வவுனியா மற்றும் கிளிநொச்சி அரச கால்நடை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர், அந்த யாப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து, அரச கால்நடை வைத்தியர்கள் இன்று காலை 6.00மணி முதல் 24மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி ,கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால் கால் நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொதுமக்கள், தங்கள் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்காக கால்நடை வைத்தியசாலைகளுக்குச் சென்று, வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
