வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிதி உரிய கடன் வழங்குநரைச் சென்றடையாத நிலையில், இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மீண்டும் ஒரு ‘கடன் தவணையை செலுத்தத் தவறிய’ நாடாக மாறியுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறையாண்மைக் கடன் முகாமைத்துவப் பணிகள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து திறைசேரியின் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போதே தாம் எச்சரித்ததாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய நிதிச் சந்தைகளைக் கையாளுவதற்குத் தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நியமிக்குமாறு அரச நிதி பற்றிய குழு வலியுறுத்தியும், திறைசேரி அதனைப் பொருட்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
குறித்த வெளிநாட்டுத் தரப்பிற்கு ஐந்து கடன் தவணைகள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது வெறும் கவனக்குறைவு அல்ல, ஒரு பாரிய நிர்வாகத் தோல்வி என விமர்சித்துள்ளார்.
இதேவேளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் இணைய ஊடுருவிகள் (Cyber Hackers) நுழைந்து மேற்கொண்ட திருட்டுச் சம்பவம் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போதே இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இது தொடர்பாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு ஆகியவற்றில் அமைச்சு முறைப்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள்வாரி விசாரணைகளின் அடிப்படையில், சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணை முன்னெடுப்புகளுக்காகச் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தகவல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளுக்கு அமைய, சர்வதேச ஒருங்கிணைப்புடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


