Sunday, November 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 185

அறுகம்பே நிலவரத்தை ரணில் கையாண்டது இப்படித்தான்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மல் வீதியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“அந்த தாக்குதல் பற்றிய முதல் தகவல் எங்கள் காலத்தில் வந்தது. நானும் அறுகம்பே சென்றேன். அதிக கவனம் செலுத்தவே நானாக சென்றேன். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் செய்தது அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கண்டவுடன் பொலிஸாரையும் இராணுவத்தையும் அறுகம்பேக்கு அனுப்பியது. இதைக் கண்டு ஏனைய நாடுகள் அச்சமடைந்தன. அந்த பகுதிகளுக்கு நாம் STF ஐ அனுப்பியது போதைப்பொருள் கடத்தலை தடுக்க என்று வேறுபட்ட உத்தியை கையாண்டாகும்.. அதை வைத்தே ஆபத்து குறித்த தகவல்களை சேகரித்தேன்’’ என்றார்.

ஈஸ்டர் விஷேட அறிக்கை வெளியிட்டார் மு.ஜனாதிபதி ரணில்

0

ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு..

“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.

அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.

செனல் 4வில் ஒளிபரப்பப்பட்ட வௌிப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கு மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன  ஆகியோர் அடங்கிய மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தேன்.

இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்ல.

இந்த குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் பற்றி ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாகும். 

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருந்ததா? என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பொறுப்பாகும்.

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்?

அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும்.

அந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பே  கொலைகளை செய்ததாக முதலாவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, ​​பல முரண்பாடான விடயங்கள் வெளிவருகின்றன.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுணதீவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் கணவரால் இந்த கொலைகள் இடம்பெற்றதாக இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார்.

“Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI’s explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence. “

REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12)

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்படுவதைக் காணமுடிகிறது. பலமான புலனாய்வு வலையமைப்பு நம்மிடம் இல்லை என்பது ஒரு பயங்கரமான நிலையாகும்.

ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விடயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது.

ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, சட்டமா அதிபரின் அறிக்கையுடன் புலனாய்வு பிரிவின் வீழ்ச்சி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது.

ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்திருந்தேன்.

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவின் கடுமையான வீழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை.

இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றேன்.

என்னைப் பற்றி பேராயர் கூறிய அனைத்து கருத்துக்களும் ஆதாரமற்றவை.

ஈஸ்டர் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் பேரவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈஸ்டர் அறிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பரபரப்பு தகவல்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கைகளை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு இன்று காலை 10.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக கம்மன்பில முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி இரண்டு அறிக்கைகளில் ஒன்றை இன்றும் மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தமைக்காக ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அவைகளை பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தயங்குகின்றமை தொடர்பில் நான் பேசுகின்றேன்.

முதல் அறிக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2024 ஜூன் 25 அன்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் அல்லது புலனாய்வுப் பிரிவினரால் ஏதேனும் விடுபட்டதா அல்லது தவறிழைக்கப்பட்டதா என ஆராய்வதே இரண்டாவது அறிக்கையின் நோக்கமாகும். 

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி, அதாவது தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த அறிக்கைகளை ஏன் மறைக்கின்றது?அது இந்த அறிக்கையில் உள்ளது. 

இந்த அறிக்கையின் 43வது பக்கத்தில், அரச புலனாய்வுப் பணிப்பாளரால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி, மொஹமட் சஹாரான் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள், கத்தோலிக்க தேவாலயங்கள், பிரபல உணவகங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவுள்ளதாக, வௌிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலானய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி சேனவிரத்னவே ஆவார்.

இந்த கடிதத்தில் தாக்குதலை நடத்தவுள்ள பயங்கரவாதிகளின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள், பொதுவாக செல்லும் இடங்கள், பழகுபவர்கள், சிலர் இரவோடு இரவாக செல்வது, அவர்கள் வந்து செல்லும் நேரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி சேனவிரத்ன மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது எனவும்  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கான 241/2024ஐ ஆய்வு செய்துள்ளேன் நான் ஆராய்ந்துள்ளேன்.

ஏப்ரல் 09 ஆம் திகதி இந்தக் கடிதம் வந்தபோது ரவி செனவிரத்ன வெளிநாடு சென்றிருந்தார். ரவி செனவிரத்ன பின்னர்  16ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்த போது அந்தக் கடிதத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார்.

அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது, ​​தங்கள் பணிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாகஹமுல்ல இந்தப் பணியை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்படியானால், நாகஹமுல்லவின் கைகளுக்கு ஒருவாரம் எட்டாமல் இந்தக் கடிதம் ரவி செனவிரத்னவின் மேசையில் எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்வியை அப்படியே சிரஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிக்குழாமிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இரகசியமான கடிதங்களைத் திறக்க வேண்டாம் என்றும், அவற்றை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், அவற்றை உடைக்கும் வரை அவற்றை மேசையில் வைக்குமாறு ரவி செனவிரத்ன அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது.

உள்வரும் கடிதங்களைப் பார்க்க உரிமை இல்லை என்றால், பணியைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி தனது கடமையைச் செய்ய முடியாது.

ரகசியமாக கருதப்படும் கடிதங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை.

எனவே ரவி செனவிரத்னவின் சட்ட விரோதமான ஆலோசனையால் இந்தக் கடிதம் மேசையில் உள்ளது.

அதாவது சஹாரான் குழுவினர், அப்பகுதியில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் போதும், இந்த தாக்குதலை நாங்கள் செய்கிறோம் என காணொளி பதிவு செய்யும் போதும், கொழும்புக்கு குண்டுகளை கொண்டுசென்ற அனைத்து தகவல்களும் ரவி செனவிரத்னவின் மேசையில் இருந்த கடிதத்தில் இருந்துள்ளது.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை 16ஆம் திகதி பார்வையிட்டு, மே 01ஆம் திகதிக்குள் விசாரணை நடத்தி முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு பதிவொன்று உள்ளது.

ஆனால் அது 19ஆம் திகதி சிஐடிக்கு பொறுப்பான நாகஹமுல்லவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மர்மமான முறையில் ஏப்ரல் 21-ம் திகதி வெடிகுண்டுகள் வெடிக்கும் வரை இந்தக் கடிதம் டிஐஜி நாகஹமுல்லாவுக்குச் சென்றடையவில்லை.

அதாவது ஏப்ரல் 22ஆம் திகதி வெடிகுண்டு வெடித்த மறுநாளே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடிதம்  ரவி செனவிரத்னவின் பொறுப்பில் 12 நாட்களாக இருந்துள்ளது.

19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 20 ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை மற்றும் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு.

எனவே, பெரும்பாலும், இந்த கடிதம் குண்டு வெடிக்கும் வரை ரவி சேனவிரத்னவின் மேசையில் இருந்து, வெடிகுண்டு வெடித்த பிறகு அத்தகைய கடிதத்தை அனுப்பியதாக புலனாய்வு பிரிவு கூறும்போது, ​​​​22 ஆம் திகதி காலையில் வந்து இதனை பார்த்து 16ஆம் திகதி என குறிப்பெழுதி 19ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனுப்பியதாக கூறும் போது யாருக்கும் நியாயமான சந்தேகம் எழலாம். 

இந்த கடிதத்தை உண்மையில் படித்தால் ரவி செனவிரத்ன அவர்களுக்கு சஹாரான் யார் என்பது நினைவுக்கு வரும்.

ஏனெனில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2014ஆம் ஆண்டு முதல், சஹாரானின் குழுவான தௌஹித் ஜமாத் மற்றும் அவரைப் பற்றி தேடி அவர்கள் தொடர்பான அறிக்கைகளை ரவி செனவிரத்தனவிற்கே கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், சஹாரான் தொடர்பான 13 புலனாய்வு அறிக்கைகள் 2019 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை மிகக் குறுகிய காலத்தில் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, 2017 காத்தான்குடி மத மோதல், 2018 இல் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலை, 2018 இல் மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு, 2019 இல் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது ரவி செனவிரத்னவின் மேற்பார்வையில் உள்ளது.

எனவே வெடிபொருட்களை சேகரித்து வெடிகுண்டுகளை சோதனை செய்த சஹாரான் கும்பல் தற்கொலை தாக்குதலுக்கு செல்கிறோம் என்று கூறிய போது மற்றவர்களுக்கு இது புரியவில்லை என்றாலும் இதனை நன்றாக புரிந்து கொண்ட ரவி செனவிரத்ன உடனடியாக செயற்பட்டிருக்கலாம்.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை உண்மையாகப் படித்திருந்தால், தேடுதல் நடிவடிக்கையை முன்னெடுத்து அவர்களை கைது செய்திருக்க முடியும்.

குறைந்தது ஏப்ரல் 18ம் திகதியாவது தேடுதல் நடத்தியிருந்தால் சஹாரானை கைது செய்திருக்க முடியும்.

