Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 237

இன்றைய திடீர் காலநிலை மாற்றம்!

0

2025  ஜனவரி 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2025 ஜனவரி 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அறிமுகமாகிறது புதிய அப், அச்சத்தில் வாகன ஓட்டுனர்கள்!

0

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி இன்று (01)  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-servicesக்குள் பிரவேசிப்பதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி செயலியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இலகுவாகப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயலியில் உள்ள Camera option icon அல்லது Vedio option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் பிற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த கணக்கு மூலம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை விசாரணை செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்புவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு குறித்த முக்கிய அப்டேட்!

0
  • வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 தினங்கள் இடம்பெறும்
  • 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09ஆம் திகதி

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

திடீரென மாறிய வானிலை மாற்றம்.வெளியாகிய அறிவிப்பு!

0

2025 ஜனவரி 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

கிழக்கு மற்றும் ஊவா  மாகாணங்களிலும் மாத்தளை நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா  மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை செய்யக்கூடும்

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மகானங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

0

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது. அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.

கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம். அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி,புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.

தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 01 ஆம் திகதி

2024இல் உலகில் இடம்பெற்ற தேர்தல்களும், முடிவுகளும்!

0

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, உலக அரசியலுக்கு பெரும் தீனியிட்டது எனலாம்.

இந்தாண்டில், உலகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கானோர் (உலக மக்கள்தொகையில் 49%) வாக்களித்தனர். முக்கிய தலைவர்கள், எதிர்பாராத அரசியல் திருப்புமுனைகள், அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்பு, திவால் நிலை என பலவாறான விளையாட்டுகளை இந்தாண்டின் அரசியல் மேடை கண்டுவிட்டது.

2024-ல் உலகளவில் ஈர்ப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்ற சில நாடுகளின் தேர்தல்களைப் பற்றி…

இந்தியா

இந்தியாவில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனதா கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில்தான் குருதியில்லா போர் (அரசியல்) நடைபெற்றது. இந்தியாவில் ஆட்சியமைக்க மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை. கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியுடன் சேர்த்தே பாஜக 292 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும், பிற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. இன்னும் 40 தொகுதிகள் இருந்தால் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்கலாம்.

இந்த நிலையில்தான், பாஜக ஆட்சியமைப்பதற்கு உதவும் வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசக் கட்சியின் ஆதரவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது. இதனையடுத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி பதவியேற்றார்.

அமெரிக்கா

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் மூலம் உலகப் பொருளாதாரம், சில நாடுகளுக்கிடையேயான மோதல் முதலானவற்றில் மாற்றம் ஏற்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதால், அதிகளவிலான தாக்கத்தை அமெரிக்க அதிபர் தேர்தல் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில்தான் இருமுனைப் போட்டி நடந்தது.

தேர்தலில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 (51%) தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 (47.5%) தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளைப் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

கூடுதலாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் பல ருசிகர சம்பவங்களும் நடந்தன. தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும்தான் தேர்தலில் போட்டியிட இருந்தனர். ஆனால், ஜூன் மாதம் தொலைக்காட்சியொன்றில், பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையிலான நேரடி விவாதத்தில் சரிவர விவாதிக்க முடியாமல் பைடன் தடுமாறியது, அவருடைய கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருடைய உடல்நிலையிலும் சின்னப் பிரச்னை வர, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோ பைடன், வருகிற அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸை எதிர்த்து டிரம்ப் தேர்தல் பிரசாரம் நடத்தினார்.

இந்தத் தேர்தலில் உலக பணக்காரரான எலான் மஸ்க்கும்கூட முக்கியப் பங்கு வகித்தார். அவர்தான், டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து சுமார் ரூ. 630 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கினார். இதனையடுத்து, அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க்குக்கு டிரம்ப் வழங்கியுள்ளார் (கைம்மாறு என்றும்கூட வைத்துக் கொள்ளலாம்). இதுதவிர, தேர்தல் நேரத்தில் டிரம்ப் மீது மூன்று முறை கொலை முயற்சிகளும் நிகழ்த்தப்பட்டன. கூடுதலாக, தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் – காஸா பிரச்னை முடிவுறும் என்றும் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்

நுணலும் தன் வாயால் கெடும் என்பதை ரிஷி சுனக் நிரூபித்து விட்டதாக, சில மாதங்களுக்கு முன்னர் சில விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில், பிரிட்டனில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியின் பதவிக்காலம் அடுத்தாண்டு வரையில் இருந்த நிலையில், இந்தாண்டே தேர்தலை நடத்தலாம் என்று ரிஷி சுனக் அறிவித்தார். ஆனால், தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியுற்றது, அவருக்கு சொல்லொணா ஏமாற்றத்தை அளித்தது எனலாம். ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையிலான தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியால் வெறும் 121 இடங்களில் மட்டுமே பெற முடிந்ததால், ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழந்தார்.

