Saturday, November 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 190

உயிரிழந்த வேட்பாளருக்கு பதிலாக வேறொருவருக்கு சந்தர்ப்பம்

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹமட் இல்யாஸுக்குப் (Mohammad Ilyas) பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.

ஹைதுருஸ் மொஹம்மட் இல்யாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டில் மாற்றம் இல்லை 

இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் வாக்குச்சீட்டில் மொஹமட் இல்யாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு பதிலாக வேறொருவருக்கு சந்தர்ப்பம் : வெளியான அறிவிப்பு | A Chance Another Candidate To Replace For Ilyas

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் (Puttalam) சேர்ந்த வைத்தியர் மொஹமட் இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை (22) உயிரிழந்தார்.

மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஜனாதிபதி ஆனது எவ்வாறு? இதோ ஓர் பார்வை!

0

அரகல போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 2022 மே 09 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார்.

பிரதமர் பதவி வெற்றிடமானால், ஜனாதிபதி அவரது அபிப்பிராயப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருக்கின்றாரோ அந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. (அரசியலமைப்பின் உறுப்புரை 43(4))

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருப்பார் என்ற அதீத நம்பிக்கையில் பிரதமர் பதவியை ஏற்கும்படி அவருக்கு பல தடவை அழைப்பு விடுக்கிறார்.

அதற்கு சஜித் பிரேமதாசவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் வழிகாட்டுதலில் பல இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்த அவகாசம் முடிவடைகின்ற நிலையில், குறித்த பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்கும்படி கோட்டாபய அழைப்பு விடுத்ததும் பிரதமர் பதவியை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

2022 மே 12 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில்.

ரணில் பிரதமரான பின்னரும் “கோட்டா கோ ஹோம்” கோஷம் உக்கிரமடைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார்.

ஒரு ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைய முன்னர் வெற்றிடமானால், அரசியலமைப்பின் படி, எஞ்சியுள்ள காலத்துக்கு பதவி வகிப்பதற்கென பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் இருந்து ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நியதி (உறுப்புரை 40(1)(a))

அவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி வெற்றிடமானதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். (உறுப்புரை 40(1)(b))

ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையான இடைப்பட்ட காலத்தில், நாட்டின் பிரதமரே பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும். (உறுப்புரை 40(1)(c))

இந்த 40(1)(c) எனும் உறுப்புரைக்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகின்றார்.

2022 ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. வங்குரோத்து அடைந்த நாட்டை பொறுப்பேற்பதற்காக புதிய ஜனாதிபதி பதவிக்கு மூவர் தைரியமாக போட்டியிட்டனர்.

1) ரணில் விக்கிரமசிங்க
2) டளஸ் அழகப்பெரும
3) அநுர குமார திசாநாயக்க

வாக்கெடுப்பு முடிவில், ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும், அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்க, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகின்றார்.

இதுதான்ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்காக நாட்டில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறை. இதுவே பின்பற்றப்படவும் வேண்டும்.

பிரதமர் பதிவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்ட அழைப்பைப் போல், அனுர குமரா திஸ்ஸநாயக்கவுக்கோ அல்லது டலஸ் அலகப்பெருமவுக்கோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் குறித்து ஹரீஸ் எம்.பி சொன்ன அந்த விடயம்

0

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு குறித்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பயணிப்பார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹரீஸ் எம்.பி மீது சரமாரியாக தாக்கிய ரவூப் ஹக்கீம்!

0

முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை கடுமையான முடிவை எடுக்கும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (19) ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசை குறிப்பிட்டே மு.கா தலைவர் இதனைப் பேசியதாக கட்சி போராளிகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேதமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததை அடுத்து, குருணாகலில் சஜித்தை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் மாதிரம் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் ஜனாதிபதியைச் சந்தித்து மு.காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

“இவர்கள் ஜனாதிபதியின் கையைப் பிடித்துக்கொண்பிருப்பதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, கட்சியின் உயர் பீடம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தேர்தல் வேலைகளில் ஈடுபடாது விட்டால், அவருக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களை கட்சித் தலைவர் ஹக்கீம் சந்தித்த போதே இவ்விடயங்களை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்காக சுமார் 860 மில்லியன் ரூபா பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார் என்ற விடயமும் பேசப்பட்டது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டில் ஜனாதிபதி!

