 140 கிராமங்களை உள்ளடக்கிய ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 14,763 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44,483 மக்கள் இந்தப் பிரிவில் வசிக்கின்றனர், மேலும் இந்தப் புதிய அலுவலக வளாகம் திறக்கப்பட்டதன் மூலம், அவர்களுக்கு தேவையான சேவைகளை எளிதாக அணுக முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது;

”பொது சேவையை நெறிப்படுத்தவும், பொது சேவையை திறம்படச் செய்யவும் எங்கள் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அழகான வாழ்க்கையுடன் கூடிய பணக்கார நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய கொள்கை. நாம் ஏன் ஒரு பணக்கார நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்தப் பகுதியிலும் இந்த நாட்டிலும், ஏராளமான மக்களுக்கு போதுமான சத்தான உணவைப் பெறுவதற்கு வலுவான பொருளாதாரம் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளிக் குழந்தைகள், முன்பள்ளிக் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காத ஒரு கடுமையான சோகம் உள்ளது.

“எங்கள் அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று வளமான நாட்டை உருவாக்குவதாகும். அதற்காக, நாங்கள் 3 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அவற்றில், முக்கிய நோக்கம் வறுமையை ஒழிக்கும் பணி. அந்த நோக்கத்திற்காக, இந்த கட்டிடங்கள் முறையாக தயாரிக்கப்பட்டு, பொது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமையை ஒழிக்கும் பணியை அரசாங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. பொது ஊழியர்களாக, ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்பவும், மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நீங்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக மற்றும் முகமது பைசல், ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர்கள், பொது நிர்வாக அமைச்சின் கூடுதல் செயலாளர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர், ஆனமடுவ பிரதேச செயலாளர் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அதிரடியாக கைது!

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில் இன்று மதியம் கைது செய்யப்பட்டார்

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில், இன்று 2025.10.02 பிற்பகல் 1.32 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 127 (1) (எச்) மற்றும் (அ) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகாரியாக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதுரங்குளி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஜூட் சமந்த

3.2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மதுரங்குளிய – பத்தாயம சந்தியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளிய – ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெளிப் பகுதிகளில் இருந்து கேரள கஞ்சாவை கொண்டு வந்து அவர் வசிக்கும் கிராமங்களுக்கு விநியோகித்த ஒருவர் என்றும், புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரையும் அவரது வசம் இருந்த கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – ஆனமடுவையில் சம்பவம்!

ஜூட் சமந்த

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.

யானை தாக்குதலுக்கு உள்ளானவர் ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பாடசாலைக்கு பின்புறமுள்ள பகுதியில் இன்று 2 ஆம் தேதி அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த ஹெட்டிபதிரென்னஹெலகே நைதேஹமிகே ரம்பண்டா (வயது 66).

தனது கணவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக இறந்தவரின் மனைவி ஆனமடுவ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்குதல்களால் ஆனமடுவ பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

சியம்பலாகஸ்ஹேன மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை அண்மித்த பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கிராமங்களுக்குள் அத்துமீறும் இந்த காட்டு யானைகளை விரட்ட தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், முறையான வேலைத்திட்டம் இல்லாததால் இந்த முயற்சிகள் தோல்வியடைவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கண்ணிவெடி அபாயத்தில் வாழும் தட்டுவன்கொட்டி பகுதி மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் மக்கள் தற்போது புதிய ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் அச்ச நிலைமையை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மீண்டும் ஒருமுறை தமது பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் தமது பணியினை மீழவும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமது பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தமது பகுதியில் இருந்து எந்த ஒரு அவசர தேவை கருதி செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இன்மையால் தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து தம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகவும், தமது வாழ்வாதாரமாக கடற்தொழிலை மாத்திரமே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் இருவர் சட்ட விரோதமான முறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடி பொருளை வெட்ட முயன்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அன்றைய தினமே வெடிக்காத நிலையில் இரண்டு எரிகனைகள் இனங்காணப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது பகுதிகளில் இருப்பவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருவதாகவும், எனவே இதற்கு உரிய தீர்வினை பெற்றுத் தரும் வகையில் விரைவாக தமது பகுதியில் மீளவும் ஒரு முறை கண்ணிவெடி அகற்றும் குழுவினர் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

31 வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டு வளாகத்திற்குள் பள்ளம் தோண்டியபோது ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த விடயத்தை உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டிகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.