கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெறுபான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த கொவிட் திரிபு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் வைரஸின் புதிய திரிபுகள் அவ்வப்போது பரவுவதுடன், இது தொடர்பாக சுகாதார துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் சமீபத்தில் இறந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரியல் மாதிரியை கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நவீனக் காலத்தில் பக்காவாக திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செய்தால் அது நிச்சயம் வெற்றி அடையும். அப்படி தான் இங்குச் சீன இளைஞர் செய்த காரியத்தால் ஓவர் நைட்டில் அவர் ரூ.13,700 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சமூக வலைத்தளத்தின் ஆதிக்கமே இருக்கிறது. இதனால் எப்போது எந்த நேரத்தில் எது டிரெண்டாகும் என்பதை யாராலும் துல்லிமயாக சொல்ல முடிவதில்லை..
திடீரென டிரெண்டாவதால் ஓவர்நைட்டில் புகழின் உச்சிக்குப் போகும் பலரை நாம் பார்த்து இருக்கிறோம்.
அப்படி தான் இங்கே சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு ஜாக்பாட் அடித்துத் தூக்கி இருக்கிறது. இவர் தயாரித்த பொம்பை தாறுமாறாக ஹிட் அடித்ததே இதற்குக் காரணமாகும். இது விற்பனைக்கு வந்தபோது ஒரே நேரத்தில் பலரும் இதை வாங்கக் கடைகளில் முந்தி அடித்தனர். இதனால் பல இடங்களில் கிட்டதட்ட வன்முறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
ஒரே நாளில் ரூ.13,700 கோடி இந்த பொம்மையைக் கண்டுபிடித்ததன் மூலம் இதைத் தயாரித்து விற்கும் பாப் மார்ட் இன்டர்நேஷனலின் தலைவரும் சிஇஓவுமான வாங் நிங், ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். அதாவது ஒரே நாளில் இவரது செல்வம் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது. இப்படி ஓவர் நைட்டில் அவரை கோடீஸ்வரன் ஆக்கிய பொம்மையின் பெயர் லாபுபு பொம்மைகள்.
சீனாவின் ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் கடந்த 2015ல் தனது புத்தகம் ஒன்றில் வரைந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாபுபு பொம்மை உருவாக்கப்பட்டது. தனித்துவமான முயல் காதுகள் மற்றும் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பைக் கொண்ட இந்த பொம்மை இளசுகள் மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்தது. மக்களிடையே வரவேற்பு கேசிங் லுங் இந்த பொம்மைகளை விற்க பாப் மார்ட்டுடன் கூட்டணி அமைத்தார். அந்த பாப் மார்ட் இவரது பொம்மைகளைச் சீனாவின் மூலை முடுக்கிற்கும் எடுத்துச் சென்றது. இந்த பொம்மை குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது.
ஒரே நபரே பல கலர், பல மாடல்களில் இந்த பொம்மைகளைச் சேர்த்து வைக்கும் அளவுக்கு வை டிரெண்ட் ஆனது. பல பிரபலங்கள் கூட இந்த பொம்மையை ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்த பொம்மை அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. சீனாவுக்கு இணையாக அமெரிக்காவிலும் இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் கூட பலரும் இந்த லாபுபு பொம்மைகளை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் பணக்காரரானார். அதாவது இவரது செல்வம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது.
இப்படி ஒரே நாளில் பல கோடி சம்பாதித்தது எனச் சிலர் சொன்னாலும்.. அதன் பிறகு இவரது நீண்ட கால உழைப்பு இருக்கிறது என்பதே உண்மை. பல ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்பின் பலனாகவே இவருக்கு ஒரே நாளில் பல ஆயிரம் கோடி வருமானம் கொட்டி இருக்கிறது. அமெரிக்கா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 1.5 மாதங்கள் வர்த்தக போர் இருந்தது அனைவருக்கும் தெரியும். முதலில் டிரம்ப் வரிகளை அறிவிக்க அதற்குச் சீனாவும் பதிலடியாக வரிகளை அறிவித்தன. இப்படி இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்தன. இந்தளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே குழப்பம் இருந்தபோதிலும், இந்த லாபுபு பொம்மைகளின் விற்பனை மட்டும் குறையவே இல்லையாம். தாறுமாறாக விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 23,404 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் குறையாமல் நீடிக்குமாயின் நோயாளர்கள் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டடங்கள் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் மதஸ்தலங்களில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவும் நிலை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தை, டெங்கு நுளம்புகள் பாரியளவில் பரவக்கூடிய இடமாக மாறியுள்ளது என கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெங்கு மற்றும் சிகுன்குனியா நோய்கள் விரைவாகப் பரவி வருகின்றன.
சுற்றுப்புறச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாமல் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வௌியிடும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.
அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, கடந்த மே 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வௌியிடவுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, மறுஅறிவித்தல் வரை, குறித்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்படை மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) பாரிய சுப்பன் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டது.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளது . அங்கிருந்து பொருட்கள் பொலிஸார் மற்றும் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன.
இது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 ஆகியவை கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. இருப்பினும் ஜேஎன்.1 நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் பாதிப்பாக இப்போது உள்ளது.
கடல்சார் துறையை முன்னேற்றுவதற்காக 50,000 மாலுமிகளை உருவாக்கும் திட்டம்
50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்தும் வகையில் விசேட செயற்குழு ஒன்றின் கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவை பிரதி அமைச்சர் பணித ருவண் கொடிதுவக்கு தலைமையில் அண்மையில் (27) நடைபெற்றது.
தற்போது கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடல்சார் துறை ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர், 50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கடல்சார் துறையை முன்னேற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருப்பதுடன் அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தின் தலையீடுகளை குறைவின்றி வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதன் போது இக்குழு மற்றும் அதனுடன் தொடர்பான உப குழுக்கள் சில ஸ்தாபிக்கப்பட்டதுடன் அவற்றுக்கான அங்கத்தவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டன.
தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.