Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 251

இந்த வாகனங்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்படுமா!

0

304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.

இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடைமூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. 

எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, 304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும். 

• முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

• இரண்டாம் கட்டம் : வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

• மூன்றாவது கட்டம் : தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் (மகிழுந்துகள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட) இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

விதிக்கப்பட்ட தடையைப் படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்குப் புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயல்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தற்போது அதிகளவான பழைய வாகனங்கள் எஞ்சியிருப்பதுடன், எரிபொருள் செயல்திறனின்மை காரணமாக வீதி பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. 

புதிய வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் ஊடாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரச வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் வாகன இறக்குமதியானது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய வாகன இறக்குமதிக்கு மேலதிக சுங்க வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையும் கையெழுத்திட்டுள்ள பெரிஸ் சாசனத்தில் உள்ளடங்கிய ‘தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs)’ பூர்த்தி செய்வதற்கான தற்போதைய அர்ப்பணிப்பும், 2050 ஆம் ஆண்டுக்குள் ‘பூஜ்ஜிய உமிழ்வு நிலையை’ அடைவதற்கான தற்போதைய இலக்கும், இந்த முடிவை எடுப்பதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

புதிய வாகன இறக்குமதிக் கொள்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, Euro 4 முதல் Euro 6 வரையிலான தரநிலைக்கு மாறுவதன் மூலம் வாயு உமிழ்வுத் தரநிலைகளுக்கு இணங்குவதும் அவசியமாகும். 

இதன் மூலம் மின்சக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

2029 ஆம் ஆண்டளவில், பெற்றோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வது தடைசெய்து, தற்போதுள்ள வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதும் ஊக்குவிக்கப்படும். 

இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 30,087 வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், அவற்றைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக் கொள்கைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. 

இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வாகன இறக்குமதி புதிய மாதிரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதாவது உற்பத்தி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குக் குறைந்த மற்றும் விளையாட்டு சார்ந்த வாகனங்கள் (SUVs) போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குக் குறைந்த பொதுப் போக்குவரத்து மற்றும் வர்த்தக செயற்பாட்டு வாகனங்களுக்கான தடை நீக்கப்படும். 

மேலும் சிறப்புச் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பத்து ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்.

மேலும், இறக்குமதியாளர்கள் இந்த வாகனங்களை இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் மற்றும் தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படும். 

மேலும் வாகன மற்றும் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்பவர்கள், வாகன ஒன்றிணைப்பார்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்துவதற்காக வருடாந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை அடைய வேண்டிய நிதி இலக்குகளுக்கு ஆதரவு வழங்கி, படிப்படியாக இறக்குமதியை மீண்டும் தொடங்குதல் மற்றும் சுங்க வரிமூலம் மேலதிக வருமானத்தை ஈட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உலக சாதனை!

0

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் போட்டியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த மைதானத்தில் கழிவறை வசதிகள் கூட இல்லை என போட்டியைக் காணச் சென்றவர்களும் தெரிவித்துள்ளனர். 

2017 ஆம் ஆண்டு முதல் குறித்த மைதானத்தில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பொய்யா?

0

2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. 

2024 மே மாதம் 27   திகதியிட்ட  எண் 24/பல்வகை (020)  என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக் குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில்  உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில்,  அரச சேவையின் அனைத்து பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம்  மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

அந்த நிபுணர் குழுவானது அரச துறையின்  81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. 

இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெளிவுபடுத்தும் போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும் பல தொழிற் சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும்  சுமார் 391 தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள அரச நிதி வாய்ப்புகள் மற்றும் அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கான முன்மொழிவுகளுடன்,  

ஏற்கனவே உள்ள ஊதிய கட்டமைப்புகளை திருத்துவதற்கான அளவுகோள்கள் மற்றும் தரநிலைகள் அத்துடன்  அரச செலவுகளை குறைத்தல் மற்றும் வருமானம் ஈட்டும் மூலோபாயங்களை உள்ளடக்கிய கொள்கை ரீதியிலான கட்டமைப்பை இந்த இடைக்கால அறிக்கை, பரிந்துரைக்கிறது

அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் எண் 24/1609/601/097,  ஆன  “அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை”     நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை  அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினினால்   12-08-2024 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையை , அமைச்சரவை  பரிசீலித்து கலந்துரையாடிய பின்னர், அந்த இடைக்கால அறிக்கையின் பந்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள (3.1) முதல் (3.18) வரையிலான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை  ரீதியிலான அங்கீகாரம் அளித்தல் மற்றும்  மேற்படி இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை  2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   

•    2025 ஆம் ஆண்டை  அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில்) ரூ.25,000/- மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கல், 

•    அரச சேவையில் குறைந்தபட்ச ஆரம்ப மாதாந்தச் சம்பளம்   24% முதல் 50% – 60% வரையில்   அதிகரிப்பதோடு  வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன்   மொத்த சம்பளம் ரூ. 55,000 ஆக மாற்றி  அதற்கேற்ப ஏனைய அனைத்து பதவிகளுக்குமான அடிப்படை சம்பளத்தை மாற்றியமைத்தல், வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல்,

•    2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்புகளை வழங்கி அவர்களின்  ஓய்வூதியங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல், 

•    ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, கடமையில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50%க்கு சம்மாகும் வகையில்  ஜனவரி 2025 முதல்   வழங்குதல்,  

•    தற்போதுள்ள வரிக் கொள்கைகளுக்குள் இந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உட்பட்டு, இந்த சம்பள முறை மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01  முதல்  நிதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு படிநிலையாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

•    இதன்படி, மேற்படி நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை 03.09.2024 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் 01 முதல் 08 வரையான பரிந்துரைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரச சேவைகளின் வகைப்பாடு, அரச  ஊழியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் மற்றும் அக்ரஹார செலுத்தல்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குதல், அந்த பரிந்துரைகள் 2025 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

0

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12)  இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 இராஜாங்க அமைச்சர்கள் அதிரடி நீக்கம்!

0

5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார்.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பளப்பிரச்சினை தீர்ந்தது – ரணிலுக்கு நன்றி

0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று  முதல் கட்டாயமாக 1,350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக  பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று முதல் 1,350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறிதரன் எம்.பி

0

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி  கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டார கிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது. 

இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது தவறு.  நாளைய தினம் குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் எடுத்திருக்கிறார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தேசிய விருதுகள்!

0

உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.

இருநூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதை வென்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.

இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர்  வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா விருதுகளை பெற்றுக்கொண்டார்.

தயாசிறியின் கருத்துக்கு நீதிமன்றம் தடை!

0

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சமீபத்தில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் கருத்து வௌியிட்ட தயாசிறி ஜயசேகரவின் உரையை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதவான் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் அவதூறான கருத்தை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்களால் தமது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதற்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதன்படி, இது தொடர்பான காணொளிகளை தயாசிறி ஜயசேகரவின் முகநூல், ஐக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அது 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.