புத்தளம்: இயற்கையின் சீற்றத்திற்கு இலக்காகி, தங்களின் வாழ்வாதாரங்களையும் உடைமைகளையும் இழந்து தவித்த புத்தளம் பிரதேச மக்களுக்கு, புதிய நம்பிக்கையூட்டும் வகையில் மூன்றாம் கட்டமாக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
‘தித்வா’ புயல் தாக்கத்தினால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வர்த்தகர்களுக்கான நிதியுதவிகள் வழங்கும் மூன்றாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (01.06.2026) அன்று புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளை இழந்து தவித்த குடும்பங்களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்கான மூன்றாம் கட்ட காசோலைகள் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அதேநேரம், புயல் காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களுக்கான விசேட இழப்பீட்டுத் தொகைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியானது, முடங்கிப்போயிருந்த புத்தளத்தின் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதியதொரு புத்துயிரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு
பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
- சகோதரர் எம்.ஜே.பைசல் – புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
- சகோதரர் எம்.எப்.ரின்சாத் அஹமட் – புத்தளம் மாநகர சபை முதல்வர்
- எஸ்.பி.விதனகே – புத்தளம் பிரதேச செயலாளர்
இவர்களுடன் புத்தளம் மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் (CDC) தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளான பொதுமக்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர்.





