நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஈதுல் பித்ர் தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை புத்தளம் எருக்கலம்பிட்டி மக்கள் கொண்டாடினார்கள்.
முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடும் உலகும் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு புனித பெருநாள் விழா ஆகும்.
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்பதாக்கும் . ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் விடவும், ரமழான் மாதமும் அதை தொடர்ந்து வரும் பெருநாள் தினமும் முஸ்லிம்களுக்கு சிறந்த நாட்களாக கருதப்படுகின்றது.
முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனுக்காக விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் வழமையாக பெருநாள் தினத்தில் பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகை மற்றும் விஷேட சொற்பொழிவு நடைபெறும்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பயணத்தடை இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடினர்.
நாகவில்லு, பாலாவி மற்றும் புத்தளம் நகரத்திலும் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.