Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 215

தலைமன்னாரில் சிக்கிய 46 கஞ்சா பொதிகள்!

0

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த பெருமளவான கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். 

சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது. 

தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. 

இதன் போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றினர். 

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையினால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படகின்றதுடன், இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலநடுக்கத்தினால் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

0

மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 2,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

மரத்திலிருந்த விழுந்தவனை மாடு குத்தியதா போச்சு!

ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்து தப்பிச் சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுர போலீசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து குறித்த பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதுடன், அவர்களிடமிருந்து 2.25 மில்லிகிராம் ஹெராயின், 20 கிராம் கேரளா கஞ்சா மற்றும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் 28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மியான்மர் நிலநடுக்கத்தில் 150 பேர் பலி!

0

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் 150 பேர் உயிரிழந்து உள்ளனர். தாய்லாந்தில் கட்டடங்களுக்கு மத்தியில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.

மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. குறிப்பாக, தாய்லாந்தின் பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டிட இடுபாடுகளில் 40 ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல, பல இடங்களிலும் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் 4 பலியானதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கண்டி குரங்குகளுக்கு நேர்ந்த சோகம்!

0

கண்டி மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து ஒரு தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி மாவட்டத்தில் பயிர்களுக்கு குரங்குகளால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று (27) கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. 

கண்டி மாவட்டத்தில் வாழும் யானைகளை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நடுவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் 15 கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ஏற்கனவே 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தலைமையிலான குறித்த குழுவுடன், ஏற்றுமதி விவசாய திணைக்களம், வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம், கடற்படை, விவசாயத் திணைக்களம் உள்ளிட்டவற்றைக் கொண்ட தொடர்புடைய குழு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

Click here to join our whatsApp group

கிளிநொச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.03.2025) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரால் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,

அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்த போதுமான நிதி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களை நோக்கிய நிதிப்பாய்ச்சலை மேற்கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது. மேலும் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு சதமேனும் திருப்பி அனுப்பப்படாமல் இந்த ஆண்டுக்குள்ளேயே செலவு செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக 9 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் 7 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 திட்டங்களுக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 13 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை முன்வைத்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்கியது.

பூநகரி, கரைச்சி, கண்டாவளை ஆகிய 3 பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் 2 வேறு திட்டங்களில் காற்றாலை மின்திட்டங்கள் முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் நிலைபேறு சக்தி அதிகார சபையால் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன. சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் கலந்துரையாடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்று அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

மீள்குடியேறியவர்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கான அனுமதி ஒருங்கிணைப்புக்குழுவால் வழங்கப்பட்டது. அதேவேளை, 0.6 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டுக்கு பயனாளிகள் விருப்பம் தெரிவிக்காமையால் அந்த நிதியை, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டங்களுக்கு வழங்க அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது மாவட்டச் செயலரால் தெரியப்படுத்தப்பட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதி 5 மாவட்டங்களுக்கு சமனாக பகிரப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான தெரிவுகள் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதால், தற்போது தெரிவு செய்யப்படாத வீதிகள் அதில் உள்ளடக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஆண்டு கிடைக்கப்பெறும் நிதியை உரிய காலத்துக்குள் நிறைவு செய்தால் மேலதிக நிதியைக் கோருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் குளங்களின் திருத்தத்துக்கான முன்மொழிவுகளும், விவசாய வீதி திருத்தங்களுக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்புக்குழு அதற்கு அனுமதி வழங்கியது. அதேபோன்று அனர்த்த முகாமைத்துவ பிரிவின் செயற்றிட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவியல் நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு கோரப்பட்டது.
அதன் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பிரேரணைகள் தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கல்மடுக்குளத்தை இரண்டு அடி உயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அதனை முன்னெடுப்பதற்கு வனவளத் திணைக்களத்தால் இடையூறு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதைப்போன்று வன்னேரிக்குளம், தேவன்கட்டுக்குளத்தை இணைத்து அபிவிருத்தி செய்வதன் மூலம், மேலதிகமாக 600 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை செய்ய முடியும். ஆனால் இந்த அபிவிருத்திப்பணியையும் முன்னெடுக்க வனவளத் திணைக்களம் தடையாக இருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவுசெய்யாவிட்டால், நிதி திரும்பும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு திட்டங்களையும் நிறைவேற்ற ஒருங்கிணைப்புக்குழு ஒப்புதல் வழங்கியதுடன், இது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டது. மதுபானசாலை அனுமதிகள், சட்டவிரோத மணல் அகழ்வு என்பன தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் நடைபெற்றன.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஜெ.றஜீவன், க.இளங்குமரன், இ.அர்ச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை உரம்!

0

இலங்கையில் தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை உரம் வழங்கும் தொடக்க நிகழ்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்ய கூட்டமைப்பு, யுரல்கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்ச்சி திட்டத்தில், இலங்கையின் பலன் தரும் தேங்காய் உற்பத்தி செய்யும் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தேங்காய் உரத்தை வழங்கப்பட உள்ளது.

குறித்த நிகழ்வு வெல்லவாய பிரதேச செயலகத்தின் தென்னை உற்பத்தி திணைக்கள ஹந்தபானாகள தேங்காய் நாற்றுப்பண்ணையில் நடைபெற உள்ளது.

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி!

0

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்.

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 04 முதல் 06 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!

0

தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் 1ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், உணவு தரப்படுத்தல் மற்றும் தரம் தொடர்பில் நாட்டில் காணப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துதல், நுகர்வோருக்கு சத்தான மற்றும் போசாக்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக்க உணவை வழங்குதல் குறித்த வர்த்தக சமூகத்தின் அணுகுமுறை மாற்றத்தை உருவாக்க “Clean Srilanka” திட்டத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில பண்டார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

சிக்கிய ஹஷீஷ் போதைப்பொருள்!

0

சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பாணந்துறை பாலத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்தபோது, ​​ஒரு பொலித்தீன் பையுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 870 கிராம் ஹஷீஷ் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இந்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் தெரிவிக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைதான சந்தேக நபரை தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Click here to join our whatsApp group