Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 191

பா.உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் தனிநபர் பிரேரணை!

0

“இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பைத்துல்மால் நிதியம்’ என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறானதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

0

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேருந்து பயணக் கட்டணத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, பேருந்து பயணக் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்துடன் புதிய பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கு அமைய, 2.5 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணம் திருத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், 0.55 சதவீதத்தால் மாத்திரம் பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணமாக 27 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை பேருந்து கட்டணத்தில் 2.5 வீத குறைப்பு இடம்பெற கூடாது என்பதற்காகவா டீசலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது என்றும், அனைத்து வழிகளிலும் அரசிற்கே வருமானம் செல்வதாகவம், இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்!

0

கொப்புரு மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்.

ஆழ்கடலில் வைத்து மீன் கொம்பு குற்றியதில் ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.

அவர்கள் கடந்த (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் சிக்கிய பெரிய மீனை தூக்குவதற்கு முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்த ஒருவர் மீது கொப்புரு மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் குறித்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குற்றிவிட்டது, வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.

திரைப்பட பாணியில் வர்த்தகர் மர்ம கொலை!

0

“வீடு கட்டும் ஒப்பந்தத்தை ஒப்படைக்க  வர்த்தகரை அழைத்துச் சென்று, அவரை ஒரு கேபிளால் கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவர் வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,” என்று குருநாகல் வர்த்தகர் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் 29 வயது இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடப்பட்ட சொத்துக்களில், 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 1.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டம் மில்லாவ பகுதியில் ஜூன் 25 ஆம் திகதி அன்று வர்த்தகர் ஒருவரை கடத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை ஜீப்பில் வீசி எரித்து, 5 இலட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களை திங்கட்கிழமை (30) அன்று பொலிஸார் கைது செய்து விசாரித்துள்ளனர்.

இந்தக் குற்றத்தைச் செய்த 29 வயது முக்கிய சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட கமல் சம்பத் குருப்புவின் ஹோட்டலின் முன்னாள் ஊழியர் ஆவார், மேலும் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

விசாரணையில், தொழிலதிபரின் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இது நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இங்கு கைது செய்யப்பட்ட 29 வயது பிரதான சந்தேக நபர், 5 மாதங்களுக்கு முன்பு சம்பத் குருப்புக்குச் சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். பின்னர் அவர் வெளியேறிவிட்டாலும், தொழிலதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

கந்துபோட பிலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர், மஹாவா பகுதியைச் சேர்ந்த 19 வயது நண்பருடன் சேர்ந்து வர்த்தகரை கொலை செய்து அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.

25ஆம் திகதி காலை, 29 வயது சந்தேக நபர் தொழிலதிபரின் தொலைபேசியில் அழைத்து, ஒரு நண்பருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட விரும்புவதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஒப்பந்த வீடு கட்டும் தொழிலையும் ஒரு தொழிலாக நடத்தி வந்த சம்பத் குருப்பு, அன்று காலை தனது தலைமுடியை வெட்டி 29 வயது இளைஞரைச் சந்திக்க வந்தார்.

கந்துபோடை பகுதியில், சந்தேக நபர்கள் இருவரும் தொழிலதிபரின் ஜீப்பில் ஏறி, வெறிச்சோடிய நிலம் உள்ள ஒரு பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஜீப்பின் பின்னால் இருந்த 19 வயது இளைஞர் வர்த்தகரின் கழுத்தில் நைலான் கயிற்றைக் கட்டியுள்ளார், மேலும் முக்கிய சந்தேக நபர் அவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். 

அந்த நேரத்தில், தொழிலதிபர் “நீ என்ன செய்கிறாய்?” என்று கூச்சலிட்டுள்ளார், ஆனால் சந்தேக நபர்கள் தொழிலதிபரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

அதே நாள் பிற்பகலில், தொழிலதிபரின் உடலை ஜீப்பில் வைத்து மஹாவா பகுதிக்கு கொண்டு சென்று, அவர் அணிந்திருந்த தங்க நெக்லஸ், வளையல்கள், பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்து, அவரது உடலை வாகனத்தில் போட்டு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த மர்ம மரணம் குறித்த விசாரணைகள் வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.அஜித் ரோஹணவின் முழு மேற்பார்வையின் கீழ் தொடங்கப்பட்டன.

