2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders – AHGB) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (Local Consortium of Sri Lanka – LCSL) கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% இற்கும் அதிகமானவற்றை இந்த குழுக்கள் கொண்டுள்ளன.
இந்த இணக்கப்பாடுகளுக்கமைய பிணைமுறிதாரர்கள் 11% தள்ளுபடி விகிதத்தின் அடிப்படையில் தற்போதைய கடன் பெறுமதியில் 40.3% தள்ளுபடியை வழங்க இணங்கியுள்ளனர்.
இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைய, 2024 ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு வரைவை விடவும் பெருமளவான கடன் சலுகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதோடு,புதிய நிபந்தனைகள் அடிப்படையில் வட்டிக் கொடுப்பனவிலும் குறைப்புச் செய்யப்படும்.
இலங்கை 3.3 பில்லியன் டொலர் தனியார் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி நிபந்தனைகள் தொடர்பில் சீன அபிவிருத்தி வங்கியுடன் (CDB) கொள்கை ரீதியான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது.
சீன எக்ஸிம் வங்கி, ஸ்ரீ லங்கா உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் பிணைமுறிதாரர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பலனாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ட காலப்பகுதிக்குள் இலங்கை 17 டொலர் பில்லியனுக்கும் அதிகமான கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதில் சீன எக்ஸிம் வங்கியின் 2.4 டொலர் பில்லியன்களும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் 2.9 டொலர் பில்லியன்களும், சீன அபிவிருத்தி வங்கியின் (CDB) 2.5 டொலர் பில்லியன்களும், பிணைமுறிதாரர்களின் 9.5 டொலர் பில்லியன்களும் அடங்கும்.
இந்த செயன்முறை முழுவதிலும் இலங்கையின் கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் செயலகமும் வழங்கிய தொடர்ச்சியான ஒத்திழைப்பிற்கு இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகம் மாத்திரமே திறக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
முன்னர் நிறுவப்பட்ட மற்றைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் காவல்துறையினரால் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டதோடு, ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பத்தை எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க, வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.
‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களை குறியிட்டு, தனக்கு விருப்பமான மற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை அளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனூடாக, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான இன்றைய திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கியவர் நபிகள் நாயகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாக நபிகளார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள், இரக்கத்தையும், கருணையையும் நினைவூட்டும் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாகவும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் விளங்கினார்கள்.
“கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்குச் சொன்னவர். “ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர். அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அலிசப்ரி ரஹீம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தமைக்கான தீர்வு திசைக்காட்டிக்கு வாக்களிப்பதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், சர்வதேச இரத்தினக்கல் வலயமொன்றை உருவாக்கவும், இரத்தினக்கல் தொழிலை மேம்படுத்தவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கிப் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் புரட்சியை முன்னெடுக்க எதிர்பார்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு வாக்களித்தவர்கள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பர்.
ஆனால் அவர்கள், தற்போது திசைக்காட்டிக்கு வாக்களிப்பது அதற்குத் தீர்வாக அமையாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்காக 2500 ரூபா சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு, அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, சீருடைக் கொடுப்பனவுடன், 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபா வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.
இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடைமூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும்.
• முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.
• இரண்டாம் கட்டம் : வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.
• மூன்றாவது கட்டம் : தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் (மகிழுந்துகள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட) இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும்.
விதிக்கப்பட்ட தடையைப் படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்குப் புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயல்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தற்போது அதிகளவான பழைய வாகனங்கள் எஞ்சியிருப்பதுடன், எரிபொருள் செயல்திறனின்மை காரணமாக வீதி பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
புதிய வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் ஊடாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரச வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வாகன இறக்குமதியானது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய வாகன இறக்குமதிக்கு மேலதிக சுங்க வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையும் கையெழுத்திட்டுள்ள பெரிஸ் சாசனத்தில் உள்ளடங்கிய ‘தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs)’ பூர்த்தி செய்வதற்கான தற்போதைய அர்ப்பணிப்பும், 2050 ஆம் ஆண்டுக்குள் ‘பூஜ்ஜிய உமிழ்வு நிலையை’ அடைவதற்கான தற்போதைய இலக்கும், இந்த முடிவை எடுப்பதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய வாகன இறக்குமதிக் கொள்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, Euro 4 முதல் Euro 6 வரையிலான தரநிலைக்கு மாறுவதன் மூலம் வாயு உமிழ்வுத் தரநிலைகளுக்கு இணங்குவதும் அவசியமாகும்.
