தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ரூ. 1 கோடி: மாணவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பிரதான மண்டப புனர்நிர்மாணப் பணிகள், ஒரு கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஸஹ்ரான் தாஜூதீன் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் பிரதான மண்டபம் போதிய வசதிகளின்றி காணப்பட்ட நிலையில், இதனை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வருடம் முதல் இதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் திட்டமிடல்களின் பலனாக, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இந்த மாபெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஸஹ்ரான் தெரிவித்தார்.
களத்தில் இறங்கிய மக்கள் பிரதிநிதி
கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருத்தப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட கள விஜயமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான மொஹமட் பைசல் நேரில் கலந்துகொண்டு, ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை விரிவாகப் பார்வையிட்டார்.
இந்த பிரதான மண்டப புனரமைப்பானது வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏனைய சகல பௌதீக வளங்களையும் முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான தொடர் முன்னெடுப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலையின் கற்றல் சூழல் மேலும் தரமுயர்த்தப்பட்டு மாணவர்கள் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






