இலங்கை நாட்டுப்புறப் பாடல் கலையை வளர்ப்பதில் தனித்துவமான பங்காற்றிய மூத்த பாடகர் தேவானந்த வைத்தியசேகரவின் 90 ஆண்டுகால கலைப் பயணத்தைப் பாராட்டும் வகையில், “நீல நுவன்” எனும் விசேட பாராட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் (SLBC) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று (07) கொழும்பு – 10 இல் உள்ள ஆனந்த சமரகோன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி, வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்:
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேவானந்த வைத்தியசேகர அவர்களின் கலைப் பணியானது பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை மகிழ்வித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தகைய கலைஞர்கள் நாட்டின் “தேசிய வளங்கள்” என்றும் அவர் போற்றினார். மேலும், வைத்தியசேகரவின் பங்களிப்பைப் பாராட்டி அமைச்சரினால் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், ஒரு மருத்துவர் சிறந்த இசைக்கலைஞராக இருப்பது வியப்பிற்குரியது எனத் தெரிவித்ததோடு, வானொலியின் பழைய கலாச்சாரத் தூண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தற்போது பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட “சியவசக சிஹானந்தா” என்ற நூலை, அதன் தற்போதைய தலைவர் பேராசிரியர் உதித்த கயாஷன் குணசேகர வெளியிட்டார். இதன் ஒரு பிரதி தேவானந்த வைத்தியசேகரவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீர்த்தி பாஸ்கலே, சனத் குணதிலக்க, ஜனக விக்ரமசிங்க, இந்திராணி பெரேரா உள்ளிட்ட முன்னணி கலைஞர்களும் பல அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




