இலங்கை ஆசிரியர் சேவையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் முன்னேற்றத்திற்கும் தரம் உயர்விற்கும் அடிப்படையான 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான ஏற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பக் கோரல் இன்று (25) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக செப்டம்பர் 14 ஆம் திகதிக்குள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் மாகாண அரச சேவையில் தரம் 2-I (Grade 2-I) இற்கு தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இப்பரீட்சையை நிறைவு செய்வது கட்டாய நிபந்தனையாகும். அத்துடன், 4 ஆண்டுகள் கடந்திருந்தாலும் 2025 ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தரம் 1 (Grade 1) இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களும் இந்த வினைத்திறன்காண் பரீட்சைத் தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சார்த்திகள் எவ்வித சிரமமுமின்றி பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில், அதற்கான சுய கற்றல் தொகுதிகளின் பாடத்திட்டங்களை (Self-study modules) கல்வி அமைச்சு ‘e-Thaksalawa’ உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது. தகுதியுடைய ஆசிரியர்கள் காலதாமதமின்றி விண்ணப்பித்து, பாடநெறிகளை முறையாகப் பின்பற்றி பரீட்சைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


