தேர்தல் காலங்களில் மாத்திரம் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10-03-2025) கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியபின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொருட்டு சமத்துவ கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் இன்று பகல் ஒரு மணிக்கு மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏழு கட்சிகள் அங்கம் வகிப்பதுடன், தமிழ் மக்கள் ஒற்றுமை பற்றியும், தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களது அபிலாசைகளின் அடிப்படையில் இது ஒரு தேர்தல் கூட்டாக அல்லாமல் தொடர்ந்தும் பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்