வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து இந்தியா சென்று தஞ்சமடைந்தார்.
அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியை கவிழ்த்தனர். அதன்பிறகு மாணவர்கள் தான் புதிய ஆட்சியை அமைப்பதாக கூறினர். ஆனால் அனுபவசாலி வேண்டும் என்ற நிலையில் முகமது யூனுஷ் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால் அவரது அரசில் இடம்பெற்றுள்ள போராட்டக்குழுவினரின் தலையாய நோக்கம் என்பது வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றம் செய்வதுதான். அதாவது வங்கதேசத்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு அதற்கு பதில் Revolutinary government அமைப்பதாகும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது யூனுஷ்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதோடு கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முகமது யூனுஷ் இதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நாட்கள் அதாவது ஜனவரி 15ம் தேதிக்குள் தற்போதைய அரசியலமைப்பை நீக்கி புதிய விதிகளுடன் ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளனர்.
ஆனால் முகமது யூனுஷ் அதனை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடிக்கலாம். அதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா போல் முகமது யூனுஷ் நாட்டில் இருந்து விரட்டப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.