Saturday, June 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 71

மாங்குளம் மருத்துவமனையின் புதிய பரிமாணம்!

மாங்குளம் மக்களின் சுகாதாரக் கனவை நனவாக்கும் புதிய முன்னெடுப்பு: மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கான விடுதிகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் 2026 ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று உத்தியோகபூர்வமாகப் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதாரத் துறையினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களிலிருந்தே பெரும்பாலான சுகாதார அதிகாரிகள் வருகை தருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை முறையாகப் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலமே, எமது மக்களுக்கான முழுமையான சேவையை அவர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டமானது வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலராகத் தான் பணியாற்றிய காலத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இராணுவம் வழங்கிய ஒத்துழைப்பை ஆளுநர் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அதேபோன்று, தற்போதைய புனரமைப்புப் பணிகளிலும் இராணுவப் பொறியியல் பிரிவினர் வழங்கிய மனிதவலுப் பங்களிப்பினால், சுமார் 6 மில்லியன் ரூபா வரையிலான அரச நிதி சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உரிய காலத்தில் பணிகளை நிறைவு செய்தமைக்காக இராணுவத்தினருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் நிதிப் பங்களிப்பில் மருத்துவர் விடுதி, தாதியர் விடுதி, துணை மருத்துவ ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் ஆகியன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக, 8 அறைகள், சமையலறை மற்றும் உணவருந்தும் அறை உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் மாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை ஈடுசெய்வதில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் நனவாகும் ஏழைகளின் வீட்டுக்கனவு!

0

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான ஒரு வீடு” எனும் இலக்கை நோக்கி, புத்தளம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.

சேனகுடியிருப்பு கிராமத்தில் மலர்ந்த புதிய வாழ்வு

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சேனகுடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு இந்த நிரந்தர வீடு இன்றைய தினம் முதலாவதாக வழங்கி வைக்கப்பட்டது. தற்காலிகக் கொட்டில்களில் வாழ்ந்து வந்த அக்குடும்பத்தின் நீண்ட காலக் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர் இன்ஜினியர் ரின்சாத் அஹமட், புத்தளம் தெற்கு மாநகர சபை உறுப்பினர் அனுசா, மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் வீடமைப்புத் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தம்மன்னாகமவிலும் தொடர்ந்த மகிழ்ச்சி

அதனைத் தொடர்ந்து, தம்மன்னாகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்று கையளிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், தமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக அரசாங்கத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று என்னால் வரமுடியாது என தெரிவித்த ஷிரந்தி ராஜபக்ஷ!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை, இன்றைய தினம் (27) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணிகள் குழுவினூடாக அவர் அறிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்காக முன்னிலையாவதற்கு முன்னர், தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

“ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் 2025: அதிர்ச்சியூட்டும் கைதுகள்”

0

இலஞ்சம் – ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அதிர்ச்சியூட்டும் கைதுகள்

2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகள் பலரையும் சட்டத்தின் முன் நிறுத்தியது.

இந்தக் கைதுகளில் அதிகமானோர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 30 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 13 பொலிஸ் சார்ஜன்ட்கள்
  • 9 பொலிஸ் கான்ஸ்டபிள்கள்
  • 4 உப பொலிஸ் பரிசோதகர்கள்
  • 2 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள்

இது சட்டத்தை காக்க வேண்டிய அமைப்புக்குள் ஊழல் எவ்வளவு ஆழமாகப் பரவியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

பொலிஸாரைத் தவிர, நீதி அமைச்சுடன் தொடர்புடைய 11 பேர், விவசாய சேவைகள் திணைக்களத்தின் 5 அதிகாரிகள், 3 கிராம உத்தியோகத்தர்கள், 3 பிரதேச சபை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்புகளைத் தவிர, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் அடங்குவர்.

2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 69 வழக்குகள் நிறைவு பெற்றுள்ளன. ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் எண்ணிக்கை 8,409. அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த புள்ளிவிவரங்கள், ஊழல் எதிர்ப்பு போராட்டம் வெறும் சட்ட நடவடிக்கையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் ஈடுபட வேண்டிய தேசிய கடமையாகும் என்பதை நினைவூட்டுகின்றன.

2025 ஆம் ஆண்டு, இலங்கையின் ஊழல் எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக பதிவாகியுள்ளது.

சோகமும் எச்சரிக்கையும்: ஜனவரி மாதத்தில் 1,375 வீதி விபத்துக்கள்!

0

புதிய ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தாலும், நாட்டின் வீதிகளில் நிகழ்ந்த விபத்துக்கள் பல குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.

போலீஸ் புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 01 முதல் 25 வரை 1,375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதில் 147 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் 155 உயிர்கள் பலியாகியுள்ளன என்பது மிகுந்த கவலைக்குரிய விடயம் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்:

“ஒவ்வொரு உயிரிழப்பும் ஒரு குடும்பத்தின் கனவுகளை சிதைக்கும் துயரமான நிகழ்வாகும். பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்களை மதிப்பது மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.”

