Home Blog Page 215

புத்/எருக்கலம்பிட்டியில் இலவச நுளம்பு வலைகள் விநியோகம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் அனுசரணையில் இயங்கிவரும், எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான இலவச நுளம்பு வலைகளே இவ்வாறு இன்று வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக சுமார் 150 நுளம்பு வலைகள் வழங்கப்பட உள்ளத்துடன், அதன் முதல்கட்டமாக புத்தளம் எருக்கலம்பிட்டி மந்தக்காடு பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்களுக்கு எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வருமானம் குறைந்த புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் எதிர்வரும் தினங்களில் வழங்கப்பட உள்ளதாக புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் M.J.M. சிராஜ் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.

உலக சாதனை படைத்த ஆறு வயது இலங்கைச் சிறுவன்!

கொழும்பு 13 புனித பெனடிக்ட் கல்லூரியின் தரம் 2 இல் கல்வி கற்கும் தினேஷ் ஹெதாவ் என்ற மாணவன் 50 மீற்றர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற போட்டியில் 49 வினாடிகளில் 50 மீற்றர் தூரத்தைக் கடந்து, அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரின், 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற முன்னைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

இத்தோடு, இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதரன் எம்.பி கொண்டுவந்துள்ள ஒத்திவைப்பு பிரேரணை!

தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல் தீர்வு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து பேசுவதற்காக பாராளுமன்றில் எதிர்வரும் 22ம் திகதி ஒத்தி வைப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முழுநாள் விவாதமாக பாராளுமன்றத்தில் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கடந்த மாதம் 23ம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும், சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நில அபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், அதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்த பாராளுமன்ற உரிப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நேற்றைய தினம் மன்னார் காற்றாலை தொடர்பான அமைச்சர் தொடர்பிலான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொதித்தெழுந்த கிளிநொச்சி வர்த்தகர்கள்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஆர். டி டி. எல்லைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களின் முட்பகுதியை பிரதேச சபையினர் நேற்றைய தினம் 07.08.2025 அகற்ற முற்பட்ட போது பெரும் அமளித்துமளி ஏற்பட்டது.

எந்தவித அறிவித்தலும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படாத நிலையில் நேற்றைய தினம் திடீரென வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகர்களால் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், முறையாக கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினருக்கு இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றப்படுவது குறித்து தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கப்பட்டிருந்தால் வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் அதற்கு அடிபணிவோம் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் விணவியபோது;

அவ்வீதியானது ஆர் டி டி எல்லைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதன் காரணமாகவும், இப்பகுதியில் உள்ள நடைபாதையில் உள்ள வியாபாரிகளை முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும் என பிரதேச சபையின் ஊடாக வர்த்தக சங்கத்தினருக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒலிபெருக்கி ஊடாகவும் இரண்டு தடவைகள் நடைபாதை வியாபார இடங்களை அகற்றுமாறு ஒலிபெருக்கி மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் நேற்றைய தினம் 07.08.2025 பிரதேச சபையினர் நடைபாதை வியாபார இடங்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொழுது அங்கு கூடிய சில வர்த்தகர்களால் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பிரதேச சபையின் ஊழியர் ஒருவரையும் தாக்கம் முட்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து பிரதேச சபையினர் வெளியேறியதுடன் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றிணையும் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொரளை துப்பாக்கி சூட்டில் மூவர் கவலைக்கிடம்!

பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

ஸ்கூட்டரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடியதாகவும், சம்பவ இடத்தில் 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

காயமடைந்தவர்களில் கொழும்பு 9 பகுதியைச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூவருக்கும் எதிர்காலத்தில் மேலதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம் என்றும், அவர்களின் உடல்நிலை குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த துப்பாக்கிச் சூடு குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் எனவும், இதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய இழப்பீடாக 1484 மில்லியன் வழங்கிய அரசு!

2024/2025 காலப்பகுதியில் நெல், சோளம், பெரிய உப்பு, மிளகாய், சோயா மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு, இழப்பீடாக இந்த ஆண்டு 1484 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிக பயிர்களை பயிரிட ஊக்குவிக்கும் நோக்கில், இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த பயிர் சேத இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், 87,690 ஏக்கர் நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், சோயா போன்றவற்றை பயிரிடும் 74,958 விவசாயிகளுக்கு இவ்வாறு ரூ.1484 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைந்தால், மேற்கண்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.100,000/- வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த விவசாய காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், மேற்கூறிய சூழ்நிலைகளில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு அரசாங்கம் எந்த அறவீடும் வசூலிக்காமல் குறித்த இழப்பீடு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய துக்க தினமாக அறிவித்தது கானா அரசு!

கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு நேற்று காலை 9.00 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முகமது உள்ளிட்ட 8 அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்த ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது நேரத்தில் அங்குள்ள வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

பல சிரமத்திற்கு மத்தியில் விபத்து நடைபெற்ற பகுதியை கண்டுபிடித்து சென்ற ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா, அதிகாரிகள் உள்பட 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, தேசிய துக்க தினமாகவும் கானா அரசு அறிவித்தது.

காஸா மீதான நேற்றைய தாக்குதலில் 135 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவும் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 135 அப்பாவி பாலஸ்தீனர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா கூறுகையில், ‘நெதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் கூறுகையில், ‘தாக்குதலை தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார். காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முதல் இரண்டாம் தவணை விடுமுறை!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், இன்று முதல் விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று நிறைவடைவதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவனை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 25 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.