13ஆவது சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோடகன் கராத்தே (GUJURYU KARATE & SHOTOKHAN KARATE) ஓபன் சாம்பியன் போட்டிகள் கடந்த 04.10.2025 சனிக்கிழமை குளியாப்பிட்டியில் உள்ள வயம்ப பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கராத்தே சம்மேளனத்தின் போட்டியாளர்கள் பங்குபற்றிய குறித்த போட்டிகளை I.G.K.A. இலங்கை கிளை நடாத்தியது.
மேலும் குறித்த போட்டிகளில் இலங்கை, இந்தியா, மலேசிய மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்களும் இதில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற “காடா” பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியை சேர்ந்த ரைசுதீன் – பர்வீன் தம்பதிகளின் இளம் வாரிசு “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” இரண்டாம் இடத்தினை பெற்று நாட்டிற்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அதேபோல் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியான “கொமிடி” பிரிவிலும் பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
எருக்கலம்பிட்டி இளம் வாரிசான “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” மதுரங்குளி மெர்சி லங்கா தனியார் பாடசாலையில் கல்வி பயின்று வருவதுடன், குறித்த போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற சகல வழிகளிலும் பெரும் துணையாக இருந்திருக்கிறார் கராத்தே பயிற்சியாளர் பைரோஸ் (பிளக் பெல்ட்).
நடைபெற்ற சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோடகன் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி அதீத திறமையை வெளிப்படுத்தியதுடன், இரண்டு போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக பங்குபற்றி இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்ட “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” என்ற இளம் சிங்கத்திற்கு ஊர் மக்கள், பாடசாலை சமூகம் என பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், பயிற்சியாளர் பைரோஸ் அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எமது ஊடகம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
