Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 262

ஜப்பான் வழங்கிய உறுதிமொழி. நடக்கவுள்ள திருப்பம்!

0

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின்  (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற சந்திப்பின் போ​தே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. 

ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு  தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் தெரிவித்தார். 

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான “Clean Sri Lanka” திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள்  தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

சீனாவில் பாரிய நிலநடுக்கம். 53 பேர் பலி!

0

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை.

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது

நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன.சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், “ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்” என்று கூறினார்.5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், “பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது”என்று ஜியாங் கூறினார்.நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.

“அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை” என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.

”ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.

” பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், “இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.” என்றார்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.

2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பதவி விலகவுள்ள கனேடிய பிரதமர் ட்ரூடோ?

0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மேலும்,ட்ரூடோவின் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, , லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. அதற்குள் அவர் பதவி விலக இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது!

0

பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; பரவும் அபாயத்தைக் குறைக்க நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தையும், மூன்று மாத பெண் குழந்தையும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, பீதி அடைய வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் அதே வேளையில், எச்.எம்.பி.வி., ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும், உலகளவில் மற்றும் நாட்டிற்குள்ளும் ஏற்கனவே இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் எச்.எம்.பி.வி., கண்டறியப்பட்ட இரு குழந்தைகளில், மூன்று மாத குழந்தை ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், எட்டு மாத குழந்தை குணமடைந்து வருகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், விரைவான சுவாசம், வியர்வை மற்றும் குளிர், தலைவலி, தசை வலி, சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பரவிவரும் சீனாவின் புதிய வைரஸ்!

0

சீனாவில் (China) பரவி வரும் ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று தற்போது முதன் முறையாக இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இன்று இந்தியாவில் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு முதலில் வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரகளது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ல உயிர்களை காவு கொண்ட கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தலைமையகமே பொலிஸில் முறைப்பாடு!

0

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது.

தற்போது, ​​பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்த அரசின் அறிவிப்பு!

0

வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் அதிகரிப்பைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், உண்மையான உண்மைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

காய்ச்சல், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) போன்ற பொதுவான வைரஸ்களால் இந்த வழக்குகள் ஏற்படுகின்றன என்பதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். முக்கியமாக, புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்த நிலைமை எதிர்பாராதது அல்ல என்றும், மற்ற நாடுகளில் காணப்பட்ட முறைகளைப் போன்றது என்றும் WHO கூறியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய அலை தீவிரமானது என்றும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சுமையை திறம்பட நிர்வகித்து வருவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.

இலங்கையில், இந்த நிலை குறித்து கவலை கொள்ள எந்த காரணமும் இல்லை. எங்கள் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முக்கிய குறிப்புக்கள்:-

சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்பு அறியப்பட்ட வைரஸ்கள் காரணமாகும்.

புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் அடையாளம் காணப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலை நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை மற்றும் இந்த கட்டத்தில் இலங்கையில் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அரசியலமைப்பு குறித்து திடீரென வாய்திறந்த கொழும்பு பேராயர்!

0

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இதை யார் செய்தார்கள், எந்த நோக்கத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

சீனாவின் புதிய வைரஸ் தொற்றில் கோவிட் 19 அறிகுறிகள்!

0

இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது” என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த நோயாளிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன.

சீனாவில் பரவி வரும் இந்த புதிய வைரஸ் மக்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக கவலைகள் எழுந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரொனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

சீனாவின் அரசுசார் செய்தித் தளமான குளோபல் டைம்ஸ் கூற்றுப்படி, வட சீனா, பெய்ஜிங், தென்மேற்கு நகரமான சோங்கிங் மற்றும் தென் சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணம் போன்ற பகுதிகளில் இந்த HMPV வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், குளிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சீனாவின் சுகாதார நிறுவனங்கள் புதிதாக ஒரு நோய் கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டன.

இந்த கண்காணிப்பு முறை குறித்துப் பேசிய சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் லி ஜென்லாங், இதன் மூலம் அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நிமோனியா பாதிப்புகள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

சீனாவில் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மிகவும் அதிகரித்து இருப்பதாக சீன அரசு அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி, ரைனோவைரஸ் மற்றும் இந்த HMPV வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் வடக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எங்கிருந்து உருவாகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பு, சீனாவில் பரவி வந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் குறித்து இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

“மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வித்யாவதி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று இந்தோனீசியாவின் செய்தி நிறுவனமான அந்தாரா தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன் பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளைப் பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது” என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம்.

அரச சேவை வெற்றிடங்கள் குறித்த அறிவிப்பு!

0

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, விவசாயிகள் உட்பட விவசாயத் துறை தொழில்முனைவோருக்கு உயரிய சேவை வழங்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார். 

விசேடமாக அரசாங்கத்துடன் தொடர்புடைய, கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றதனால், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற விவசாயத் துறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்..

விவசாயிகளைப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதற்காக அரசாங்கம் எப்போதும் பாடுபடும். அத்துடன், இலங்கையின் விவசாயத் துறை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

காலத்துக்குக் காலம் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் இந்நாட்டு மக்கள் பட்டினியில் வாடாமல் இருக்க விவசாயிகள் பாடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், குறைபாடுகள் காணப்பட்டாலும் விவசாயத்துறை அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், விவசாயத் துறையுடன் தொடர்புடைய இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும், நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற நிறுவனங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.