Saturday, March 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 2

ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்!

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன,.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன்’ (Milan) சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போதே இக்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உறுதிப்படுத்திய அமெரிக்க போர்க்காலச் செயலாளர் பீட் ஹெக்செத், சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்,.

சுமார் 130 மாலுமிகளுடன் பயணித்த இந்தக் கப்பல், தாக்குதலுக்கு உள்ளானதும் மார்ச் 5ஆம் திகதி அதிகாலை 5:08 மணியளவில் அபாய எச்சரிக்கையை (Distress Call) விடுத்துள்ளது,. காலி நகருக்கு மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் விரைந்து செயற்பட்டு 32 மாலுமிகளை மீட்டுள்ளனர்,. காயமடைந்த மாலுமிகள் காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 101 மாலுமிகள் மாயமாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

ஈரானின் கடும் எச்சரிக்கை:

இந்தத் தாக்குதல் ஈரானியக் கரையில் இருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில், சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்காவால் செய்யப்பட்ட ஒரு கொடூரமான செயல் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி கண்டித்துள்ளார். “அமெரிக்கா செய்த இந்தச் செயலுக்காக மிகக்கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதலால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி, பல அமெரிக்க போர்க்கப்பல்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. எனினும், அமெரிக்கக் கடற்படைச் சொத்துக்கள் எதற்கும் இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என இந்தியா மறுத்துள்ளது.

இப்பயிற்சியில் ரஷ்யா மற்றும் ஈரான் கப்பல்கள் பங்கேற்ற நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்பாமல் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் வீட்டில் கொள்ளை!

0

ஜூட் சமந்த

நாத்தாண்டிய – பஹல தப்பொவ பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டை உடைத்து, சுமார் 6,80,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான விக்கிரமசிங்க சேனநாயக்க அப்புஹாமிலாகே கித்சிறி உபுல் சேனநாயக்க (60 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மார்ச் 1ஆம் திகதி காலை 6.00 மணியளவில் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், மார்ச் 2ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இந்த இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

  • அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6,50,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள்.
  • புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய் பணம்.
  • மற்றொரு அறையிலிருந்த அலமாரியில் இருந்த 20,000 ரூபாய் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த பொலிஸார், அதன் வழியாகவே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நிகழ்ந்தது என்ன? மக்கள் பீதி;

0

ஜூட் சமந்த

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் ஒரு கோபுரத்திலிருந்து இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் பாரிய அளவில் புகை வெளியேறுவதாகப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தேசிய மின் கட்டமைப்பிற்கு நாளொன்றுக்கு 900 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் இந்த மின்நிலையத்தில் மூன்று மின்பிறப்பாக்கிகள் (Generators) இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்றாவது மின்பிறப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட கோபுரத்திலிருந்தே மார்ச் 5ஆம் திகதி அதிகாலை முதல் அடர்த்தியான வெள்ளை நிறப் புகை வெளியேறி வருகின்றது. காலையில் கடல் நோக்கி வீசிய காற்றின் திசை, நண்பகலாவதோடு தரைப்பகுதியை நோக்கி மாறியதால் இப்புகை குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது எனவும், இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல்வாதிகளும் நிபுணர்களும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர். மின்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்ட நிலையில், தற்போது இந்த சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரியைப் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தத் தொடங்கியதே இத்தகைய அசுத்தமான புகை வெளியேறக் காரணம் எனப் பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக நுரைச்சோலை மின்நிலையத்தின் பொறியியலாளர் ஒருவரிடம் வினவியபோது, ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த அசாதாரண புகை வெளியேறக்கூடும் எனத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு என்ன என்பதைக் கண்டறியும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுவது சர்ச்சைக்குரிய அந்த நிலக்கரி தானா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வென்னப்புவ பாடசாலை மாணவிகள் மூவர் வைத்தியசாலையில்!

0

ஜூட் சமந்த

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்த நீர் அருந்தியதாகக் கூறப்படும் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் 12 வயதுடைய மூன்று மாணவிகள், மேலதிக இரத்தப் பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி பாடசாலை ஆரம்பமானபோது காலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்த மூன்று மாணவிகளும், தமது வகுப்பறைக்குச் சென்று தண்ணீர் அருந்த முற்பட்டபோது அங்கு ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலில் அடையாளம் தெரியாத மாத்திரை போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கண்ட மற்றுமொரு மாணவி, வேறொரு மாணவியின் போத்தலில் இருந்த நீரை அருந்தியுள்ளார். எனினும், அந்த நீரும் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்ததை உணர்ந்த மாணவிகள், இது குறித்துத் தமது வகுப்பு ஆசிரியரிடம் உடனடியாகத் தெரிவித்துள்ளனர்.

