நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. நேற்று போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியான நிலையில், 300 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தினர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார்.
நேபாள உள்துறை அமைச்சர் பதவி விலகினால் போதாது, பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகினர். இந்த நிலையில், இன்றைய தினம் நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள நாட்டில் உள்ள சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இத்தகைய இணையதளங்கள் நேபாள நாட்டு சட்டப்படி பதிவு செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உரிய நிபந்தனைகள்படி பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப் உள்பட 26 சமூக ஊடகங்கள் செப்.4ஆம் தேதி முதல் நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டன.

இந்த இணையதளங்கள் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்படும் வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நேபாள ஜென் இசட் தலைமுறைைய சேர்ந்த இளைஞர்கள் நேற்று நாடு முழுவதும் இணையதள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கிய பிறகும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

