அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவு இனங்காணப்பட்டுள்ளது.
அதன்படி, 7,456 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரி குழுவை நியமிக்கக் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அந்தந்த அமைச்சுகள், அந்த அமைச்சின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் வெற்றிடமாகவுள்ள பதவிகளைக் குழுவிற்குப் பரிந்துரைத்துள்ளன.
அதன்படி, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குழுவால் முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையின் அதிகாரிகளின் பட்டியலைப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவு வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதனைக்குப்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மனதுங்க உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து சதகதுல் ஜாரியா நிரந்தர நன்மையான உதவியொன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் இன்று (10.02.2025) அடையாளப்படுத்தப்படாத பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியே குறித்த பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
1000 லீட்டர் தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும் என அடையாளப்படுத்தப்படாத குறித்த பரோபகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது வாழ்நாள் முழுதும் தண்ணீர் தாங்கியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்புவதற்கான முழுப் பொறுப்பையும் குறித்த பரோபகாரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தாம் யார் என்பதை வெளிப்படுத்தாமல் குறித்த தண்ணீர் தாங்கியை பாடசாலைக்கு இரகசியமாக வழங்கியுள்ளதாக பாடசாலை அதிபர் திரு S.M. ஹுஸைமத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மேலும் இப்படியாப்பட்ட ஒரு முன்னுதாரணமான உதவியை செய்த குறித்த பரோபகாரிக்கு பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மெதவச்சி ஊழல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மெதவச்சி, இகிரிகொல்லேவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபரொருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு, குறித்த நபரின் உடமையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த சுமார் மூன்று கிராம் (03) மற்றும் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Methamphetamine) சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அன்றைய தினம் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் செட்டிகுளம் மற்றும் மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மெதவச்சி நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கு, அந்த நபரிடம் விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நானூறு (400) போலி சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 30 வயதுடைய மெதவச்சி, இகிரிகொல்லேவ மற்றும் கரப்பிக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிகரெட்டுகடகளுடன் மெதவச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்துக்கான களவிஜயத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரகலய போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியல் தங்களது இல்லங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.
அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான இழப்புகளுக்காக 25 இலட்சம் ரூபாவினையே உயர்ந்த பட்ச இழப்பீடாக வழங்க முடியும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 முதல் 10 இலட்சம் ரூபாய் வரையிலே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் தாக்குதலுக்கு உள்ளான வீடுகளுக்கு அதிகபட்சமாக 16 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
எனினும், கெஹெலிய ரம்புக்வெல்ல 900 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளார். அந்த நிதியில் கிளிநொச்சியில் ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்திருக்க முடியும்.
Click here to join our whatsApp group
இத்தகைய சேதங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதுடன் இந்த இழப்பீடுகள் முற்று முழுதாக கையூட்டலாகவே வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Booking.com வலைத்தளத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முதலிடத்தில் உள்ளது.
360 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Booking.com என்ற வலைத்தளம், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்படும் சேவையைப் பாராட்டி, உலகின் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்றாக சீகிரியா பெயரிடப்பட்டுள்ளது.
Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு ஒரு தொகை விருந்தினர் இருக்கைகள் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினரால் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினரின் பூரண அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான 10 விருந்தினர் இருக்கைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையில் நீண்ட கால தேவையாக இருந்துவந்த விருந்தினர் இருக்கைகள், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து குறித்த கதிரைகள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது இனவாதக் கருத்தல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது. மக்களின் காணி அவர்களுக்கே உரியது. ஆனால் இன்று அது மறுக்கப்படுவதாக தெரிகின்றது.
நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல.
அதனால் குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
ஆனாலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல முரணான கருத்துக்கள் கூறப்பட்டு திசை திருப்பும் முயற்சியொன்று உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் காட்டப்பட்டது.
அதேநேரம் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டும் இருக்கின்றது.
அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிக்கப்படுவது அவசியம்.
அத்தோடு விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர்.
அந்த வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு எமது ஆதரவை நாம் வழங்கவுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்கா, வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் நீடித்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இணையதளம் வாயிலாக ஷேக் ஹசீனா தன் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 5ம் தேதி இரவு உரையாற்றினார். அப்போது, இடைக்கால அரசுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அன்றிரவு முதல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
டாக்காவில் உள்ள வங்கதேச நிறுவனரும், முன்னாள் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீடு முன் குவிந்த ஆயிரக்கணக்கான மாணவர் அமைப்பினர், அவரின் பூர்வீக வீட்டை சூறையாடி எரித்தனர்; புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கினர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நீடித்தன. டாக்காவின் பனானியில் உள்ள அவாமி லீக் ஆட்சிக் குழு உறுப்பினர் ஷேக் சலீம் வீட்டிற்கு சென்ற போராட்டக்காரர்கள், அவரது வீட்டை தீ வைத்து எரித்தனர்.
நோகாலியின் கம்பனிகஞ்ச் பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலர் ஒபைதுல் குவாடரின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அருகில் இருந்த அவரது சகோதரர் அப்துல் மிர்சாவின் இரண்டு மாடி கட்டடமும் சூறையாடப்பட்டது. அங்கிருந்த முன்னாள் மேயர் ஷஹாதத் மிர்சாவின் வீடும் இந்த சம்பவத்தின் போது தீக்கிரையானது.
ராஜ்ஷாஹி மாவட்டம் சக்சிங்கா மொஹாலியில் இருந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ்ரியார் ஆலமின் மூன்று மாடி கட்டடத்துக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
பாகா, சார்காட், பாப்னா உட்பட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்த அவாமி லீக் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. தீ எரிப்பு சம்பவங்களின் போது, அந்தந்த வீடுகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
குமிலா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற சுவரில் வரையப்பட்டிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சுவரோவியம் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
நரசிங்கடியில் இருந்த அவாமி லீக் கட்சி அலுவலகமும் இடித்து தள்ளப்பட்டது.
பாகர்ஹாட்டில், முக்திஜோத்தா வளாகம், நகராட்சி பூங்கா, ஷாஹீத் மினார், மோங்லா பரிஷத் வளாகம், மோங்லா குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் முஜிபுர் ரஹ்மானின் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “பாசிசத்தின் அடையாளமாக திகழும் ஷேக் ஹசீனா தொடர்பான எந்த விஷயத்தையும் தடயமின்றி தகர்ப்பதே எங்கள் நோக்கம்,” என, தெரிவித்தனர்.