Wednesday, June 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 45

வடகொரியா தேர்தலில் கிம் ஜாங் உன் அபார வெற்றி!

0

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுத் தேர்தல் முறையில் ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.

வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

0

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெட்ரோல் தேடி ஸ்கூட்டரில் மற்றைய ஸ்கூட்டரை ஏற்றிச் சென்ற அவலம்!

0

இலங்கையின் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மஹியங்கனை பகுதியில் இரண்டு நபர்கள் ஒரு ஸ்கூட்டரில் மற்றொரு ஸ்கூட்டரை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் தேடி அலைந்த வினோத காட்சி நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு ஸ்கூட்டரில் பயணிக்கும் இருவர், தங்களுக்கு இடையே மற்றொரு ஸ்கூட்டரை லாவகமாகப் பிடித்துக் கொண்டு செல்வதைக் காண முடிகிறது. வீடியோவில் உள்ளவர்களின் கூற்றுப்படி, அவர்களுக்கு ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது. இதனால், மற்றொரு வாகனத்திற்கு பெட்ரோல் தேடும் பயணத்தைத் தொடர, அதனை உருட்டிச் செல்வதற்குப் பதிலாக இவ்வாறு மற்றொரு ஸ்கூட்டரிலேயே ஏற்றிச் செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மஹியங்கனையில் நிலவும் அவல நிலை:

அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மஹியங்கனையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு காரணமாக பல நிலையங்கள் வாகனங்கள் உள்ளே நுழையாதவாறு எல்லைக்கோடுகள் இட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளால் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக வலைதள பயனர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

எரிபொருள் போதாது: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராடுவோம்!

0

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், முச்சக்கர வண்டி ஓட்டுதலையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு இந்த அளவு மிகவும் குறைவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வழமையான சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க வாரத்திற்கு குறைந்தது 35 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களைப் போன்றே, பாடசாலை போக்குவரத்துச் சேவையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் தற்போதைய ஒதுக்கீடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாடசாலை பேருந்துகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 60 லீற்றர் டீசல், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும் வழமையான வழித்தடங்களில் பயணிப்பதற்கும் போதுமானதாக இல்லை.

எனவே, இதனை 100 லீற்றராக அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாவிட்டால், மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்பு காரணமாகச் சில பேருந்து சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு துறையினரின் இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் விடயத்தில் சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா!

0

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 

சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். 

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. 

அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது. 

ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். 

வொஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 மாதங்களாக மகனை தேடும் தாய், உண்மை மறைக்கிறதா பொலிஸ்?

0

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த தனது மகன் மாயமாகி 4 மாதங்கள் கடந்தும், பொலிஸார் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என சிலாபம் – புஞ்சி வலத்தவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எம்.ஏ. ஸ்ரீயாணி பிரேமலதா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காணாமல் போயுள்ள பி.ஆர். சஞ்சீவ விக்ரமசிங்க (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை, கடந்த 15 ஆண்டுகளாக பத்தலங்குண்டுவ தீவில் தனியாக வசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் தீவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், அன்று மாலை அங்குள்ள சிலருடன் இணைந்து மது விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த விருந்தில் கடற்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் தீவைச் சேர்ந்த மேலும் சிலர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

படுகொலை சந்தேகமும் பொலிஸ் மெத்தனமும்

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாய் தெரிவிக்கும்போது, “எனது மகன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. விருந்து முடிந்து அவர்கள் அனைவரும் ஒரு படகில் ஏரிப் பகுதிக்குச் சென்றபோது, எனது மகன் ஏரியில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எவரும் அவரைக் காப்பாற்றவில்லை. அவரது உடல் எங்கோ ஓரிடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்பட்டி பொலிஸ் நிலையம், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றில் பலமுறை முறையிட்டும் இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார். கல்பட்டி பொலிஸார் கடற்படை வீரர்கள் இருவர் உட்பட சிலரிடம் வாக்குமூலம் பெற்ற போதிலும், அந்த நேரத்தில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மகன் உயிருடன் இருந்தால் கண்டிப்பாகத் தொடர்பு கொண்டிருப்பார் என்று கூறும் அத்தாய், பொலிஸார் ஏன் இந்த விடயத்தில் மௌனம் காக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “குறைந்தபட்சம் எனது மகன் இறந்துவிட்டான் என்பதற்கான மரணச் சான்றிதழாவது கிடைத்தால், அவருக்கான இறுதிச் சடங்குகளை எம்மால் செய்ய முடியும்” என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

17 ஆண்டுகால ஆட்சியை முறியடித்த தேசிய மக்கள் சக்தி!