இதன் மூலம் மின்சக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2029 ஆம் ஆண்டளவில், பெற்றோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வது தடைசெய்து, தற்போதுள்ள வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதும் ஊக்குவிக்கப்படும்.
இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 30,087 வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், அவற்றைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக் கொள்கைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வாகன இறக்குமதி புதிய மாதிரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதாவது உற்பத்தி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குக் குறைந்த மற்றும் விளையாட்டு சார்ந்த வாகனங்கள் (SUVs) போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குக் குறைந்த பொதுப் போக்குவரத்து மற்றும் வர்த்தக செயற்பாட்டு வாகனங்களுக்கான தடை நீக்கப்படும்.
மேலும் சிறப்புச் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பத்து ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்.
மேலும், இறக்குமதியாளர்கள் இந்த வாகனங்களை இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் மற்றும் தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் வாகன மற்றும் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்பவர்கள், வாகன ஒன்றிணைப்பார்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்துவதற்காக வருடாந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை அடைய வேண்டிய நிதி இலக்குகளுக்கு ஆதரவு வழங்கி, படிப்படியாக இறக்குமதியை மீண்டும் தொடங்குதல் மற்றும் சுங்க வரிமூலம் மேலதிக வருமானத்தை ஈட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் போட்டியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மைதானத்தில் கழிவறை வசதிகள் கூட இல்லை என போட்டியைக் காணச் சென்றவர்களும் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் குறித்த மைதானத்தில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.
2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை (020) என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக் குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில், அரச சேவையின் அனைத்து பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
அந்த நிபுணர் குழுவானது அரச துறையின் 81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது.
இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெளிவுபடுத்தும் போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும் பல தொழிற் சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சுமார் 391 தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள அரச நிதி வாய்ப்புகள் மற்றும் அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கான முன்மொழிவுகளுடன்,
ஏற்கனவே உள்ள ஊதிய கட்டமைப்புகளை திருத்துவதற்கான அளவுகோள்கள் மற்றும் தரநிலைகள் அத்துடன் அரச செலவுகளை குறைத்தல் மற்றும் வருமானம் ஈட்டும் மூலோபாயங்களை உள்ளடக்கிய கொள்கை ரீதியிலான கட்டமைப்பை இந்த இடைக்கால அறிக்கை, பரிந்துரைக்கிறது
அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் எண் 24/1609/601/097, ஆன “அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை” நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினினால் 12-08-2024 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இடைக்கால அறிக்கையை , அமைச்சரவை பரிசீலித்து கலந்துரையாடிய பின்னர், அந்த இடைக்கால அறிக்கையின் பந்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள (3.1) முதல் (3.18) வரையிலான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரம் அளித்தல் மற்றும் மேற்படி இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
• 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில்) ரூ.25,000/- மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கல்,
• அரச சேவையில் குறைந்தபட்ச ஆரம்ப மாதாந்தச் சம்பளம் 24% முதல் 50% – 60% வரையில் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் ரூ. 55,000 ஆக மாற்றி அதற்கேற்ப ஏனைய அனைத்து பதவிகளுக்குமான அடிப்படை சம்பளத்தை மாற்றியமைத்தல், வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல்,
• 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்புகளை வழங்கி அவர்களின் ஓய்வூதியங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல்,
• ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, கடமையில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50%க்கு சம்மாகும் வகையில் ஜனவரி 2025 முதல் வழங்குதல்,
• தற்போதுள்ள வரிக் கொள்கைகளுக்குள் இந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உட்பட்டு, இந்த சம்பள முறை மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01 முதல் நிதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு படிநிலையாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
• இதன்படி, மேற்படி நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை 03.09.2024 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் 01 முதல் 08 வரையான பரிந்துரைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரச சேவைகளின் வகைப்பாடு, அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் மற்றும் அக்ரஹார செலுத்தல்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குதல், அந்த பரிந்துரைகள் 2025 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.