செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த
பண்டைய காலத்தில் இலங்கையர்களின் பிரதான போக்குவரத்துச் சாதனமாக விளங்கியவை ‘திரிக்கல’ (Thirikkala) அல்லது ‘டான்டு’ (Tantu) எனப்படும் மாட்டு வண்டிகள், தூர இடங்களுக்கான ஆன்மீகப் பயணங்கள் மற்றும் திருமணச் சடங்குகளுக்குக் கௌரவமான வாகனமாகப் பயன்படுத்தப்பட்டன, ஆனால் நவீன வாகனங்களின் வருகையோடு காலப்போக்கில் எமது சமூகத்திலிருந்து இது மறைந்து போயின.
இன்றும் தும்மலசூரிய – கட்டிமஹான தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்குப் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருகை தருவது ஒரு பாரம்பரியமாகத் தொடர்கின்ற போதிலும், அன்றாடப் பயன்பாட்டிலிருந்து இவை அற்றுப்போயுள்ளன. இந்நிலையில், அழிந்து வரும் இந்தக் கலையை ஒரு குடிசைத் தொழிலாகக் கொண்டு, மாரவில – இஹல கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த டப்ளியூ. அசோக பிரியந்த குமார பெர்னாண்டோ என்பவர் இன்றும் இந்த வண்டிகளை உற்பத்தி செய்து வருகின்றார்.
தமது உற்பத்தி அனுபவம் குறித்து அவர் பகிர்கையில்:
“சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு டான்டு வண்டி இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் யாரிடமும் முறைப்படி இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளவில்லை. பார்த்துப் பார்த்தே அனைத்தையும் பழகினேன். இன்று என்னிடம் 60 முதல் 70 ஆண்டுகள் பழமையான வண்டிகள் உள்ளன. அதேபோன்று, நவீன காலத்திற்கு ஏற்றவாறு மிக ஆடம்பரமான வண்டிகளையும் நான் வடிவமைக்கிறேன். இலங்கையிலேயே மிக உயரமான டான்டு வண்டியும் என்னிடமே உள்ளது” என்கிறார்.
சுற்றுலாத்துறையில் பெரும் வரவேற்பு
தற்போது இந்த வண்டிகளுக்கான தேவை பெரும்பாலும் சுற்றுலாத் துறையைச் சார்ந்தே அமைகிறது. களுத்துறை, பேருவளை மற்றும் சிகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குத் தேவைக்காக அசோகவின் வண்டிகள் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
குறிப்பாக சித்திரைப் புத்தாண்டு காலங்களில் இடம்பெறும் மாட்டு வண்டிப் பந்தயங்களுக்காக (Race Carts) அதிக கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
உற்பத்தி சவால்கள்
தனது வீட்டில் மேலும் இரு பணியாளர்களின் உதவியுடன் இந்த வண்டிகளை உற்பத்தி செய்யும் அசோக, மரத்திற்கு மேலதிகமாக இரும்பு, துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மற்றும் பித்தளை ஆகியவற்றை வண்டிகளின் உறுதித்தன்மைக்காகப் பயன்படுத்துகின்றார்.
“இதை ஒரு குடிசைத் தொழிலாகவே நான் ஆரம்பித்தேன். அனைத்து வேலைகளையும் எனது மேற்பார்வையில் மிக நுணுக்கமாகச் செய்வதால், ஒரு தரமான வண்டியை உருவாக்க அதிக காலம் எடுக்கிறது. அதனால் சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ப விநியோகம் செய்வதில் சவால்கள் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
பாரம்பரியமான ஒரு வாகனக் கலையைத் தற்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்து, அதனை அழியாமல் பாதுகாத்து வரும் அசோகவின் முயற்சி பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.






