சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் ஊடாக இரண்டு போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் முறைப்பாடளித்துள்ளாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கூறுகையில், நேற்றிரவு விருந்தகம் ஒன்றில் தாமும் தமது பிரத்தியேக செயலாளரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இருவர் தம்முடன் முரண்பட்டதாகத் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது என தாம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த இருவரும் தம்முடன் முரண்பட்டதாகவும் அதனை காணொளியாக பதிவுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் தம்மைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பாதுகாப்புக்காகத் தாமும் அவர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு நெற்றிப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்தநிலையில், இரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% வரிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“குறிப்பாக, மறைமுக வரிகளைக் குறைப்பது காலப்போக்கில் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இந்த வருடத்திற்குள் வரி குறைப்பை எதிர்பார்க்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின்படி,15.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரியை நாம் வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த செயல்முறையிலிருந்து நாம் மீண்டு, வருவாய் வசூலின் செயல்திறன் அதிகரிக்கும் போது, அந்த மானியங்களை அந்தத் தொழில்களின் தயாரிப்புகளுக்குத் திருப்பித் தரும் சாத்தியம் உள்ளது. அதற்கு அப்பால் சென்றால், விசேடமாக வங்கித் துறை மற்றும் தொழில்களின் தொழிநுட்ப முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை வழங்க புதிய அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது. எனவே 17 ஆம் திகதி பட்ஜெட்டில் இதையெல்லாம் நாம் காணலாம். பட்ஜெட் ஊடாக, குறிப்பாக தொழில்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தொழில்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.”
கைத்தொழில்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் போது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதாகவும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள் வேண்டும் என்பதால், உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் என கோட்டா அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மக்காவில் ஹஜ் பயணமாக வரும் பக்தர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது இதுவரை புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் வாழும் மக்களுக்கு நுசுக் தளம் வழியாக விண்ணப்பிக்கும் பணியம் தொடங்கபட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை அறிந்துகொண்டு, ஒருவர் தான் மற்றும் தன்னுடன் வருபவர்களுக்கான பதிவுகளை செய்ய வேண்டும்.
உள்நாட்டு யாத்ரீகர்கள் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்தலாம். முன்பதிவு செய்த 72 மணி நேரத்துக்குள் 20 சதவீத வைப்புத் தொகையும், ரமலான் மாதம் மற்றும் ஷவ்வால் மாதத்தில் இரண்டு சமமான தொகையை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறுகிறது.
தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக, முன்கூட்டிய பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் பாதிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நீண்டகால கர்ப்பம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
பெண்களின் கர்ப்பக் காலம், 36 வாரங்கள் முதல் 40 வாரங்கள்வரையில் இருக்கும். காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் முதலான தீவிர காலநிலை மாற்றத்தால் பெண்களின் கர்ப்பக் காலம் நீள்வதுடன், பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு செயற்கையாக பிரசவ வலியைத் தூண்டும் நிலையும் ஏற்படலாம்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 12 சதவிகிதப் பிறப்புகள் நீண்டகால கர்ப்பத்தில் தோன்றியது கண்டறியப்பட்டது. குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், முதல்முறை கருத்தரிக்கும் பெண்கள், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், கர்ப்பமடைவதில் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
காற்றின் தர ஒழுங்குமுறைகள், பொது சுகாதார முன்முயற்சிகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான சுகாதார அபாயங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கவுதமாலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பது கவுதமாலா என்ற நாடு. இங்குள்ள எல் ரான்ச்சோ என்ற கிராமத்தில் இருந்து 75 பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சான்அகஸ்டின் அகாசகுவாஸ்லான் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது.
பெலிஸ் என்ற பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 51 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்புப்படையினர் உதவியுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் பெர்னார்டோ அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகளில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட உத்தரவிட்ட அவர், 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர் குழு முன் வந்துள்ளது. இதனை நிராகரித்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென், ‘எக்ஸ்’ நிறுவனத்தை நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்து உள்ளார்.
உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதில் பலவித மாற்றங்களை செய்துள்ள அவர், அதன் பெயரையும் ‘எக்ஸ்’ என மாற்றி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு சாட்ஜிபிடியை வடிவமைத்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்திற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருந்தார்.
ஆரம்ப கட்டத்தில் ஓபன் ஏ.ஐ.,நிறுவனம் லாபமற்ற நோக்கம் கொண்ட நிறுவனமாக இருந்தது. பிறகு லாபத்தை நோக்கி மாற்றுவதற்கான முயற்சிகளில் அதன் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென் ஈடுபட்டார். இதனால், அதிருப்தியடைந்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தார். வழக்கும் தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரும், சில முதலீட்டாளர் குழுவும் சேர்ந்த அந்த நிறுவனத்தை 9.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கும் திட்டத்தை, சாம் ஆல்ட்மெனிடம் வழங்கி உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஆனால், இதனை நிராகரித்துள்ள சாம் ஆல்ட்மென், ” வேண்டாம் நன்றி. ஆனால், நீங்கள் விரும்பினால், ‘எக்ஸ்’ தளத்தை 9.74 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறேன்,” என பதிவிட்டு உள்ளார்.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவு இனங்காணப்பட்டுள்ளது.
அதன்படி, 7,456 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரி குழுவை நியமிக்கக் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அந்தந்த அமைச்சுகள், அந்த அமைச்சின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் வெற்றிடமாகவுள்ள பதவிகளைக் குழுவிற்குப் பரிந்துரைத்துள்ளன.
அதன்படி, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குழுவால் முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையின் அதிகாரிகளின் பட்டியலைப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவு வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதனைக்குப்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மனதுங்க உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து சதகதுல் ஜாரியா நிரந்தர நன்மையான உதவியொன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் இன்று (10.02.2025) அடையாளப்படுத்தப்படாத பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியே குறித்த பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
1000 லீட்டர் தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும் என அடையாளப்படுத்தப்படாத குறித்த பரோபகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது வாழ்நாள் முழுதும் தண்ணீர் தாங்கியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்புவதற்கான முழுப் பொறுப்பையும் குறித்த பரோபகாரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தாம் யார் என்பதை வெளிப்படுத்தாமல் குறித்த தண்ணீர் தாங்கியை பாடசாலைக்கு இரகசியமாக வழங்கியுள்ளதாக பாடசாலை அதிபர் திரு S.M. ஹுஸைமத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மேலும் இப்படியாப்பட்ட ஒரு முன்னுதாரணமான உதவியை செய்த குறித்த பரோபகாரிக்கு பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.