Tuesday, December 23, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 2

ஜனாதிபதியின் நிவாரணங்கள் மக்களுக்கு போய்ச் சேரவில்லை!

ஜனாதிபதியின் நிவாரணங்களை பாராட்டுகிறோம்; ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேரவில்லை.

சபையில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.

அரச உத்தியோகத்தர்கள் சிலரின் அசமந்தப்போக்குகளால் சில பிரதேசங்களில் இன்னும் நிவாரண உதவிகள் கிடைக்காதுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில். உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளையும் தங்கள் உறவுகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்துவரும் முயற்சியை பாராட்டுகிறேன். அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ள நிவாரணம் தொடர்பாகவும் நாம் அவரை பாராட்டுகிறோம். ஆனால், நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் சென்றடையாமல் இருப்பதே பிரச்சினையாக இருக்கிறது.

எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீீமின் வேண்டுகோளுக்கமைய பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களுக்கு நாங்கள் சென்று, அந்த மக்களின் நிலைமைகளை கேட்டறிந்தபோது, அந்த மக்களின் வீடுகளை துப்புரவு செய்வதற்கான கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்ற விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக அரசாங்கத்தை குறைகூவில்லை. ஒருசில கிராமங்களில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கினாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் முறையாக இயங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், நான் ஒரு கிராமத்துக்கு சென்றபோது, அங்கு அனர்த்தம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ளபோதும், எந்தவொரு அரச உத்தியோகத்தரும் அங்குவந்து பார்க்கவில்லை எனத் தெரிந்தது.

அந்த பிரதேச கிராம சேவகர் மகப்பேற்று விடுமுறையில் சென்றிருக்கிறார். அதேபோன்று கலிகமுவவுக்கு நாங்கள் சென்றபோது, அங்கு வெள்ள நீர் பல அடி உயரத்துக்கு வந்துள்ளது. அதனால் அந்த பிரதேச மக்களின் வீடுகள் முற்றாக நீரில் மூழ்கி, அவர்கள் பயன்படுத்திவந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து, குப்பைகளாக வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தன.

அந்த குப்பைகளை அகற்றுவதற்கு, அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போதுமான உபகரணங்கள் இல்லை. அதனால் அரசாங்கம் இவ்வாறான தேவைகளை செய்துகொடுத்தால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களை விரைவாக துப்புரவு செய்து முடித்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்த கடமைகளிலிருந்து விலகிய கற்பிட்டி பிரதேச உத்தியோகத்தர்கள்!

கற்பிட்டி பிரதேச கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகல அனர்த்த கடமைகளிலிருந்தும் தற்காலிக விலகல்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சகல கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சகலரும் வெள்ளிக்கிழமை (19) முதல் தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சகல கடமைகளிலும் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும், அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டலக்குடா, கண்டக்குழி, ஆலங்குடா மற்றும் நிர்மல்புர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தப்பட்டமை, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்க்கொண்டமை மற்றும் ஆலங்குடாவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு அனர்த்த முகாமைத்துவத்தின் சகல கடமைகளிலிருந்தும் தற்காலிக விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும், அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நான்கு கிராம உத்தியோகத்தர்களும் ஒரு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதை தலைக்கேறியதால் சாராய போத்தலால் தாக்கப்பட்டவர் பலி!

0

ஜூட் சமந்த

வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாரவில, மோதரவெல்ல பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ் ஜெரார்ட் நிஷாந்த பீரிஸ் (வயது 54) என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் 1990 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த நபர் நேற்று 18 ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.

மது அருந்திய பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதன் விளைவாக போத்தல் மற்றும் கதவு கைப்பிடியால் தாக்குதல் நடந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் குடும்பப் பெண் கொலை!

0

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாகாகப்பட்டு குடும்பப் பெண் கொலை: கழுத்தில் வெட்டு காயத்துடன் கணவன் மீட்பு

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இன்று அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனர்த்த நிலைமை குறித்து முன்னாயத்தம் எதுவுமே இல்லை!

0

அனர்த்த நிலைமைக்கு முன்னாயத்தம் இல்லாமை குறித்து முழுமையான ஆய்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான பிரேரணையொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

கையளிக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், இலங்கை வரலாற்றின் மிக மோசமான துயரமாகக் கருதப்படும் ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இந்தப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முழுமையான ஆய்வு செய்து அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தின் மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குலவிக்கொட்டுக்கு உள்ளாகிய தில்லையடி பகுதி மக்கள்!