இந்த 155 உயிர்கள் வெறும் எண்கள் அல்ல; அவர்கள் குடும்பங்களின் அன்பும், சமூகத்தின் அங்கங்களும். ஒவ்வொரு விபத்தும் ஒரு தந்தையை, தாயை, சகோதரனை அல்லது நண்பரை பறித்துச் சென்றுள்ளது.

⚠️ எச்சரிக்கை மற்றும் பொறுப்பு

  • அதிக வேகத்தில் ஓட்டுதல்
  • போதைப் பொருள் அல்லது மதுபானம் அருந்திய பின் வாகனம் செலுத்துதல்
  • போக்குவரத்து விதிகளை புறக்கணித்தல்
    இவை அனைத்தும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த செய்தி, எண்களின் பின்னால் மறைந்திருக்கும் மனித துயரத்தை வெளிப்படுத்துகிறது. புதிய ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த சோகமான புள்ளிவிவரங்கள், நம்மை அனைவரையும் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கை மணி.

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி முதியவர் பரிதாப மரணம்!

0

கிளிநொச்சியில் ரயில் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், ரயிலுடன் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ் ரயிலுடன், துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வயதான முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து, கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரத குடியரசு தினச்சிறப்பும்: இலங்கை – இந்திய உறவுகளும்!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

நவீன பாரதத்தின் உதயம்

பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26, 1950 அன்று இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மலர்ந்தது.

இது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிகத்தின் மீளுருவாக்கமாகும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழுவினால் செதுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அச்சாணியாக இன்றும் திகழ்கிறது.

வறுமையிலிருந்து விண்வெளி வரை

அன்று வறுமையிலும் பஞ்சத்திலும் தவித்த ஒரு தேசம், இன்று செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புமளவிற்கும் (Mangalyaan), உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து நிற்பது ஒரு வரலாற்று அதிசயம்.

குறிப்பாக, 2047ம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிப்பது அதன் வல்லரசு கனவின் உச்சமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI), பசுமை எரிசக்தி மற்றும் தொழிநுட்பத்துறையில் இந்தியா இன்று உலகளாவிய தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: ஒரு மனிதாபிமானப்பார்வை
இந்தியாவின் இந்த எழுச்சி அதன் அண்டை நாடான இலங்கையுடனான உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒரு முக்கிய மைற்கல்லாகும்.

‘டித்வா’ புயல்: சோதனைக் காலத்தில் இலங்கைக்கு கைகொடுத்த தோழன்

2025ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையின் வட, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை நிலைகுலையச்செய்த ‘டித்வா’ (Dithwa) புயலின் போது, இந்தியா காட்டிய வேகம் அதன் உண்மையான நட்புறவை வெளிப்படுத்தியது.
புயல் கரையைஒகடந்த சில மணி நேரங்களிலேயே, ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இந்தியா மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

கடற்படை உதவி:
இந்தியக்கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ என் எஸ் விக்ராந்த் (INS Vikrant), ஐ என் எஸ் உதயகிரி மற்றும் ஐ என் எஸ் சுகன்யா ஆகியவை கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்கு விரைந்து வந்து 1,100 டன் நிவாரணப்பொருட்களைக் கையளித்தன.

விமானப்படை உதவி:
சி-130ஜே மற்றும் ஐஎல்-76 விமானங்கள் மூலம் 14.5 டன் உயிர்மருந்துகள் வழங்கப்பட்டன.

மருத்துவ சேவை:
கண்டி மற்றும் மஹியங்கனை பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கள மருத்துவமனைகள் (Field Hospitals) மூலம் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு: கிளிநொச்சி மற்றும் சிலாபம் பகுதிகளில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தைச்சீரமைக்க வான்வழியாகக் கொண்டு வரப்பட்ட ‘பெய்லி’ (Bailey) பாலங்கள் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தின.

பொருளாதார மீள்கட்டுமாணம்:
இந்த இக்கட்டான சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீள்கட்டுமானப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4,032 கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான நிதித்தொகுப்பை அறிவித்தார்.

இதில் 100 மில்லியன் டொலர் மானிய உதவியாகவும், 350 மில்லியன் டாலர் சலுகைக்கடனாகவும் வழங்கப்பட்டது. இதனை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் “இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் புதிய அத்தியாயம்” எனப்பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வல்லரசாக உருவெடுப்பது என்பது வெறும் இராணுவ பலத்தினால் மட்டுமல்ல, தனது அண்டை நாடுகளின் வளர்ச்சியிலும் பங்கெடுத்து, தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் அடங்கியுள்ளது. தரைவழி மற்றும் கடல்வழி இணைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றிணைவது, ஆசிய நூற்றாண்டின் (Asian Century) எழுச்சிக்கு வலுசேர்க்கும் சான்றாகும்.

