தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களைக் கடுமையாகச் சாடியுள்ள நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிணைந்த பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக ரணில் விக்கிரமசிங்க தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திறைசேரியில் இருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும், வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், ஜனநாயக விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்றக் குழுக்களுக்கு சமூகமளிக்க மறுத்தமை மற்றும் மக்களின் எதிர்ப்பின் பின்னரே அவர் இணங்கியமை போன்ற விடயங்கள் ஜனநாயகப் பின்னடைவைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், அரசாங்கம் பௌத்த மத உரிமைகளை மீறி வருவதாகவும், கத்தோலிக்கப் பாடசாலைகள் விவகாரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில், சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இவ்வருடம் வெசாக் பண்டிகை மற்றும் மே தினம் ஒரே காலப்பகுதியில் வருவதைக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து மே தின நிகழ்வுகளை மாற்றியமைத்த கடந்த கால முன்னுதாரணங்களை நினைவூட்டியுள்ளார். 2018 ஆம் ஆண்டு வெசாக் வாரத்தை முன்னிட்டு மே தின ஊர்வலங்கள் மே 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இம்முறை மே 1 ஆம் திகதியே பேரணிகளை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவை அவர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று அந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில், “பாவ் மடுவத் ஹோரா” (Pavu Maduwat Hora) போன்ற வாசகங்களை கிராம மட்டத்திற்குக் கொண்டு செல்வது சிறந்தது என அவர் யோசனை தெரிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.