தொழிலாளர் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராகத் தொழிலாளர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றார்.

ரஷியா

ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் வெற்றி பெற்றதற்கு அடக்குமுறையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் 2 ஆண்டுகளாக (இன்று வரையிலும்) போர் நடந்தும் வரும் நிலையிலும், ரஷியாவில் மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதினை எதிர்த்து போட்டியிடுபவர்கள் வலுவான எதிர்க்கட்சிகளாக இல்லாததால், அதிபர் தேர்தல் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதுபோல அமைந்தது. அதன்படி, ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் 88 சதவிகித வாக்குகளுடன் வெற்றியும் பெற்றார்.

ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற அதிபர் புதின், ரஷிய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தத் தலைவரும் இல்லாத வகையில், நீண்டகாலம் உச்ச பதவியில் இருந்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மெக்சிகோ

மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், இந்தாண்டில்தான் பெண் ஒருவர் அதிபராகியுள்ளார். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில் ஜூன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மொரேனா கட்சி (இடதுசாரி) வேட்பாளரான 62 வயதான கிளாடியா ஷேன்பாம் வெற்றி பெற்றதும் வரலாற்றில் இடம்பெறக் கூடியதே.

இவர்தான், மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் அதிபரான முதல் பெண் மற்றும் முதல் யூதர். 60 சதவிகித வாக்குகளைப் பெற்று அதிபரான கிளாடியா, 2007-ஆம் ஆண்டு ’அமைதிக்கான நோபல் பரிசை’ வென்ற பெருமைக்குரியவர்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே கட்சி, இந்த முறை விரும்பத்தகாத வகையில் வெற்றி பெற்றதும் தென்னாப்பிரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி வீழ்ச்சிக்கு பிறகு, 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சிதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால், 2007 ஆம் ஆண்டு முதல், அக்கட்சியின் மீதான தாக்கம் குறைந்து வந்தது. ஊழல், மின் பற்றாக்குறை, சமத்துவமின்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மை (60% இளைஞர்கள் வேலையின்றி திண்டாட்டம்), வன்முறைகளின் உச்சம் (ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் கொல்லப்படுவதாக புள்ளிவிவரம்) முதலான காரணங்களால்தான், அந்தக் கட்சியின் மீது மக்களுக்கான நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்பான்மையை இழந்தாலும், 40 முதல் 50 சதவிகிதம்வரை வாக்குகளைப் பெற்று, ஆப்பிரிக்க தேசிய கட்சி வெற்றியைத் தட்டியதால், சிரில் ராமபோசா பிரதமரானார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே முன்னாள் பிரதமரைச் சிறையில் அடைத்த சம்பவமும் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி நிலவியது.

பாகிஸ்தானில் 265 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற 133 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெறும். இருப்பினும், தேர்தலில் இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தாலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனையடுத்து, நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, தீவிர பேச்சுவார்த்தைக்குப்பின் கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷரீப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமராக இருந்தபோது, கிடைத்த பரிசுப் பொருள்களை விற்றது குறித்து அரசுக்கு முறையாக தெரியப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் இம்ரான் கானும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம்

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இந்தாண்டில்தான், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரான்ஸ், ஜொ்மனி, கிரேக்கம் உள்பட 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த நாடுகளின் அரசுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் குறித்து கலந்துரையாடுதல் உள்ளிட்டவை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முதன்மையான பணிகளாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல் மூலம், அந்த நாடாளுமன்றத்துக்குத் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தோ்வு செய்கின்றனா். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 720 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். இந்த உறுப்பினா்கள் தங்கள் குடிமக்களின் நலன்களை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவா்; தேர்தலில் வாக்களிக்க சுமார் 373 மில்லியன் மக்கள் தகுதி பெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் வான் டெர் லேயனின் ஐரோப்பிய மக்கள் கட்சி அதிக இடங்களைப் பெற்றது. தொடர்ந்து அடையாளம் மற்றும் ஜனநாயகக் கட்சி, ஐரோப்பிய பழைமைவாத மற்றும் சீர்திருத்தவாதக் கட்சி, அரசியலில் சேராத அணிசாராக் கட்சிகளும் வெற்றி பெற்றன.