0

‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

“நிலைபேறான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகின் தெற்கு நாடுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும், ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய தலைமைத்துவத்தில் மேற்கிற்கு இனிமேலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில், உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.

உலகின் தெற்கு நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாடு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவு குறித்து இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நோக்கு’ பிரகடனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் நெருக்கமான உறவுகளுக்கு வழி வகுக்கும் என்றும் இது இறுதியில் பல்வேறு துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையால் இலங்கை மக்கள் இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட சிரமங்களைக் குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடிந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக நன்றிகளைத் கூறினார்.

‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ தொடர்பான மூன்றாவது இணையவழி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்தத் தொடர் உச்சி மாநாடு எமது நோக்கங்கள் குறித்த புரிதல்கள் மற்றும் ஒவ்வொருக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலிசாஹிர் மௌலானாவிற்கு நேர்ந்த சோகம்!

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலி சாஹிர் மௌலானாவின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தி செயலாளர் நிசாம் காரியப்பர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2024 ஆகஸ்டு 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி தீர்மானங்களை பாரதூரமாக மீறியமை காரணமாக அவரிடம் மேலதிக விளக்கம் கோரி குறித்த செயலாளறினால் குறித்த கடிதம் அனுப்பி வைகக்கப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கட்சி உயர்பீட கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையாயினும், அதற்காக மன்னிப்புக் கோரி பின்வருமாறு செய்தி அனுப்பியிருந்தீர்கள்:

“இன்றைய கூட்டத்தில் நான் உடல் ரீதியாக கலந்து கொள்ள வில்லையாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவரும்,உயர் பீடமும் எமது கட்சியின் நிலைப்பாட்டுடன் மேற்கொள்ளும் எத்தகைய முடிவுடனும் நான் இருப்பேன். கூட்டத்தின் போதும் அதன் பின்னரும் என்னிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்பை தயவு செய்து தயவு செய்து எந்த நேரத்திலும் எனக்குத் தெரியப்படுத்தத் தயங்க வேண்டாம். கட்சியின் மீதான விசுவாசத்துடனான என் உணர்வுகளை வெளிப்படுத்துவேன். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத எனது இயலாமையும், தங்களது மன்னிப்பையும், புரிந்துணர்வையும் வேண்டி நிற்கின்றேன். எனது சலாம் உரித்தாவதாக- இப்படிக்கு, சையத் அலி சாஹிர் மௌலானா”.

இந்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாற்றமாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பது கட்சியின் தீர்மானத்தை முழுமையாக மீறும் செயலாகும் என்பதோடு, அதேபோன்று, 22 ஜூன் 2024 அன்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதித் தலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட போது உங்கள் சத்திய கடதாசியில் நீங்கள் அளித்த உறுதிமொழிக்கும் முரணாக இருக்கின்றது.

ஆகையால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உங்களது கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்துமாறு அறிவிக்கும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் என்னைப் பணித்துள்ளார் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்திற்கு உடனடியாக நீங்கள் வட்ஸ்அப் (WhatsApp)பில் கூட பதிலளிக்கலாம்.

நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் செய்தி தவறாக இருந்தால் அல்லது கட்சி தீர்மானங்களை மறுப்பதற்கான வேறு ஏதாவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய காரணம் இருந்தால் உங்களது பதிலை ஒரு கிழமைக்குள் கிடைக்குமாறு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் பதில் அல்லது பதிலளிக்காமை பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர் கூட்டம் இம்மாதத்திற்குள் நடைபெறும் என்றும் தலைவர் உங்களுக்கு அறிவிக்குமாறு பணித்துள்ளதாக குறிப்பிட்ட செயலாளர் நிசாம் காரியப்பர், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் அவசரத்தை கருத்தில் கொண்டு உங்களுக்கு இதற்கான நேர அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

0

அடுத்த 24 மணித்தியாலத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் இடம்பெறவுள்ள வானிலை மாற்றங்கள் தொடர்பில் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவின் முதல் கூட்டம் குருநாகளில்!

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம், ஒப்பந்த அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக அமையாது எனவும் மக்களுக்கான கொள்கைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

குருணாகலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் மக்களுக்காகக் கருத்துக்களை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளதுடன், ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தனிநபர் சட்ட மூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதலில் சமர்ப்பித்துள்ளது. 

மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பொருளாளர் பைசல் காசிம் மற்றும், கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தெளபீக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலிஸாஹிர் மெளலான நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்தமை மக்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை மாறவேண்டும்!

0

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் குருநாகல் நகரில் தொழில் முனைவோர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுனர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள்,
2022ம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்ட போது இனி எந்த ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக இலங்கை தலை தூக்கவே முடியாது என்று பெரும்பான்மையான சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறினார்கள். ஆனால் அந்த எதிர்வுகூறல்களை சில மாதங்களுக்குள்ளாகவே அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை உறுதியான நடை போடத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடு ஒருபோதும் சாத்தியமாகாது என்று அப்பொழுது பலரும் பேசினார்கள். ஆனால் இரண்டே ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய சாதனையாக வியந்து பேசப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்கு வழங்கிய தலைமைத்துவம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. உலகில் இலங்கையின் இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு ஈட்டிக்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சாதனையாகும் .

ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, மறுபுறத்தில் கடன் தொகை தள்ளுபடி என சர்வதேசத்திலும், ஜனநாயகம், நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கட்டியெழுப்புதல் என உள்நாட்டிலும் அவர் பாரிய சாதனைகளை ஆற்றியுள்ளார். இரண்டே வருடங்கள் அளவிலான குறுகிய காலத்துக்குள்ளான அவரது சாதனைகள் முழு உலகையும் வியக்க வைத்துள்ளது.

இதன் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையானது எந்தவொரு கட்டத்திலும், எவ்வாறான சவால்களையும் தாக்குப்பிடித்து சரித்திரத்தில் சாதனைமிகு வெற்றிகளைப் பதிவு செய்யும் வல்லமை கொண்டது என்பதை நாங்கள் வலுவான முறையில் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

அது சாதாரணமான ஒரு விடயமல்ல, மிகப்பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளது. இலங்கை இனி தெற்காசியாவின் ஒரு சாதாரண நாடு மட்டும் அல்ல, நவீன தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடு, சர்வதேச மட்டத்தில் சவால்களை எதிர்த்து வெற்றி கொண்டு தெற்காசியாவின் வரலாற்றை திருத்தி எழுதப்போகும் நாடு என்பதை உணர்த்தியுள்ளோம்.

2022 ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் நாம் பெற்றுக் கொண்டுள்ள நம்பகத்தன்மை கொண்ட வளர்ச்சியே அதன் காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, நம் நாட்டைப் பற்றிய சர்வதேச மட்டத்திலான பிம்பத்திலும் ஒரு மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பொதுவான சாதனையின் பின்னால் நாடும் பொருளாதார ரீதியாக துரிதமாக மீட்சி பெற்றது.

தற்போதைய நிலையில் இலங்கையின் ஒவ்வொரு அசைவுகளும் உலகை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் தெற்காசியாவின் தலைமைத்துவத்திற்குத் தகுதியான நாடாக, சர்வதேச மட்டத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை திகழ வேண்டும். அதற்கான தகுதியான தலைமைத்துவத்தினை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழங்க முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் வடமேல் மாகாண தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

மலையக மக்கள் பிரேமதாசவை மறக்கவே மாட்டார்கள்!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ராஜபக்சர்களுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (10.08.2024)  இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

மேற்படி கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

மலையக மக்களுக்கு 1988 இல் ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலத்தில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரே அவர்களின் வாழ்வில் சுதந்திர காற்று வீச ஆரம்பித்தது. அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

பிரேமதாசவின் இந்த நடவடிக்கையால்தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே, அதற்கான நன்றி கடனாகவும் நாம் சஜித்தை ஆதரிக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், நாட்டில் நல்லாட்சியே இடம்பெற வேண்டும், அதனை சஜித் செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கள்வர்கள் எல்லாம் இன்று அவர் பக்கமே அணிதிரண்டுள்ளனர்.

அதேவேளை, கட்சி முடிவை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தது. இதனால் ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர்.

ராஜபக்சவின் சகாக்கள் இன்று ரணிலுடன் உள்ளனர், எனவே, ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவால் விடுக்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரன், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.