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தாக்குதலுக்காக கொழும்பு வருவதற்கு முன்னர் குருநாகலில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு வந்துள்ளான்.

தமது மேசையில் ஒருவாரம் கிடந்த அதி இரகசியம் என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சாதாரணமாக அனுப்புவதை விட பிரதி பொலிஸ்மா அதிபரை உடனடியாக அழைத்து இது மிகவும் முக்கியமான விடயம், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கலாம்.

ஆனால் இதை ஒருவாரம் மேசையில் வைத்து, இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மே 1ம் திகதி வரை காலவகாசம் வழஙகப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது?

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தைப் படிக்காமல், அதன் தீவிரம் புரியாமல் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் 41வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ரவி செனவிரத்ன மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படியானால்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே ரவி செனவிரத்ன.

அவரது மேற்பார்வையில், தாக்குதல் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்தப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? காவல்துறையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்குமா? இது திருடனின் தாயிடம் கேட்பதை விட திருடனையே கேட்பது போல் உள்ளது.

இந்த அறிக்கை எமக்கு கிடைக்க முன்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி சேனவிரத்ன நியமிக்கப்பட்ட போது இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினோம்.

அத்துடன், அல்விஸ் அறிக்கையின் பக்கம் 14 இல், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தமது கடமைகளை சரியாகச் செய்யாதமைக்காக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்.

இந்த அறிக்கையை ஏன் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் நசுக்க முயற்சித்தார்கள்? காரணம் ஜனாதிபதியின் கையாலாகாத்தனம் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை நாம் இன்று வெளியிடவில்லை என்றால், இவர்களை வழக்கு தாக்கல் செய்யாமல் காப்பாற்ற ஜனாதிபதியால் முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று தெரிந்தும், ரவி செனவிரத்னவை அழைத்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஒப்படைத்து அவரது மேற்பார்வையில் உயிர்த்த ஞாயறு தாக்கதல் விசாரணையை நடத்த தீர்மானித்தது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கூட நம்பும் தேசிய மக்கள் சக்தியினர், அக்கட்சியின் தேசிய பட்டியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமை காப்பாற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான தகவல்களை திரித்து நாட்டையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி உள்நோக்கத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதா? என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கற்பிட்டியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

0

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் 18 வயதையுடைய இளம் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் வசிக்கும் குறித்த இளம் யுவதி வீட்டின் முன்புறத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இன்று (16) காலை அளவில் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்களின் உதவியுடன் அறிவித்ததாக தந்தை தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசிம் வரவழைக்கப்பட்டு சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கற்பிட்டி திகழி பாடசாலை ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

0

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 10.10. 2024 அன்று தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார்.

இதற்கு எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் ஊர் மக்களாலும் பொலிசாரினாலும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை.

ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்து சுதந்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும், பாடசாலை உள்விகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களின் அராஜகங்களை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று ( 16) முதல் திகழி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்

வேட்புமனுவே இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை!

0

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.

நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.

வாகன இறக்குமதி குறித்து இப்படி ஒரு ஏமாற்றமா?

0

ஒக்டோபர் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறான சுற்றறிக்கையோ அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமோ எந்தவொரு அரசாங்க நிறுவனத்தினாலும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்பதை தமது சங்கத்தினால் அறிய முடிந்தது என்றார்.

2020 ஆம் ஆண்டு வாகனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதே விலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்தாலும் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் மதிப்பு 80 வீதத்தால் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கு போன காலம்!

0

முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று முட்டைகளை விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தது. தற்போது, ​​உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன. ஆனால் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இது செயற்கையாக நடக்கிறதா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது..”

தற்போது சந்தையில் வெள்ளை நிற முட்டை ஒன்று 40-45 ரூபாவுக்கும் பழுப்பு நிற முட்டை ஒன்று 45-48 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

உபுல் தரங்கவுக்கு நேர்ந்த சோகம்!

0

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற கிரிக்கெட் போட்டித்தொடரின் போது பணத்திற்கு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தனக்கு அழுத்தும் கொடுக்கப்பட்டதாக உபுல் தரங்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணையில் உள்ள வழக்கொன்றிற்கு உபுல் தரங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெரும் அதிர்ச்சியில்!

0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.

மேலும், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டங்களிலேயே உரிய சிகிச்சைகளை அளிப்பதினால் அவர்களைக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.