இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 ஆகியவை கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. இருப்பினும் ஜேஎன்.1 நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் பாதிப்பாக இப்போது உள்ளது.
கடல்சார் துறையை முன்னேற்றுவதற்காக 50,000 மாலுமிகளை உருவாக்கும் திட்டம்
50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்தும் வகையில் விசேட செயற்குழு ஒன்றின் கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவை பிரதி அமைச்சர் பணித ருவண் கொடிதுவக்கு தலைமையில் அண்மையில் (27) நடைபெற்றது.
தற்போது கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடல்சார் துறை ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர், 50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கடல்சார் துறையை முன்னேற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருப்பதுடன் அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தின் தலையீடுகளை குறைவின்றி வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதன் போது இக்குழு மற்றும் அதனுடன் தொடர்பான உப குழுக்கள் சில ஸ்தாபிக்கப்பட்டதுடன் அவற்றுக்கான அங்கத்தவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டன.
தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 78இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இன்று 30.05.2025 தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.
இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிலே 45 வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள்தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.
இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.
அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார். அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் 30.05.2025 இன்று இரவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெயர்கள் கிடைத்தவுடன் மறுநாள் (31) அந்த பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறினார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி தொடங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்னர், தெரிவு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, தேர்தல் ஆணைக்குழு மே 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று 21 நாட்கள் கடந்த பின்னரும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50%க்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அந்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பெயர்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இன்று நள்ளிரவிற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊக்குவிப்பு தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் 12.30 க்கு பின்னர் சகல இலங்கை வங்கிக் கிளைகளிலும் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி, பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினத்துக்குள் தங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை அடையாளப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நஜித் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம், 22 வங்கி கிளைகளுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை நகரில் வைத்து ஹல்துமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் சமூக வலைத்தளத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை இருப்பதாக தெரிவித்து விளம்பரமொன்றை பதிவிட்டு முற்பணத்தையும் வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.
சந்தேக நபர் ஹல்துமுல்ல, சமனலவெவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள நபர்களிடம் சுமார் 200,000 ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதோடு, சந்தேக நபர் செய்த ஏனைய மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இவ்வாறு முற்கூட்டிய பதிவுகள் செய்வதாக கூறி பண மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ, மலபல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி ரயில்வே துறையின் காணிகளில் வசிப்பவர்களுக்கு விரைவில் கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
கொட்டாவ மலபல்லயில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரு வீட்டுத் தொகுதியின் முன்னேற்றத்தை சரிபார்க்கும் சிறப்பு ஆய்வுப் பணியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இன்று (2025.05.28) கலந்து கொண்டார்.
தற்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான காணிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நோக்கில் கட்டப்பட்ட இந்த வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் அமையப்பெற்றுள்ளதுடன், நாவின்ன முதல் பாதுக்கை வரையிலான ரயில்வே காணிகளில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் இந்த வீட்டுத் தொகுதியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
ஏற்கனவே பெரும்பாலான நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள இந்தத் திட்டத்தை விரைவாக முடித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.