இலங்கை

இலங்கையில் கரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது; தொடர்ந்து, உள்நாட்டுப் போரும் வெடித்தது. ஒட்டுமொத்த கோபமும் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசின் மீது திரும்பியது. இதனையடுத்து, பெரியளவிலான மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த இலங்கை மக்கள், பழைய அரசியல்வாதிகளைத் தூக்கியெறிய வேண்டுமென நினைத்தார்கள்.

இந்த நிலையில்தான், நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவையென்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 140க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்ற அநுரகுமார திசாநாயக, இந்த முறை 140 இடங்களைப் பெற்றது, வரலாற்றில் இடம்பெறக் கூடியதே. 

தென் கொரியா

தென் கொரியாவில் சமீபத்தில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் கூறியதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இந்த அறிவிப்புக்கு அவரது கட்சியினரே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், சில மணி நேரங்களிலேயே ராணுவ ஆட்சி அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வட கொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகத்தான், ராணுவ ஆட்சி அமல்படுத்தியதாக அதிபர் யூன் கூறினார். இதனையடுத்து, அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், யூன் பதவி விலகினார்.

இதற்கு முன்னதாகவே, தென் கொரியாவில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 300 தொகுதிகளில் அப்போதைய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கூட்டணி 189 இடங்களை வென்றது; ஆளுங்கட்சியான மக்கள் சக்தி கட்சி 111 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதனையடுத்து, பிரதமர் ஹான் டாங் மற்றும் அதிபரின் மூத்த செயலர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இருப்பினும், 200 இடங்களைப் பெற்றால்தான், அதிபரை பதவிநீக்கம் செய்ய முடியும்.

அந்த வகையில், அந்த வாய்ப்பை ஜனநாயகக் கட்சி இழந்தது. இருந்தபோதிலும், மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு அதிபர் யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளித்துக் கொண்டு, பயனற்ற தலைவனாக மட்டுமே இருக்க நேரிடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

கனடா

கனடாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான், ட்ரூடோ ஆட்சியில் நீடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணி கட்சி ஒன்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தேர்தல் நடைபெற்றாலும் ஆளும் லிபரல் கட்சி படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறுகின்றனர்.

கனடாவில் குடிபெயர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜா கடந்தாண்டு ஜூன் மாதத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலை காரணமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அந்நாட்டில் உள்ள பலரும் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவராக ஹர்தீப் சிங் நிஜ்ஜா அறிவிக்கப்பட்டிருந்ததால், அவரது படுகொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்

நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தால் அது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், அதை பொருள்படுத்தாத ஸெலென்ஸ்கி நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தார். நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போருக்காக, இதுவரையில் ரஷியா 20,000 கோடி டாலா் (ரூ.16,97,814 கோடி) செலவு செய்துள்ளது என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த போரில், இதுவரை சுமார் 7,00,000 ரஷிய வீரா்களும், சுமார் 43,000 உக்ரைன் வீரா்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், அவர் நாட்டைவிட்டு தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் ராணுவமே இடைக்கால அரசுப் பொறுப்பை ஏற்று நடத்தியது. தற்போது, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியில் உள்ளார்.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன; நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனா்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்ததில் 98 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2025-ல் தேர்தல்கள் ஒருவேளை குறைந்தாலும்கூட பல்வேறு நாடுகளில் நடைபெறும் பதற்றங்கள் குறையாது என்பதாகத்தான் தோன்றுகிறது!

ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 71 பேர் பரிதாப பலி!

0

எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில், 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எத்தியோப்பியா நாட்டின் கிராமப் பகுதிகளில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பஸ்களை வாடகைக்கு எடுத்து செல்வதற்கு, பதிலாக லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். லாரியில் பயணம் செய்தால், செலவு குறைவு என்பதால், மக்கள், இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு தெற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிடாமா மாநிலத்தில் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில், 71 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆற்றுப் பாலத்தில் டிரைவர் லாரியை அதிவேகமாக இயக்கியது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி

0

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான APK லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று ​எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம் என்று அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து செயலிக்கான லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் அபாயமுள்ளது என்று இந்திய பொலிஸ் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை சைபர் குற்றவாளிகள் அரங்கேற்றியிருக்கும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வட்ஸ்அப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

எனவே வட்ஸ்அப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை பிடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அச்சகத் திணைக்கள இணையம் மீது சைபர் தாக்குதல்!

0

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பா.உ வைத்தியர் அர்ச்சுனா கூறியது உண்மையே!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மாவட்ட  நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு அவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் சொல்லப்பட்ட விடயங்கள் மற்றும் கடந்த 09 ஆம் திகதி  இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக  அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எதிராளியான பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்தார். 

அந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.