0

ஜூட் சமந்த

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரத்தை சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கான குழுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. இச்சங்கத்தின் கீழ் உள்ள 17 பிராந்தியங்களுக்காக மொத்தம் 83 குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதே இந்தத் தேர்தலின் நோக்கமாகும்.

இந்தத் தேர்தலின் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதரவுக் குழு: 50 இடங்களையும், பொது எதிர்க்கட்சி ஆதரவுக் குழு: 33 இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் கூட்டுறவுச் சங்கத்தின் பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி ஆதரவுக் குழுவினர் சுவீகரித்துள்ளனர்.

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கமானது கடந்த 17 வருடங்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு ஆதரவான குழுவினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு இச்சங்கத்தின் நிர்வாகத்தில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 83 குழு உறுப்பினர்களிலிருந்து, சங்கத்தை வழிநடத்துவதற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை வரும் நாட்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் அழியும் நிலையில் எருமை மாடுகள்!

0

ஜூட் சமந்த

புத்தளம் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் எருமை மாடுகள் மிக வேகமாக அழிந்து வருவதாக பால் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி சிலாபத்தில் அமைந்துள்ள வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் போதே இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பால் பண்ணையாளர்கள், புத்தளம் மாவட்டத்தில் எருமை மாடுகள் அழிந்து வருவதற்குப் பிரதான காரணம் அவற்றுக்குத் தேவையான தீவனத்தைப் பெற்றுக்கொள்ளப் போதுமான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமையே என்று சுட்டிக்காட்டினர்.

முன்பு கால்நடைகள் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்திய நிலங்கள் பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலங்கள் வனவிலங்கு அல்லது வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்குள் கால்நடைகளை நுழைய விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எருமை மாடுகளுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலவும் நெருக்கடி காரணமாக, வேறு வழியின்றித் தமது எருமை மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு போகத்தில் மட்டும் சராசரியாக 100 எருமை மாடுகள் வரை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவருகிறது.

இதன் விளைவாக, புத்தளம் மாவட்டத்தில் எருமைப் பால் மற்றும் தயிர் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் வசம் உள்ள நிலங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு வராவிட்டால், வருங்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து எருமை மாடு என்ற இனமே அழிந்துவிடும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை: விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன பின்வரும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:

  • பால் உற்பத்தி நிலை: தற்போது நாட்டில் நாளொன்றுக்கு 10 இலட்சம் லீற்றர் பால் உற்பத்தியாகிறது, இது நாட்டின் தேவையில் 35% மட்டுமே ஆகும்.
  • பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி: பால் உற்பத்தியை அதிகரிக்க பாகிஸ்தானில் இருந்து 7 எருமை மாடுகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பிறகு, அவை இனப்பெருக்கத்திற்காக விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.
  • நிதி ஒதுக்கீடு: கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசித் திட்டங்களுக்காக அரசாங்கம் 25,000 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

எருமை மாடு வளர்ப்பைப் பாதுகாப்பதுடன், அவற்றுக்கான தீவனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!

0

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்று காலை 8:00 – 9:00 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய தற்போது விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், கேன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் வந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒருவரின் QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு வாகனங்களுக்கு எரிபொருள் கோரினால் அதனை வழங்கப்போவதில்லை என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்: “புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களுக்கு QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது QR முறைமை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தமக்குரிய QR குறியீட்டுடன் தமது வாகனத்திலேயே வருகை தந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

தடையின்றி எரிபொருள் கிடைக்க ரஷ்யா உறுதி!

0

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். 

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். 

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். 

இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.