0

ஜூட் சமந்த

புத்தளம், தில்லடிய பகுதியில் உள்ள அடபனாவில்லு பகுதியில் வசிக்கும் சிலர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 17 ஆம் தேதி மதியம் குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. புத்தளம், தில்லடிய பகுதியில் உள்ள அடபனாவில்லு, அல்காசிம் வீட்டுத்திட்ட வளாகத்தில் வசிக்கும் சிலர் இந்த குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவித் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை மீட்கச் சென்ற பலரும், மற்றும் வீதியில் பயணித்த ஒரு சிலரும் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளும் அடங்குவர்.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி கைது!

0

ஜூட் சமந்த

சிலாபம் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 18 ஆம் தேதி சிலாபம் காவல்துறையின் பிரதான வாயிலுக்கு முன்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கல்பிட்டியி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி, சமிக்ஞை விளக்குகள் சரியாக இயங்காத மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை குறித்த காவல்துறை சார்ஜன்ட் கைது செய்திருந்தார். அந்த நேரத்தில், சந்தேகநபரிடமிருந்து காவல்துறை சார்ஜன்ட், சட்ட நடவடிக்கை எடுக்காமல், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை திருப்பித் தர ரூ. 2200 கேட்டிருந்தார். பின்னர், சார்ஜன்ட் அந்தத் தொகையை ரூ. 3200 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

சிலாபம் காவல்துறையின் பிரதான வாயிலுக்கு முன்பாக, அவர் கோரிய பணத்தை வசூலிக்கும் போது, ​​சந்தேகநபர் காவல்துறை சார்ஜன்ட், லஞ்சம் அல்லது ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

நவீன வசதிகளுடைய உள்ளக கிரிக்கட் பயிற்சி கூடம் திறப்பு!

0

இலங்கை கிரிக்கெட்டினால் தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் (National High Performance Center) புதிய உள்ளகப் பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டது

​தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் (National High Performance Center) புதிய உள்ளகப் பயிற்சிக் கூடத்தை இலங்கை கிரிக்கெட் நேற்று (டிசம்பர் 15) திறந்து வைத்தது. இது நவீன வசதிகளுடன் கூடிய உள்ளகப் பயிற்சி விளையாட்டரங்கமாகும்.

​இந்த விளையாட்டரங்கம் சர்வதேச தரத்திற்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதுடன், அதிநவீன, ஏழு விக்கெட்டுகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் ஆடுகள வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சுக்காக இரண்டு விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சுக்காக இரண்டு விக்கெட்டுகளும், பொதுப் பயன்பாட்டிற்காக மூன்று விக்கெட்டுகளும் அடங்கும்.

​மேலும், பல்வேறு காலநிலை நிலைமைகளின் கீழ் தடையின்றி பயிற்சி அளிப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளகப் பயிற்சி வளாகம், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், ‘ஏ’ அணிகள், வளர்ந்து வரும் அணிகள், அத்துடன் 19, 17 மற்றும் 15 வயதுக்குட்பட்ட தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் வீராங்கனைகளால் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

​இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவின் அழைப்பின் பேரில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த உள்ளகப் பயிற்சிக் கூடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாடசாலைகள் பல இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை!

0

ஜூட் சமந்த

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று 16 ஆம் தேதி அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள ஹலம்பவதவான தேசியப் பாடசாலை வெள்ளம் காரணமாக கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் அதை முடிக்க முடியவில்லை.

சிலாபம் கல்வி ஊழியர் கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள், அனுராதபுரம் மற்றும் குருநாகல் அலுவலகங்களின் அதிகாரிகள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கத்தார்: வரலாற்று வேர்களிலிருந்து உலகளாவிய சக்தி வரை!

கத்தார்: வரலாற்று வேர்களிலிருந்து உலகளாவிய சக்தி வரை

2025 தேசிய தின சிறப்புப்பார்வை

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி.

கத்தார் தீபகற்பம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதக் குடியேற்றங்களைக்கொண்ட ஒரு தொன்மையான பகுதியாகும். அதன் நவீன வரலாறு முத்து வணிகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது.

18ம் நூற்றாண்டில், அல் தானி (Al Thani) வம்சத்தின் குலங்கள் ஒன்றிணைந்து, கத்தார் பகுதியை ஒரு ஒற்றை அரசியல் அமைப்பாக மாற்றின. இதுவே நவீன கத்தாருக்கான அடித்தளமாக அமைந்தது.

வரலாற்றுப்பயணமும் தேசிய தினமும்

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கத்தார் ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. பின்னர், 1916ல் பிரிட்டிஷ் பாதுகாப்புப்பகுதியாக மாறியது.

