Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 252

ரணிலுடன் கை கோர்த்த செய்னூலாப்தீன் எஹியா

0

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துகொண்டார்.

நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், புத்தளம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஜனாதிபதியின் சிறப்பான எதிர்கால திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கவும், புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனது இணைவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் இன்று கலந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்த இவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளமை புத்தளம் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் MKM ஆதீர், புத்தளம் நகர சபை வேட்பாளர் NMM முயீன், மக்கள் விடுதலை முன்னனியின் மதுரங்குளி தொகுதி வேட்பாளர் H சஸ்மீர் ஆகியோர் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதோடு எமது நாட்டின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கு முழு மூச்சாய் செயற்படப் போவதாக இன்று கொழும்பில் கட்சி ஆதவாளர்களுடன் இணைந்து கொண்டதுடன் குறித்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நிமல் லான்சா அவர்களுடனான சந்திப்போன்றும் நீர்கொழும்பு Gold Dee Sans Hotel வளாகத்தில் பிரத்தியேக இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா, வடமேல் மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம் அமீன், கல்பிட்டி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஷாம்மில் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ரணிலின் மடியில் கொடுங்கோலன் சகாக்கள்!

0

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “ஒரு இனத்தின் சார்பாகவே, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக இறுமாப்புப் பேசிய கோட்டாபய ராஜபக்ஷவின் சகாக்களைத் தோற்கடிக்க இத்தேர்தலைப் பயன்படுத்துங்கள்.

அன்புக்குரிய தாய்மார்களே, இளைஞர்களே, தந்தையர்களே மத குருமார்களே! சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த மாவட்டம் புத்தளம். எம்மிடையே வேறுபாடுகளைத் தோற்றுவிக்க ஒரு கொடுங்கோலன் ஆட்சிபீடம் ஏறினான். நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய அவரை மக்கள் விரட்டியடித்தனர். இவரது சகாக்களோ ரணிலின் மடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

உணர்ச்சிவசப்பட்டு தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள். சீனா, வியட்நாம் நாடுகளில் நடப்பதை எண்ணிப்பாருங்கள். மதக்கடமைகளைச் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த காலத்தில், ஒருசில இளைஞர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானதால், பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை மறக்க முடியாது.

எந்த அனுபவமுமில்லாத தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால், கோட்டாவின் யுகமே மீண்டும் ஏற்படும். இந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள 28 பேரும் ஒரே இனத்தைச் சேர்ந்தோர்களே. இவர்களது மேலாதிக்க மனோபாவத்தைப் புரிந்துகொள்ள இதுவே போதும்.

ஆனால், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணண், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் எமது கட்சி எல்லாம் சஜித் பிரேமதாசவையை ஆதரிக்கின்றன.

கொழும்பிலுள்ள குப்பைகளை மட்டுமல்ல, இந்த ஆட்சி நீடித்தால் சிங்கப்பூரிலுள்ள குப்பைகளையும் இங்கேதான் கொட்டுவர்.

தபால்மூல வாக்களிப்பு வெற்றியை முன்னறிவிப்புச் செய்யும். எனவே, எமது வெற்றிக்கு வழிகாட்ட படித்த மக்கள் தாபால்மூல வாக்கைப் பயன்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டார்.

புத்தளத்தில் பொங்கி எழுந்த சஜித்!

0

ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்துள்ளது. 

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக எமது அரசாங்கத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அவர்கள் கொள்ளையிட்ட நாட்டின் சொத்துக்கள், தேசிய வளங்கள் மற்றும் நிதியங்கள் என்பவற்றை மீளப்பெற்று அதனூடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். 

நிபந்தனைகளை விதித்து, பிரதமர் பதவியும், ஜனாதிபதி பதவியும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் அதனைப் பொறுப்பேற்கவில்லை. 

தற்போது நாம் ஆட்சியைப் பொறுப்பேற்காமைக்கான காரணம் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும். 

கொள்ளையர்களுடனும் மோசடிக்காரர்களுடனும் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. 

அதேநேரம் எமது கல்வி வேலைத்திட்டம் தொடர்பில் எமக்கு எதிரான 2 குழுக்களும் ஒன்றிணைந்து பல விமர்சனங்களை முன்வைக்கின்றன. 

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் செல்வந்தர்களின் நிதியுதவியுடன் நாட்டிலுள்ள 10,096 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய முடியாதென அவர்கள் கூறுகின்றனர். 

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கல்விக் கொள்கையின் போது அவர்கள் எமது செயற்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் ரணில் இணைவு? அம்பலாமாகிய உண்மை!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் இணையப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் இன்று (03) தெரிவித்தார். 

நாங்கள் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக ஒரு தரப்பு கூறிவருகிறது. 

