Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 218

பரிதாபமாக உயிரிழந்த 16 வயது இளைஞன்!

0

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று (22) சில ஏக்கர் வயல் நிலங்களை உழுதுவிட்டு பின்னர் உழவு இயந்திரத்தில் நண்பர் உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அவர், தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்!

0

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். 

குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மேலும் கூறியுள்ளார். 

“பல்வேறு காலங்களில் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், தந்தையர், மகன்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நமது நாட்டின் அரச சொத்து, அரச வளங்கள் மற்றும் அரச நிதியை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்தியுள்ளனர்.” 

மேலும் அவர்கள் அவற்றைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். சட்டவிரோதமாகவோ அல்லது முறையற்றதாகவோ கையகப்படுத்திய எவருடைய சொத்தையும், சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு உதவும் புதிய சட்ட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது. 

“நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.” என்றார்.

கட்டாரில் இடம்பெற்ற பிரம்மாண்ட இப்தார் நிகழ்வு!

கட்டாரில் வாழும் மன்னார் எருக்கலம்பிட்டி வாழ் உறவுகளுக்கான இப்தார் நிகழ்வு நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தொழில் நிமித்தம் கட்டார் நாட்டில் உள்ள அனைத்து எருக்கலம்பிட்டி உறவுகளையும் ஒன்றிணைத்து கட்டார் முன்தசா பகுதியில் மாபெரும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

கட்டார் நாட்டில் வாழக்கூடிய அனைத்து எருக்கலம்பிட்டி உறவுகளின் நிதி பங்களிப்புடன் சுமார் 130 பேருக்கான இப்தார் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 120 யிற்கும் அதிகளவான எருக்கலம்பிட்டி உறவுகள் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.

கிளிநொச்சியில் சிக்கிய ஐஸ் போதைப்பொருள்!

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5.75 கிராம் ஹெறோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்!

0

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

தெஹிவளை பகுதியில் நேற்று (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி, பெளஸி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய செயலியை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணைக்குழு!

0

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, 

“பொதுமக்களிடம் முறைப்பாடுகள் இருந்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டை அளித்த நபரும் தங்கள் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியலாம். இந்த செயலி மூலம் வீடியோ மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளது.” என்றார்.

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பம்!

0

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. 

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ”ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அவற்றிலிருந்து ஒரு இடம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே தேர்வு செய்யப்பட்டு கப்பல் பயணிகள் இறங்குதளம் அமைய உள்ளது. 

இந்திய ரூபா 6.43 கோடி மதிப்பில் அமைய உள்ள இந்த இறங்குதளம் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது. 

இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி ராமேஸ்வரம்  ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும். 

இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

62 வங்கிகளைக் கொள்ளையடித்த ஜே.வி.பி!

0

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். 

பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். 

மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். 

இதன் போது வங்கிகளிலிருந்து பணத்தையும் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.

ஓய்வூதியத்தை அதிரடியாக நீக்கிய ஜனாதிபதி!

0

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சில விடயங்களை நாங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது. நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று.

இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரியவந்தது. அதனால், பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

வடக்கு கடற்பிரதேசங்களில் விஷேட சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தலைமையிலான விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்த நிலையில், விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன. இவற்றிற்கு எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்