Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 218

மொட்டுக்கட்சி எடுத்த அதிரடி தீர்மானம்!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு இன்று (31) கூடியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விஜேராமவில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானது என்று அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அள்ளி வீசிய வாக்குறுதிகள்!

0

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.
• பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தப்படும்
.
• மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும்
.

மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டில் எங்கும் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ள போதிலும், காணி வழங்கியவர்களிற்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு மிகவும் பயனுறுதியான் திட்டமாக முழுமையாக மீளமைக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இம்முயற்சிக்கு உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு, அரச நிறுவனங்களில் சுமார் 30,000 வெற்றிடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ஏற்ப இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்த ஜனாதிபதி அவர்களை ஆட்சேர்ப்புக்கு முன்வருமாறும் ஊக்குவித்தார்.

வடமாகாணத்தில் போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதற்கான விரிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (ளுடுவுடீ) மற்றும் தனியார் போக்குவரத்துசபை இணைந்து பேரூந்து இயக்கத் திட்டத்தை ஆரம்பிப்பதும் இதில் அடங்கும். மேலும், இப்பகுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கம் அதன் அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, பிராந்தியத்திற்கான இலக்கு முன்முயற்சிகளை உறுதிசெய்து வருவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் புதிய சுற்றுலா இடங்களை அரசாங்கம் அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணத்தில் அரச துறைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் அரசியல் தலையீடுகள் இன்றி மேற்கொள்ளப்படும் என்றும், பிரதேசத்தில் அரச சேவையை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் நிலவும் கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டில் ஈடுபடும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலேயே மிகக்குறைந்த குழாய்க் குடிநீரைப் பயன்படுத்தும் பிரதேசமாக வடக்கு மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அவர், அப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மாகாணத்தில் சுத்தமான குடிநீரை மேம்படுத்தும் வகையில் புதிய நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற சவால்களை அங்கீகரித்ததோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறைகள் இரண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தனியார் வாகன இறக்குமதி குறித்த முக்கிய தகவல்!

0

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

எனினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய இதில் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளமைக்கு இணங்க Toyota corolla cross ரக வாகனத்தை வரி இல்லாமல், 55 தொடக்கம் 60 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota corolla cross ரக வாகனத்தை வரி இன்றி 60- 65 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Toyota yaris ரக வாகனத்தை 27- 30 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.Toyota yaris cross ரக வாகனத்தை வரி இல்லாமல் 55 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், Suzuki wagon R ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு, சிறப்பான நிலையில் இருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது என்றும் வாகன இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ பழைய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ ஒரே விதமான வரியே விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள குறித்த சங்கம், பாரியளவில் செலவு செய்து புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதைவிட 5 அல்லது 7 வருடங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதானது, அரசாங்கத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கத்திற்கு தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய முக்கிய அதிகாரி!

0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுவில் களைகட்டிய கால்கோள் விழா!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும் கால்கோள் விழா பாடசாலை அதிபர் SM ஹுசைமத் தலைமையில் மிகவும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.

இவ்வருடம் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் உற்சாக வரவேற்புடன் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டனர்.

தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் மேடை நிகழ்ச்சிகள் விழாவை மேலும் அலங்கரிச்செய்தன.

புதிய மாணவர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு, வரவேற்ற காட்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதிகளாக பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

சீனாவுடன் நேரடியாக மோதும் மைக்ரோசொப்ட்!

0

சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக மாறியுள்ள டீப்சீக் மீது மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகிய நிறுவனங்கள் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளன. இது AI தொழிநுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ. யில் முன்னிலை வகிக்க உலக நாடுகள் பல கடும் போட்டியில் இறங்கி வருகின்றன. ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. மேம்பாட்டு கூட்டணி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், அடுத்த சில நாட்களில் டீப்சீக் என்ற இரண்டு ஏ.ஐ. மாடல்களை குறைந்த செலவிலான சேவையாக சீனா அறிமுகம் செய்தது. டீப்சீக் ஏ.ஐ. மாடல்களின் போட்டியால், அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ. மற்றும் என்விடியா ஆகிய நிறுவனங்கள் சந்தையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில், சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக டீப்சீக் மீது மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகிய நிறுவனங்கள் டேட்டா திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வை துவக்கி உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி பிரிவு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை துவக்கி உள்ளனர். இந்த சீன நிறுவனம், அங்கீகரிக்கப்படாத டேட்டா டவுன்லோடு மற்றும் ஓபன் ஏ.ஐ.,யின் சேவை விதிமுறைகளை மீறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியதாவது: முன்னணி அமெரிக்க AI நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட சீன நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. தரவு வெளியீடு அங்கீகரிக்கப்படாத முறையில், டீப்சீக்குடன் இணைக்கப்பட்டதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக தெரிவித்த்துள்ளனர்.

அமெரிக்க அதிபரிடம் மண்டியிட்ட மெட்டா!

0

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வக்கீல், கலிபோர்னியா கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம், ‘எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை

பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்புக்கு இது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பொங்கி எழுந்த மேல் மாகாண ஆளுநர்!

0

துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர், ஆளுநர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சமீப நாட்களாக என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது, எனவே இன்று நான் CIDயிடம் சென்று இது குறித்து முறைப்பாடு அளித்தேன்.

தோற்கடிக்கப்பட்ட குழுக்கள் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது நான் அமைதியாக இருக்க முடியாது. மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ள முடியாது.”

இலங்கை கடற்படைக்கு சர்வதேச அங்கீகாரம்!

0

இலங்கை கடற்படை, ஒருங்கிணைந்த கடல் படைகளின் 154 வது பணிக்குழுவின் கட்டளையை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த 26 ஜனவரி 2025 அன்று பஹரேனில் உள்ள மனாமா கூட்டு கடல்சார் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, முன்னர் 154 ஆவது அதிரடிப்படையின் தளபதியாக இருந்த எகிப்திய கடற்படையின் கொமடோர் ஹைதம் கலீல் Haytham Khalil 154 ஆவது அதிரடிப்படையின் கட்டளையை இலங்கை கடற்படையின் கொமடோர் மஞ்சுல ஹேவா பெட்டகேவிடம் ஒப்படைத்தார்.

மேலும், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல்சார் கூட்டணியாக கருதப்படும் இந்த கூட்டு கடல் படை, கடல்சார் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கும், கடல்சார் மண்டலங்களில் எழும் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிப்பதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கும், கடலின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையைப் பாதுகாப்பதன் மூலம் உலகின் முக்கியமான சர்வதேச கப்பல் பாதைகளின் பாதுகாப்பிற்கு இது ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது.

46 நாடுகளில் இருந்து கடற்படை மற்றும் கடல்சார் உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ் அமைப்பு பஹரேன் இராச்சியத்தை தலைமையிடமாகக் கொண்டது;

பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் கடலில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பிராந்திய ஒத்துழைப்புக்கான உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாக கருதப்படும் இக் கூட்டு கடல் படையின் 39வது உறுப்பினராக 2023 நவம்பர் இல் இலங்கை இணைந்தது.

அத்தகைய கூட்டணியில் 154 வது பணிக்குழுவின் கட்டளையை இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளமையானது 74 வருட இலங்கை கடற்படையின் நீண்ட பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை மேம்படுத்தவும், அங்கத்துவ கடற்படைகளின் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக 154ஆவது பணிக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றும் வாய்ப்பினைப் பெற்றதன் மூலம் இலங்கை கடற்படை சர்வதேச ரீதியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று தாய்நாட்டிற்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளது.

154 வது பணிக்குழு மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிப்பது மட்டுமன்றி, கடல்சார் பாதுகாப்பு பயிற்சியை மற்ற கூட்டு கடல் படை பங்குதாரர்களுக்கு வழங்குவதும், கடல்சார் விழிப்புணர்வு, கடல்சார் சட்டம், கடல்சார் கைதுகள், கடல்சார் மீட்பு, உதவி மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றிலும் பங்களிப்பு செய்கிறது.

கனடா, எகிப்து, ஜோர்டான், சீஷெல்ஸ், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சி ஊழியர்கள், அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இந்த பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர்.

வைஸ் அட்மிரல் ஜோர்ஜ் எம். விக்கொஃப், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தளபதி, அமெரிக்க கடற்படை வைஸ் அட்மிரல் ஜோர்ஜ் எம். விக்கொஃப், பஹ்ரைனில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியான திருமதி மதுகா சில்வா மற்றும் உறுப்பு நாடுகள் மற்றும் கடற்படைகள் 154 வது பணிக்குழுவின் கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த கடல் படைகள் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் தொழில்புரிபவர்கள் குறித்த அறிவித்தல்!

0

இஸ்ரேல் நாட்டில் தொழில் புரிபவர்களை வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி தொழில் வாய்ப்பிற்காக பொருத்தமானவர்களை மட்டும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் விவசாயத் துறையிலான தொழில் வாய்ப்புக்கள் பாரிய அளவில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள போதும், அதற்கு பொருத்தமற்ற நபர்கள் கடந்த காலங்களில் அரசியல் வாதிகளால் அனுப்பப்பட்டதனால் அது பாதிக்கப்பட்டதுடன் பணத்திற்கு அடிமையாகி, நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய பல மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை அவர்கள் இழந்துவிட்டதாகவும், இஸ்ரேல் விவசாயத் துறையின் வேலை வாய்ப்பிற்காக செல்லும் நபர்களுக்காக பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே தலைவர் இதனை குறிப்பிட்டார்.

இஸ்ரேலினால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயத் துறை வேலைவாய்ப்புகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் செல்லும் 14 பேர் கொண்ட முதல் குழுவினர் இதில் உள்ளடங்குவர்.

அரசியல் செல்வாக்குகள் இன்றி பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என தலைவர் இதன்போது வலியுறுத்தினார். கடந்த காலங்களில் விவசாயத் துறையின் தொழில் வாய்ப்புக்காக சென்ற 80 வீதமானவர்கள் தொழில் செய்யும் இடங்களில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், அவர்கள் தகைமை அடிப்படையில் அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக சென்றவர்கள் என்பதனால் தான் பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 5000 பேரளவில் விவசாயத்துறை தொழில் வாய்ப்புக்காக எதிர்பார்த்துள்ளதாகவும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதாயின், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களை விட்டு செல்லாதிருத்தல், போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களாக இருத்தல் வேண்டும் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தொழில் தேடுபவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் இஸ்ரேல் விவசாய தொழில் வாய்ப்புகளை சரியாக முகாமைத்துவம் செய்வதாகவும், அதன்படி ஒரு வருடத்திற்கு சுமார் 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெளிவு படுத்தினார்.

தகைமை இன்றி சென்ற நபர்கள் விவசாய நிலங்களில் தமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய முடியாமையினால் பணியிடங்களை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் தொழில் புரிவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால் வேலை ஒப்பந்தத்தை மீறுவதுடன் அது சட்ட விரோதமானது என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்