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் ஒரு வல்லரசாக பாரதம் திகழட்டும்.

இந்திய மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் எமது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்!

“இலவச சுகாதார சேவையைப் பலிகொடுக்காதீர்கள்!”

0

இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க ஐந்து அம்ச தொழிற்சங்கப் போராட்டம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிரடித் தீர்மானம்

இலங்கையின் அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், முறையான பணிச்சூழலை வலியுறுத்தியும் இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையானது ஐந்து பிரதான வழிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து அம்ச நடவடிக்கைகள்:

1. மருந்துப் பரிந்துரைகளை நிறுத்துதல்: கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) மருந்துகள் இல்லாத பட்சத்தில், நோயாளர்கள் அவற்றை வெளியில் உள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை (Prescription) வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. ஆய்வுகூடப் பரிசோதனைகளைத் தடுத்தல்: வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ள முடியாத ஆய்வுகூடப் பரிசோதனைகளை, தனியார் வைத்தியசாலைகள் அல்லது வெளி ஆய்வுகூடங்களில் செய்து கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்காமை.

3. புதிய பிரிவுகளுக்கு முட்டுக்கட்டை: அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை முறையாக வழங்கப்படாத பட்சத்தில், வைத்தியசாலைகளில் புதிய சிகிச்சை பிரிவுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்காமை.

4. அரசியல் முகாம்களைப் புறக்கணித்தல்: அரசியல் நோக்கங்களுக்காக மற்றும் அரசியல் தேவைகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் அல்லது கிளினிக்குகளில் கலந்துகொள்ளாமை.

5. பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை: கிளினிக் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளிகளைப் பரிசோதிக்கும் போது, வைத்தியருக்கு உதவியாக உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்கத் தவறினால், வைத்தியர்கள் அந்த இடத்திலிருந்து கடமையிலிருந்து விலகிச் செல்வார்கள்.

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து விளக்கமளித்த வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாங்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை; வேலை செய்யக்கூடிய முறையான சூழலை வழங்குமாறு கோரியே இதனை முன்னெடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தேவையான மருத்துவ வசதிகளை வழங்காமல் இலவச சுகாதார சேவையைச் சீர்குலைக்கும் பொறுப்பைச் சுகாதார அமைச்சும், அரசாங்கமுமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுகாதாரக் கட்டமைப்பு அல்லது நோயாளர் பராமரிப்பு சேவைகள் இதனால் பாதிப்படைந்தால் அதற்கு அமைச்சும் அமைச்சருமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தொடர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி நிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை!

0

கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை: பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2024 (2025) ஆம் ஆண்டிற்கான கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது,.

விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று “Exam Information Center” என்பதைத் தெரிவு செய்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைப்பு ஊடாகவோ விண்ணப்பிக்க முடியும்,.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 2026.02.13 ஆகும்,.

ஒரு பாடத்தை மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 250/- ஆகும்,. இந்தக் கட்டணத்தை கடனட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் அலுவலகங்கள் ஊடாகச் செலுத்த முடியும்.

இணையவழியில் கட்டணம் செலுத்திய பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். அந்தப் பிரதி தர்மப் பாடசாலை அதிபர் அல்லது நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் ‘பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்,.

சரியான பாடங்களை உள்வாங்கி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும் என்பதுடன், மீளாய்வுக் கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-2785105 அல்லது 011-2786235 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்,.

தகவல்: அ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆணையாளர் நாயகம்

மக்களுக்காக வாழ்ந்த தலைவனுக்கு மக்களின் இரத்த தானம்!

0

ஜூட் சமந்த

மக்கள் சேவையுடன் நினைவுகூரப்பட்ட சனத் நிஷாந்த: இரண்டாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு சமய மற்றும் சமூக நலன்புரித் திட்டங்கள் கடந்த 25 ஆம் திகதி நாள் முழுவதும் ஆராச்சிக்கட்டுவ, வென்னப்புவ மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

மறைந்த அமைச்சரின் மக்கள் பணிகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகளில், அவரது பாரியார் சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா கலந்துகொண்டு தேவையுடைய பொதுமக்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தார். அத்துடன், அமைச்சரின் நினைவாக அப்பகுதி மக்கள் பெருமளவில் ஒன்றிணைந்து இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமது அன்புக்குரிய மக்கள் பிரதிநிதியின் பிரிவை நினைவுகூரும் வகையில், ஆன்மீக வழிபாடுகளுடன் மாத்திரமன்றி, உயிர்காக்கும் இரத்த தானம் மற்றும் வாழ்வுக்கு ஒளியூட்டும் கண்ணாடி வழங்கல் போன்ற மனிதாபிமானப் பணிகளுக்கூடாக அவரது நினைவுகள் மீண்டும் ஒருமுறை மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.