ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் மாயமான 70 இற்கும் அதிகமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கிழக்கு மாகாணமான கிவுவில் மழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக, நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து உள்ளூர் மக்களுடன் இணைந்து, மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இதுவரை வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