வகுப்பு ஆசிரியர் அந்த மாணவிகளை மாரவில பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவர்களைப் பரிசோதித்த வைத்தியர், மாணவிகளுக்கு எவ்வித ஒவ்வாமை அல்லது பாதிப்பு அறிகுறிகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அன்று மாலை வீடுகளுக்குச் சென்ற மாணவிகள் இது குறித்துத் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்துப் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கும் மாணவிகளைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர்களுக்குப் பாதிப்புகள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திய போதிலும், மேலதிக விசாரணைக்காக அவர்களது இரத்த மாதிரிகளைப் பெற்றுச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாணவிகள் அருந்தியதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு (Government Analyst) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்!

0

ஜூட் சமந்த

கடலோர பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவோம் என அச்சுறுத்திய ஆறு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ – வெள்ளமங்கரையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். இச்சம்பவம் கடந்த மார்ச் 4ஆம் திகதி மாலை வென்னப்புவ – சிந்த்ராத்ரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் முகாமில் பணிபுரியும், சிந்த்ராத்ரிய மா ஓயா கடலோர பாதுகாப்பு உப பிரிவைச் சேர்ந்த இரண்டு புலனாய்வு அதிகாரிகள் கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அதிகாரிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

அச்சுறுத்தல் விடுத்தவர்களில் ஒருவரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர் வென்னப்புவ – வைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடல் மார்க்கமாக சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இது குறித்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தலைவரின் மறைவு: அரசின் மௌனம் குறித்து ஹக்கீம் கடும் விமர்சனம்!

0

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற சூழலில், ஈரானின் உச்ச தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் மெத்தனப் போக்கை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானியத் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவது மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவித்த ஹக்கீம், இலங்கைக்கு அனைத்து இக்கட்டான காலங்களிலும் உறுதுணையாக இருந்த ஈரானின் தலைவருக்கு நேர்ந்த இந்த துயரத்தை, சர்வதேச சட்ட மீறலாகக் கருதி அரசாங்கம் பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறிவிட்டது என்று மிகவும் கடுமையாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் இத்தகைய அமைதியைக் கடைபிடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்ற ஒரு சூழல் இந்தியாவிலும் நிலவுவதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து மௌனம் காப்பதாகத் தெரிவித்த ஹக்கீம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, இது ஒரு “நடுநிலைமை அல்ல, மாறாக அடிமைத்தனம்” என்று விமர்சித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக முதல்வர் உள்ளிட்ட பல இந்திய மாநில முதல்வர்கள் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூட இது குறித்து முறையான அறிக்கையை வெளியிடாதது வருத்தத்திற்குரியது எனத் தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களை மீறி ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியபோது, தாம் ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்த கருத்து வெக்கமான ஒரு செயல் என குற்றம் சாட்டினார்.

இலங்கை இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் உதவிய ஈரானுக்காக குரல் கொடுக்காமல், அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாக அரசாங்கம் அமைதி காப்பதாக அவர் விமர்சித்தார்.

“அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சலும், மனிதநேயமும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது உக்கிரமான தாக்குதல் – 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து சனிக்கிழமை தொடங்கிய தாக்குதல் இன்று ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இஸ்ரேலிய விமானப்படை கடந்த ஒரே நாளில் மட்டும் ஈரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் மீது 1,200-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு ஈரானில் உள்ள மினாப் (Minab) நகரில் ஒரு சிறுமிகள் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 180 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவி வருகிறது. இதுவரை பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என ஒன்பது நாடுகளுக்கு இந்தத் தாக்குதல்கள் பரவியுள்ளன. மேலும், சைப்ரஸில் உள்ள பிரிட்டன் ராணுவத் தளத்தின் ஓடுபாதையையும் ஈரானின் ட்ரோன் தாக்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளின் பாதிப்பு

  • இஸ்ரேல்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் பெய்ட் ஷேமேஷ் (Beit Shemesh) பகுதியில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல் அவிவ் நகரில் குறைந்தது 40 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
  • லெபனான்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 246 பேர் காயமடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ஹைஃபா அருகே உள்ள ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம்: அமீரகத்தில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு ஆசிய நாட்டவர் என இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துபாய் மற்றும் பாம் ஜுமேரா பகுதிகளிலும் கட்டிடச் சேதங்கள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 19 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை இயக்கி வருகிறது. தற்போது சுமார் 40,000 முதல் 50,000 அமெரிக்க வீரர்கள் கத்தார், பஹ்ரைன், குவைத், யுஏஇ மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தளங்கள் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.

அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து மோஜ்தபா கமேனி புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் இந்த உக்கிரமான போர் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என அஞ்சப்படுகிறது.

ஈரானில் அதிரடி திருப்பம்:புதிய உச்ச தலைவராக மோஜ்தபா கமேனி?

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெரும் அரசியல் மாற்றங்களும் ராணுவக் குழப்பங்களும் நிலவி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய உச்ச தலைவர் நியமனம்

ஈரான் சர்வதேச ஊடகங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் (IRGC) கடும் அழுத்தத்திற்கு மத்தியில், அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி அடுத்த உச்ச தலைவராக ‘நிபுணர்கள் பேரவையால்’ (Assembly of Experts) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கமாக உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு இருந்தாலும், தற்போது வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர்களால் முறையாகக் கூட முடியவில்லை. இதன் காரணமாக, சட்ட ரீதியான நடைமுறைகளைத் தவிர்த்து, இந்த நியமனத்தை விரைந்து முடிக்க புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தீவிரமாக முயன்று வருகிறது.

ராணுவக் கட்டமைப்பில் சீர்குலைவு

அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டளைத் தளபதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், களத்தில் முடிவுகளை எடுப்பதிலும், ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பயந்து, பல ராணுவ வீரர்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் தங்களின் தளங்களுக்குத் திரும்ப அஞ்சுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமதி நெஜாத் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. அவர் காயமின்றி தப்பியதாகவும், தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இஸ்ரேலியத் தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாகப் பரவிய செய்திகளுக்கு மத்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தற்போதைய நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பெரிதும் அஞ்சுகிறது. ஒருபுறம் வான்வழித் தாக்குதல்கள், மறுபுறம் உள்நாட்டுப் புரட்சி என ஈரான் அரசு தற்போது இருமுனை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்தச் சூழல் வரும் நாட்களில் ஈரானின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்பிட்டி பகுதியில் டித்வா நிவாரண கொடுப்பனவு இன்னும் இழுபறியில்!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் தளுவை. நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவில் டித்வா புயல் அனார்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் பலருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தளுவையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றது

இந்த கவனயீர்ப்பு போராட்டம் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதற்கு தலைமை தாங்கிய தளுவை விகாராதிபதி கருத்துத் தெரிவிக்கையில்;

டித்வா புயல் அனர்த்ததினால் தளுவை மற்றும் நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மட்டுமே நிவாரண கொடுப்பனவு 25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்படாமல் நீண்ட நாட்களாக அதற்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அதன் காரணமாக பதில் கடமைபுரியும் கற்பிட்டி பிரதேச உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ் என் பிரியதர்ஷினி மற்றும் புத்தளம் மாவட்ட அத்தியட்சகர் ஆகியோரிடம் இது பற்றிய முறைப்பாடு முன்வைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் அதற்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வெயிலையும் பொருட்படுத்தாது தினசரி கூலித் தொழில் செய்யும் மக்களுக்காக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முனெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக கற்பிட்டி பிரதேச பதில் உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினியிட ம் வினவியபோது;

நிவாரண கொடுப்பனவுகள் ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன் கொடுப்பனவு பெறத் தகுதியற்றவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில் தளுவை, நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் முகமாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுடன் கிராம அனர்த்த குழுவினர் இணைந்து தகுதியானவர்கள் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அக்குழுவினரின் இறுதி அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலையிலேயே கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அந்த அறிக்கையின்படி தளுவை, நிர்மல்புர கிராமத்தில் இன்னும் 30 குடும்பங்களுக்கான 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வியாழக்கிழமை (05) வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நடந்த பெரும் மோசடி அம்பலம்!

0

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கையளித்துள்ளது. 

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பணிப்புரைக்கமைய, தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்திருந்தது. 

நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாத நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால், பொதுமக்களுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். 

தரமற்ற நிலக்கரியானது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமன்றி, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டுத் திறன் குறித்தும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.