கத்தார், அண்டை நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க மறுத்து, செப்டம்பர் 3, 1971 அன்று முழுமையான இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

கத்தார் தனது தேசிய தினத்தை (National Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கொண்டாடுகிறது. இந்த நாள், 1878ம் ஆண்டில் ஷேக் ஜாசிம் பின் முகமது அல் தானி (Sheikh Jassim bin Mohammed Al Thani) ஆட்சிக்கு வந்து, நாட்டை ஒருங்கிணைத்ததை நினைவுகூரும் நாளாகும். இது நிறுவனர் தினம் (Founder’s Day) என்றும் அழைக்கப்படுகிறது.

கத்தாரின் மன்னர்களும் அதிவேக வளர்ச்சியும்

கத்தார் தனது அதிவேக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை, 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) அபரிமிதமான இருப்பைக்கொண்டே அடைந்தது. கத்தார் உலகின் மூன்றாவது பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இருப்பைக்கொண்டுள்ளது.

தற்போதைய மன்னரின் சகாப்தம்:

ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி
ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி 2013ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, கத்தாரை ஒரு உலகளாவிய சக்தியாக மாற்றும் இலக்குடன் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.

பொருளாதாரப் பல்வகைப்படுத்தல்:
எண்ணெயை மட்டுமே சார்ந்திருக்காமல், நிலையான பொருளாதார வளர்ச்சி, மனித வள மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘கத்தார் தேசிய தொலைநோக்கு 2030’ (Qatar National Vision 2030) திட்டத்தை உறுதியுடன் செயற்படுத்தினார்.

உலகளாவிய மையம்:
2022 FIFA உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது, கத்தாரின் இராஜதந்திர மற்றும் உள்கட்டமைப்புத் திறனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். தோஹா மெட்ரோ, ஹமாத் பன்னாட்டு விமான நிலையம் போன்ற அதிநவீன கட்டமைப்புகள் கட்டப்பட்டன.

சமூக சீர்திருத்தங்கள்:
பணியாளர் உரிமைகளைப்பாதுகாக்கும் நோக்குடன், வெளிநாட்டுத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்திய கஃபலா (Kafala) முறையை நீக்கியது உள்ளிட்ட முக்கியமான தொழிலாளர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார்.

எதிர்கொண்ட முக்கிய சவாலும் இராஜதந்திர வெற்றியும்

ஷேக் தமீமின் ஆட்சியில் கத்தார் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக 2017 வளைகுடா நெருக்கடியாகும். இதனை சாதுரியமாக ஷேக் தமீமின் கையாண்டார். இது கத்தாரின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

கத்தார் – இலங்கை உறவுகள்: ஆழமான தொடர்பு

இலங்கைக்கும் கத்தாருக்குமிடையேயான இராஜதந்திர உறவுகள் ஜூன் 12, 1976 இல் நிறுவப்பட்டது. இந்த உறவு ஆழமானதுடன், குறிப்பாகப் பொருளாதாரத்துறைகளில் மிகவும் வலுவாக உள்ளது.

தொழிலாளர் சக்தி:
கத்தாரில் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு கத்தார் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. அவர்களின் அந்நியச்செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய முதுகெலும்பாகவுள்ளது.

பொருளாதார உறவு:
கத்தார் இலங்கைக்கு முக்கியமாக திரவமாக்கப்பட்ட எரிவாயு (LPG) மற்றும் எரிசக்திப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இலங்கை, தேயிலை மற்றும் ஆடைப் பொருட்களைக் கத்தாருக்கு ஏற்றுமதி செய்கிறது.

எதிர்காலப்பங்காளித்துவம்:
தற்போது இந்த உறவு தொழிலாளர் மைய உறவிலிருந்து முதலீடு, சுற்றுலா மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு பரந்த பங்காளித்துவத்தை நோக்கி விரிவடைந்து வருகிறது.

ஒரு உலகளாவிய கலங்கரை விளக்கம்

கத்தார் தனது பலம் வாய்ந்த தலைமை, வரலாற்றுச் சவால்களைச் சமாளிக்கும் திறமை மற்றும் புத்திசாலித்தனமான உலகளாவிய அணுகுமுறை மூலம், உலகின் மிகச்சிறிய நாடாக இருந்தாலும், மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதன் “தேசிய தொலைநோக்கு 2030” திட்டத்தின் மூலம், நிலையான மற்றும் அறிவுசார்ந்த எதிர்காலத்தை நோக்கி அது முன்னேறிச் செல்கிறது.

அல் தானி வம்சத்தின் முற்போக்கான தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து, பொருளாதார மற்றும் இராஜதந்திரத்துறைகளில் புதிய உச்சங்களைத் தொட்டு, உலக நாடுகளுக்கு ஒரு நம்பகமான பங்காளியாகத் திகழ வாழ்த்துகிறோம்.