குருநாகல் டி.ஐ.ஜி. சரத்குமார மற்றும் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் திஸ்ஸ விதானகே ஆகியோர் மாவதகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஹெட்டியாராச்சி, குருநாகல் குற்றப்பிரிவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுமனவீர மற்றும் மகாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி குலதுங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்திய விசாரணையின் போது, இரண்டு சந்தேக நபர்களும் டோரடியாய மற்றும் மகாவ பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க வளையல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், அடகு வைக்கப்பட்ட தங்க நெக்லஸும் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலையில் பயன்படுத்தப்பட்ட நைலான் கயிற்றையும் பொலிஸாரார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பால் அதிர்ச்சி!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தைச் செலுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது. 

இதன்படி, குறித்த நிதி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்குப் புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகின் மிகப் பழமைவாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 

இதன்படி, இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் எனவும், குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக ‘குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்’ என்று தி லான்செட் கூறியுள்ளது. 

அத்துடன், அமெரிக்க நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவைக் காணும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்துள்ள ட்ரம்ப்-மாஸ்க் மோதல்!

0

அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் வரி மற்றும் செலவு மசோதாவை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த மசோதாவுக்கு தமது எதிர்ப்பை அவர் பதிவு செய்து வருகிறார்.

இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இதை எலான் மஸ்க் எதிர்த்துள்ளார். இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த அவர், வரலாற்றில் மிக பெரிய கடன் அதிகரிப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பைத்தியக்காரத்தனமான இந்த மசோதா நிறைவேறினால் புதிய கட்சியை தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார். இந் நிலையில் மஸ்கின் மிரட்டலுக்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மானியங்கள் நிறுத்தப்பட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்புவார் என்றார்.

அமெரிக்க அரசிடம் இருந்து மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா தலைமை அதிகாரி அநேகமாக தென்னாப்பிரிக்காவே திரும்புவார். நான் அதிபராக என்னை வலுவாக ஆதரித்ததற்கு முன்பே மின்சார வாகன ஆணையை கடுமையாக எதிர்த்தவன். இதை மஸ்க் நன்கு அறிவார்.

இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார்கள் உற்பத்தி இருக்காது. மின்சார கார்கள் பரவாயில்லை. ஆனால் எல்லாரும் ஒன்றாவது வைத்து இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் டிரம்ப் கூறி உள்ளார்.

தொழிலதிபரான எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். அதை குறிப்பிடும் வகையிலே தான் அவர் தென்னாப்பிரிக்கா சென்று விடுவார் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மீண்டும் பரேட் சட்டம்!

0

இன்று முதல் பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளமையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். 

இன்று முதல் இந்த தரப்பினரின் சொத்துக்கள் கடன் நிலுவையின் காரணமாக ஏலம் விடப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் குறித்த தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும். 

அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முந்தைய அரசாங்கம் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள் மற்றும் தேர்தல் நோக்கான நடவடிக்கைகள் மூலம் குறித்த தரப்பினரை ஏமாற்றியுள்ளதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், அந்த தரப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், பரேட் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு மீண்டெழும் வாய்ப்பு தரும் வகையில் தீர்வுகள் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் அட்டூழித்தனம்!

காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன.

காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் காசா நகரின் அல்-வஹ்தா வீதிகளில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் நேற்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

காசாவில் மட்டும், நேற்று 85 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்தவர்கள். காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய குடும்ப பெண்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்றைய தினம் (30.06.2025) மயில்வாகனபுரம் கொழுந்துப்பிலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய குடும்ப பெண் ஒருவரும் பொலிசாரால் குறித்த சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J. திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.