Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 186

நுவரெலியாவில் ஆரம்பமான வசந்த விழா!

0

நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்னால் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது, இதில் மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நுவரெலியா மாநகர சபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும், இதில் குதிரைப் பந்தயம், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம், மலர் கண்காட்சி, பட்டம் விடும் போட்டி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாநகர ஆணையாளர் எச்.எம். பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

0

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஓய்வு பற்றி மனம் திறந்த கிங் கோலி!

0

வரும் 2027 உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்

இந்திய அணி ‘சீனியர்’ வீரர் கோலி 36. கடந்த 2024ல் உலக கோப்பை வென்ற பின், ‘டி-20’ அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 2026ல் இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இவர் பங்கேற்க மாட்டார்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், அதிக சதம் அடித்த வீரரான கோலி (51), 302 போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 2013, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது.

இதுகுறித்து கோலி கூறுகையில்,” தற்போதைக்கு ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. அடுத்த இலக்கு என்ன என்றால், அதுவும் தெரியாது. ஒருவேளை மீண்டும் உலக கோப்பை வெல்ல முயற்சி செய்வேன்,” என்றார்.

இதனால், வரும் 2027ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெறலாம். 2027ல் இந்தியா சாதித்தால், இருமுறை (2011, 2027) ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் ஆகலாம். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கோலி தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

14 ஆண்டுக்கு முன்…

கடந்த 2011, ஏப்ரல் 2ல் மும்பை, வான்கடே மைதானத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இந்தியா, இலங்கை மோதின. இலங்கையின் (274/6) இலக்கை ‘சேஸ்’ செய்தது இந்தியா. சேவக் (0), சச்சின் (18) ஏமாற்ற, காம்பிர் (97) கைகொடுத்தார். கோலி 35 ரன் எடுத்தார். யுவராஜ் (21), தோனி (91) அசத்தினர். கடைசியில் குலசேகரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, 1983க்குப் பின் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்தார். தற்போது 14 ஆண்டு ஆன போதும் இந்தியா மீண்டும் சாதிக்க முடியவில்லை.

புத்தளத்தில் சிக்கிய சட்ட விரோத பொருட்கள்!

0

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்துநேற்று முன்தினம் (மார்ச் 30) புத்தளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அந்த வீட்டில் விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ரொனால்டோ ரசிகர்களுக்கு ஹெப்பி நியூஸ்!

0

FIFA கிளப் உலகக் கோப்பை என்பது FIFA ஆல் நடத்தப்படும் வருடாந்த சர்வதேச கால்பந்து போட்டியாகும்.

இது FIFAவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளிலிருந்தும் (ஐரோப்பாவில் UEFA மற்றும் தென் அமெரிக்காவில் CONMEBOL போன்றவை) சாம்பியன் கிளப்புகளை ஒன்றிணைத்து உலகின் சிறந்த கிளப் அணியின் பட்டத்திற்காக போட்டியிடுகிறது.

அந்த வகையில் ‘கிளப்’ கால்பந்து உலக கோப்பை தொடரில் உலகப்புகழ் கிரிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான ‘பிபா’ உலக கோப்பை தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை.

இது கிரிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் (2008), ரியல் மாட்ரிட் (2014, 2016, 2017) அணிக்காக என 4 முறை கிளப் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்று கொடுத்துள்ள கிரிஸ்டியானோ ரொனால்டோ இம்முறை கிளப் உலக கோப்பை தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள், ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம்,’ என அறிவிக்க, ‘பிபா’ தயாராகி வருகிறது.

இதனால் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய, இன்டர் மிலன், ரியல் மாட்ரிட், அல் ஹிலால் (சவுதி அரேபியா) அணிகள் முயற்சி செய்து வருகின்றன. தவிர, மெஸ்சி விளையாடும் இன்டர் மயாமி அணியும், கிளப் உலக தொடருக்காக மட்டும், ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்தி வெளியாகி உள்ளன.

காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி!

0

பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் (United Nations International Children’s Emergency Fund) அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் அல்நாசர் மருத்துவமனையின் புள்ளி விவரப்படி இந்த யூனிசெப் அமைப்பின் சார்பில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. யூனிசெப் செயல் இயக்குநர் கேத்தரீன் ரூசெல் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும் ஆங்காங்கே இரு தரப்பினரும் தாக்குதலை துவக்கி உள்ளனர்.

காசா பகுதியில் கடந்த 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 609 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குழந்தைகள் ஆதரவற்று தங்க இடமின்றி தவிப்பதாகவும், பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த 18 மாதங்களில் 15 ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். 34 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து குழந்தைகள் பலி உயர்வு பெரும் கவலை அளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை, சத்துகுறைபாடு, அடிப்படை தேவை கிடைப்பதில் சிரமம் ஆகியவற்றால் இன்னும் பல குழந்தைகள் உயிரிழக்க நேரிடும். இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாயமாக்கப்பட்ட டிண் இலக்கம்!

0

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார். 

முன்னர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாகனங்களின் பதிவு மற்றும் கைமாற்றல்களுக்கு இந்த இலக்கம் கட்டாயம் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்யும் போது மாத்திரமே இந்த எண் அவசியம் என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதை நாளை (02) வரை தொடர்ந்து நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பிரதேச சபை நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன குழுக்கள் உள்ளிட்ட தரப்பினரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் 15 சதவீத வரி விதிப்பு!

0

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி  சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு வைப்புத்தொகை உரிமையாளருக்கும் செலுத்தப்பட வேண்டிய வட்டி அல்லது தள்ளுபடி செலுத்துதல்களுக்கு 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைப்பது, இன்று (01) முதல் அமலுக்கு வருவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல், இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டி, தள்ளுபடி மற்றும் இஸ்லாமிய நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருமான செலுத்துதல்களுக்கு, முகவராக செயல்படும் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனமும் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கையின்படி, வட்டி வருமானம் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரிக்கு உட்பட்டாலும், மதிப்பீட்டு வருடத்திற்கான வருமானம் 18 இலட்சம் ரூபாயை தாண்டாத நபர்கள் வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, அந்த மதிப்பீட்டு வருடத்திற்கு அனைத்து வருமான மூலங்களிலிருந்து மதிப்பிடக்கூடிய வருமானம் தொடர்பாக சுய பிரகடனத்தை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சமர்ப்பித்து, அந்த வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பையும் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறும் பலருக்கு வரி சலுகைகள் கிடைக்கும் என அரசு சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில், உள்நாட்டு வருமான சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கு 15 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதற்கு மேலதிகமாக, ஒரு சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்த பத்திரத்திற்கு தொடர்புடைய முத்திரை கட்டணமும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

1,000 ரூபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்கு இதுவரை 10 ரூபாய் முத்திரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அது 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் தத்தளித்த சீன கப்பல்!

0

தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படையினர் உதவினர்.

இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் விரைவாக கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இன்று (2025 மார்ச் 30) கொண்டு வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது.

இதன்படி, ஆபத்தான நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து கடற்படைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அடிப்படை முதலுதவிகளை வழங்கிய கடற்படையினர் இன்று (2025 மார்ச் 30) அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்தற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மேலும், இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தில் உள்ள மீனவ மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.