Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 199

ஹஷீஷ் போதைப்பொருள் நாட்டுக்குள்!

0

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் நேற்று (09) இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருட்களை அபுதாபிக்கு கொண்டுவந்திருந்தார். அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இளம் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேசபந்துவின் சொத்துக்கள் பறிமுதல்?

0

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். 

இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புணர்வாழ்வு வைத்தியசாலையில் தற்கொலை!

0

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கிட்டு தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

போதை பழக்கத்திற்கு உட்பட்டவர் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் (08.03.2025) தர்மபுரம் புணர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா இனம்காணப்பட்ட குறித்த நபர் கருவா கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். லக்சன் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

0

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதனை முயற்சியாக நேற்று செலுத்திய ‘ஸ்டார்ஷிப் பிளைட் டெஸ்ட் 8’ எனும் ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வெடித்துச் சிதறியது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், செயற்கைக்கோள் ஏவும் செலவை குறைக்கும் முயற்சியாக ஸ்டார்ஷிப் ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவிவிட்டு கடலில் விழாமல், மீண்டும் பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ல் இருந்து இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெஸ்ட் பிளைட் என்ற பெயரில் வரிசையாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதில் நேற்று எட்டாவது ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் புறப்பட்ட இரண்டரை நிமிடங்களில் அதில் உள்ள பூஸ்டர் எனப்படும் உந்துசக்தி சாதனம் வெற்றிகரமாக மீண்டும் ஏவுதள கோபுரத்திற்கு திரும்பியது.

இதற்கிடையில், ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்கள் முழுமையாக மேலோக்கி செல்லும் முன்பாக இயக்கத்தை நிறுத்தின.

இதனால் விண்ணில் ஏவப்பட்ட 17 நிமிடங்களில், இரண்டாம் கட்ட இன்ஜின் பழுதடைந்து ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளின் மேல் வெடித்துச் சிதறியது. இதே இடத்தில்தான் கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட, ஸ்டார்ஷிப்பின் ஏழாவது ராக்கெட் வெடித்தது.

சேவை பாதிப்பு

இதுவரை ஏவப்பட்ட எட்டு ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளில் நான்கு வெற்றியடைந்துள்ளன. நான்கு தோல்வியில் முடிவடைந்துள்ளன.

நேற்று முன்தினம் வானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பாகங்களால், மியாமி, போர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன. அதன்பின் விமானப் போக்குவரத்து சீரடைந்தது.

குழம்பிப்போயுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவறான புரிதலை சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

தவறான புரிதலுடன் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பை விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் கடந்த (04) பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மார்ச் 17 முதல் 20ம் திகதி வரை கல்முனை மாநகர சபை, மன்னார், பூநகரி, எல்பிட்டிய, தெஹியத்தகண்டி பிரதேச சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருப்பதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்பது இதன் அர்த்தமாகும்.

இந்த விடயம் சரி செய்யப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கின்ற கல்முனை மாநகர சபைக்கு தடையுத்தரவு ஒன்றுள்ளதுடன், மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையினால் நானே அவ்வழக்கில் தோன்றி, உயர் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டேன்.

அத்தடையுத்தரவு தேர்தலை நடத்துவதற்கெதிராக பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், குறித்த தடையுத்தரவு வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பானது. தற்போது வேட்புமனு இரத்தாகிவிட்டதால் அத்தடையுத்தரவு ஏற்புடையதாகாது.

தவறான புரிதலுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதனுடன் இவ்வழக்கை வாபஸ் பெறுவதற்கு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன். (கடந்த 06ம் திகதி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதே நேரம். மன்னார், தெஹியத்தகண்டி உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இருக்கின்ற வேட்பு மனுவுக்கெதிராக தடையுத்தரவும் தற்போது இரத்தாகி விட்டது.

எம்மால் வாபஸ் பெறும்பட்சத்தில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்த முடியும் எனத்தெரிவித்தார்.

குறித்த செய்தி தொடர்பான பின்னிணைப்பு

உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கு மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்பன தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கெதிராக தொடுக்கப்பட்டிருந்த இரு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (06) உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.

இவ்விரு வழக்குகளிலும் மனுதாரர்கள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உயர்நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்-திருச்சி விமான சேவை ஆரம்பம்!

0

இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையைத் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. 

மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவைகளுக்கான அதிக கேள்வியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 

இந்த விமானப் பாதை வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு பிரபலமாகிவிட்டதாகவும், தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படுவது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதானி திட்டம் இன்னும் நிறுத்தப்படவில்லையா?

0

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என வலுசக்தி கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து வினவியதற்குப் பதிலளித்த கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவிக்கையில், அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், அதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில், இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு சபைக்கு இந்திய அதானி தாய் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பாக இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், எனவே இந்த விடயத்தைப் பரிசீலிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, கடிதத்தை அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பதில் எதிர்பார்க்கப்படுவதாக கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அதனால், இந்த இரண்டு வாரங்களில் எதிர்மறையான பதில் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் ஏனைய மாற்றீடொன்றுக்கு செல்லவேண்டிவரும் என அவர் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை அரசாங்கங்களுக்கிடையில் (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டியான கொள்முதல் என்பன மூலம் மாத்திரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையில் பொறியாளர்கள் உள்ளிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடியின் போது பல பொறியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், இந்த வெற்றிடங்களை மூன்று தொகுதிகளாக நிரப்புவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் தொகுதி விரைவில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், திடீர் மின்வெட்டு குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், கட்டமைப்பில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கட்டமைப்பை நிலையற்றதாக மாற்றக்கூடும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனால், சூரிய சக்தி போன்ற ஏனைய மாற்று மூலங்களைப் பயன்படுத்தி அமைப்பை நிலையாகப் பராமரிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வீதி விளக்குகள் போதுமானளவு பராமரிப்பு செய்யப்படாமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், வீதி விளக்குகள் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களும் இலங்கை மின்சார சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. விசேடமாக, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால், உள்ளூராட்சி நிறுவனங்களும் மின்சார சபையும் இணைந்து இந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது என்று குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பான கொள்கை இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக இந்த அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

0

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 3527 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2025.03.11 நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, குறித்த பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கல்பிட்டியில் சிக்கிய 160,000 கடத்தல் சிகரெட்டுகள்!

0

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டிய கடற்படையினரால் பறிமுதல்!

கல்பிட்டி இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காகவும் கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினருக்கு கிடைத்த தகவல்களின்படி, உச்சமுனை கடற்படை முகாமின் விசேட கப்பல் படையணி குழுவொன்றை அனுப்பி இப்பனதீவிற்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் மற்றும் குறித்த கடற்கரைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இப்பனதீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அங்கு, குறித்த டிங்கி படகிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படையின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கரைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்த குறித்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகளை இவ்வாறு இப்பனதீவு கடற்கரையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும், கடற்படையினரால் மீற்க்கப்பட்ட டிங்கி படகு, சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயின் உயிரை பறித்த மகனின் கார்!

0

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கார் திடீரென நின்றுள்ளது.

இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணும் அவரது மருமகளும் காரை இயக்குவதற்காக முன் சக்கரத்திலிருந்து கல்லை அகற்றியுள்ளனர்.

இருப்பினும், வாகனம் சரிவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.

இதன்போது, இறந்த பெண் காரின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கார் முன்னோக்கி வந்த போது மருமகள் உடனடியாக விலகிய போதும், உயிரிழந்த பெண்ணால் விலக முடியாததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும், கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

beautiful women’s day flower decorative wishes greeting design