Wednesday, May 6, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 83

கடுமையாக கோபமடைந்த வட மாகாண ஆளுநர்!

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார்.

கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே. இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்துகொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது. எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது.

சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது மக்களின் அவலநிலையை ஒரு முதலீடாகக் காட்டித் திட்டங்களைத் தீட்டி நிதியைப் பெறுகின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் நிதியில் மக்களுக்கான உதவிகளை விட, அந்த நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளுக்கே பெரும் பகுதி செலவிடப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

மாறாக, மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, அவர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு, தொண்டு அடிப்படையில் பணியாற்றும் ‘மனிதவள சிறப்பாற்றல் நிறுவனம்’ போன்ற அமைப்புகளே எமக்குத் தேவை, என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர், கிராம அலுவலர், மனித வள சிறப்பாற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

300 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு!

0

ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர், நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், குறித்த பொதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு சுமார் ரூ.300 மில்லியன் என்று இலங்கை சுங்கம் குறிப்பிடுகிறது.

கடுலுக்குள்ளே உயிரை விட்ட கற்பிட்டி சுழியோடி!

கற்பிட்டியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலுக்குள் உயிரிழப்பு!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியில் சுழியோடி கடல் அட்டை மற்றும் சங்கு எடுக்கும் தொழிலில் கடந்த பல வருடங்களாக ஈடுபாட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலிலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க மொஹமட் ஜெமில் 9 பிள்ளைகளின் தந்தை நேற்று புதன்கிழமை (19) இரவு கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி உச்சமுனை கடற்பரப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சக கடற்றொழிலாளர்களின் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்த மொஹமட் ஜெமிலின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கற்பிட்டி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு உயிரிழந்தவரின் உடல் அனுப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10வது முறையாகவும் முதல்வராகும் நிதிஷ் குமார்!

0

பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கூட்டணி சார்பில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் இன்று பதவியேற்றார்.

நிதிஷ் குமார், முதல்வராக 10வது முறையாக பதவியேற்றுள்ளார்.

பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹாவும் (2வது முறை) ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களைத் தவிர ஜேடியூவைச் சார்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அசோக் சவுத்ரி, லேசி சிங், மதன் சஹானி, சுனில் குமார், முகமது ஜமா கான் ஆகியோரும் பாஜகவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிருபால் யாதவ், சஞ்சய் சிங் திகார், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ராமா ​​நிஷாத், லக்கேந்திர குமார் ரௌஷன், ஷ்ரேயாஷி சிங், பிரமோத் குமார் ஆகியோரும் பதவியேற்றனர்.

ஜே.டி.(யு) தனது தற்போதைய அமைச்சர்களைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், பாஜக சில புதிய முகங்களைக் கொண்டு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளான மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான எச்ஏஎம்-எஸ், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) ஆகியவற்றுக்கு முறையே 2-1-1 என அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விழாவுக்குப் பிறகு கட்சிகளால் இலாகாக்கள் மற்றும் முழு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படும்.

ஓட்டமாவடி சபையை கைப்பற்றிய ACMC கட்சி!

0

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேட்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

கற்பிட்டியில் இலவச ஜனாஸா வாகன சேவை!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக கற்பிட்டி மக்களின் முழுமையான பங்களிப்புடன் பிரயிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் பல வருட முயற்சியின் ஊடாக புதிய ஜனாஸா வாகனம் ஒன்று இலவச சேவைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது

மேற்படி இலவச ஜனாஸா சேவை வாகனத்தின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (2025/11/22) பிற்பகல் 4 மணிக்கு மஸ்ஜிதுல் குபா ( காட்டு பாவா) பள்ளிவாசலில் ஜனாஸா சங்கத் தலைவர் ஏ.ஜே.எம் தாரிக் தலைமையில் நடைபெற உள்ளதாக செயலாளர் எம் எஸ் எம் அஸ்லம் அறிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் ஜனாஸா வாகனத்தின் சேவைகள் மூலம் முஸ்லீம் சமூகம் பல நன்மைகளை அடைந்துவரும் நிலையில், கல்பிட்டி பகுதியிலும் இவ்வாறான ஒரு ஜனாஸா வாகன சேவை ஆரம்பிக்கப்படுவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளக்க முன்மொழிவு!

0

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போதுள்ள கணிப்புகளின்படி இலங்கையில் 16.5 மில்லியன் நிலப் பிரிவுகள் (land plots) இருக்குமென்றும், அவற்றில் 2.5 மில்லியன் நிலப் பிரிவுகள் அளக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன என்றும் குழுவில் தெரிவித்தனர்.

அதற்கமைய, எஞ்சியுள்ள நிலப் பிரிவுகளை கூடிய விரைவில் அளந்து, வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவுக்கு அழைத்து, எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டன.

மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இன்றி நிலங்களை குத்தகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள குத்தகைவரி நிலுவைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கடலுக்குச் சென்றவர் கரைக்குத் திரும்பவில்லை!

0

ஜூட் சமந்த

மீன்பிடி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தனது கணவர் கரைக்குத் திரும்பவில்லை என்று பெண் ஒருவர் சிலாபம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சிலாபம், சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர ஆராச்சிகே மனோஜ் பிரசன்ன பீரிஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு கடலுக்குச் சென்று காணாமல் போயுள்ளார்.

நேற்று 19 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சிலாபம்-சுதுவெல்ல பகுதியில் இருந்து மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற தனது கணவர் மாலை வரை திரும்பி வரவில்லை என்று அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மீனவரைத் தேடும் நடவடிக்கையை அப்பகுதி மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

அனர்த்த நிலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களின் வகிபாகம்!

அனர்த்த நிலைமையின் போது பிரதேச சபை உறுப்பினர்களின் வகிபாகம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர். A.M.R.N.K அழகக்கோன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மழை மற்றும் ஏனைய இயற்கை அனர்த்த நிலைமையின்போது பிரதேச சபை உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்று விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

தற்போது நாடு பூராகவும் கனமழை தொடர்வதால், இவ்வாறு ஒரு சிறப்புமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பது, ஒரு நல்ல தருணம் என தெரிவிக்கப்படுகிறது.

“வடமேற்கு விசித்ரு 2025” கண்காட்சி குருநாகலில்!

0

“வடமேற்கு விசித்ரு 2025” கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நவம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் குருநாகல் நகர மண்டபம் மற்றும் சாரணர் தலைமையக வளாகத்தில் நடைபெறுகிறது.

நவம்பர் 18 ஆம் தேதி கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக வடமேற்கு ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய உள்ளிட்ட விருந்தினர்கள் வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் கலந்து கொண்டனர்.

இதை வடமேற்கு மாகாண தொழில் மேம்பாட்டுத் துறை மற்றும் தேசிய கைவினை மன்றம் ஏற்பாடு செய்தன.

வடமேற்கு மாகாண சபையின் தலைவர், வடமேற்கு தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சுகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடமேற்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு