புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.
அதில், “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது.
குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது, காணி பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுடனான கலந்துரையாடல், செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்து வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் குறித்த விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ் ,வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத்தலைவர் ஆர். உமாகரன், ,பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ,கரைச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (08) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பிலும் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று(07) வத்திக்கானில் தொடங்கியது.
நேற்று மாலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்க முடியாததால் இன்று காலை மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்கெடுப்பைத் தொடர்ந்து வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ள நிலையில், இது புதிய பாப்பரசரை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறியதுடன், லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.
லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை அந்நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்கள், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய இருப்புக்காக கிளிநொச்சி மக்கள் மிகப்பெரிய ஆணையை எமக்கு வழங்கியுள்ளனர். தூய கரங்களோடு, தூய நோக்க சிந்தனையோடு, அறத்தின் வழி கெளரவமான அரசியலை எமது மக்களுக்கு வழங்குவோம். அபிவிருத்தி பணிகளிலும் நிரந்தரமான அபிவிருத்தி பணிகளை செய்வதற்கும் அதற்குரிய முன்னேற்றத்தை காட்டுவதற்கும் இந்த காலம் பயன்பாடுடையதாக மாறும் என கருதுகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கான எழுச்சிக்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றுக்கருத்துக்களை பிழைகளை விட்டிருந்தாலும் இந்த தேர்தலில் மிகத்தெளிவாக தமிழ்த்தேசியத்திற்கான தமது வாக்குகளை அளித்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் அபிலாசை உள்ளது. இப்பொழுது உள்ள அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்கத்திற்கு ஒரு செய்தியாக சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடன் பேசி ஒரு அரசியல் தீர்வை காண போறீர்களா அல்லது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய பொதுஜன வாக்கெடுப்பை நடாத்தப்போறீர்களா என்ற செய்தியைத்தான் சொல்லியிருக்கிறது.
சமாதானம் பற்றியும் அதிகாரப்பகிர்வு பற்றியும் மெத்தனப்போக்குடன் உரிய தூரநோக்கு சிந்தணையில்லாமல் இருக்கிற அரசாங்கத்திற்கு இந்த தேர்தல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் அரசியல் தீர்வு என்பது எவ்வளவு முக்கியம், எமக்கு நடந்தது இனப்படுகொலை இதற்கான நேர்மையான நீதியான விசாரணை பொறுப்புக்கூறலை இந்த அரசாங்கம் தர தவறினால் அவர்களுக்குரிய பாடம் கற்பிக்கப்படும் என்ற செய்தியை வடக்கு கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தெளிவாக சொல்கிறது.
எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்ல முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.