பதவிகளைத் தருவதாக எம்மிடம் பல தடவைகள் ஜனாதிபதி கூறியிருந்த போதிலும், நாட்டை நாசமாக்கியவர்களுடன் அவர் இணைந்துள்ளதால் நாம் அவற்றை நிராகரித்தோம். 

ஏனைய வேட்பாளர்களை விடவும் சஜித் பிரேமதாச இன்று முன்னணியில் உள்ளமையினால், ஜனாதிபதியுடன் இணைய வேண்டிய தேவை தங்களது தரப்புக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

0

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன் பல கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடிய பொது மக்கள், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்த மாவை!

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார். இதன்போது கட்சியின் நிலைப்பாடு, இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என, இன்று வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்பகா மாவட்ட முஸ்லிம்களுடன் விஷேட சந்திப்பு

0

கம்பகா மாவட்ட முஸ்லிம் மக்களுடனான விசேட சந்திப்பு நகர அபிவிருத்தி மற்றும் வீடு வசதிகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று 30.08.2024 மிணுவன்கொட காஞ்சனா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இன முறுகல் நிலை குறித்து கவலை வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சகல இன மக்களுக்கிடையில் நல்லுறவையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரமே நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தன்னிறைவான நாடக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்புவதாக தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக ஆலோசகர் ஆஷு மாரசிங்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளான முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தில் ஆய்வு

0

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றக் கட்டமைப்பும் வகிபாகமும், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற விவாதங்களின் முறைமை, பாராளுமன்றக் குழுக்களின் பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தல் என்பன தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேடமாக, தெற்காசியாவின் சூழலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஏனைய சர்வதேச உடன்படிக்கைகளை அடைவதில் இலங்கை பாராளுமன்றம் கவனம் செலுத்தும் விதம் குறித்தும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  குமார் லோபஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுப் பயணத்தில் குவைட் இராஜ்ஜியம், எகிப்து, அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான நிலையத்தினால் (ICFJ) இந்த ஆய்வுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

இலங்கையில் பட்டங்கள் மூலம் மின்சாரம்!

0

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும். 

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. 

எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது. 

இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். 

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீட்டருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம்  1,800 டெராவொட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

0

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதம் 25,000 ரூபாய்

*குறைந்தபட்ச ஊதியம் 24% உயர்வு
* கற்கை நெறிகளுக்கு சம்பளத்துடன் விடுறை
* புதிய வீடுகள்
* வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி
*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்தல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மகா சங்கத்தினர் முன்னிலையில் “ஐந்தாண்டு பணி இயலும் சிறிலங்கா” என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

https://www.ranil2024.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி இந்த விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

அரச சேவை

2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் 24% ஆகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் 55,000 ரூபாவாகவும்  ஏனைய அனைத்து பதவிகளுக்கான அடிப்படைச் சம்பளமும் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*40 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேவைத் திறனை மேம்படுத்த உதவும் கற்கை நெறிகளுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை.

* பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

* ஒரு மேம்பட்ட திறன் அடிப்படையிலான உயர் முறை.

* அரசு ஊழியர்களுக்கு மடிக்கணினிகள், டேப்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் பொதுச் சேவையை திறமையான மற்றும் சீரான நிலைக்கு உயர்த்துதல்.

*அரசின் புதிய வீட்டுத் திட்டத்தில் வீட்டு உரிமை இல்லாத அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

* அனர்த்த கடன் தொகையை அதிகரிக்கவும், சொத்து மற்றும் வீட்டுக் கடன்களை மீண்டும் வழங்கவும் செயற்படுவோம்.

* வீட்டிலிருந்து செய்யக்கூடிய சேவைகளை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்கப்படுகிறது.

*குறிப்பிட்ட மற்றும் முறையான இடமாற்றத்தை அறிமுகம் செய்தல்.

*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்த்தல்

சிரேஸ்ட பிரஜைகள்

* நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய சிரேஸ்ட பிரஜைகள் பராமரிப்பு மையங்களை நிர்மாணித்தல்.

* சிரேஸ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையை 2025 இல் திருத்துதல்.

*சிரேஸ்ட பிரஜைகளின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையை வளர்ப்பதற்காக பிராந்திய செயலகங்கள் மற்றும் சமூக மன்றங்களால் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.

சிறப்புத் தேவைகள் கொண்ட சமூகம்

* மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 4 வது பிரிவுக்கு இணங்க, அத்தகைய நபர்களின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை முழுமையாக உத்தரவாதம் செய்ய 2025 இல் பாராளுமன்றத்திற்கு ஒரு புதிய சட்டம்.

*சைகை மொழி சட்டமூலத்தை நிறைவேற்றி, சிறப்புத் தேவையுடையவர்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல்.

*அவர்களுக்கான கட்டிட அணுகல் கொள்கையை அவ்வப்போது திருத்துதல்.

*ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000  பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.