இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரத்ன, நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஒரு “மாஃபியா” கும்பல் வேரூன்றியுள்ளதாகத் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி உடனான நேர்காணலில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் கட்டமைப்பில் வீரர்கள், முகாமையாளர்கள், தெரிவாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாஃபியா கும்பல் அல்லது குழு செயல்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஓய்வு பெற்ற ஒரு வீரர் பொதுவாகக் கூறத் தயங்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை திலகரத்ன முன்வைத்துள்ளமை இலங்கை கிரிக்கட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
“2015 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் இந்த ஊழலில் ஒரு பங்கைப் பெற்றுள்ளனர்” என்றும், இதன் விளைவாக கிரிக்கெட் நிர்வாகத்தின் 80 சதவீதப் பகுதி சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இலங்கை கிரிக்கெட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்ல நிர்வாகத்தின் தலைமையில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, ரொஷான் மகாநாம (Roshan Mahanama) ஒருவரே அதற்குப் பொருத்தமானவர் எனத் திலகரத்ன குறிப்பிட்டார்.
ஹஷான் திலகரத்ன மற்றும் ரொஷான் மகாநாம ஆகிய இருவரும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரர்களாவர். மேலும், மகாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது அவரது நேர்மைக்கும் திறமைக்கும் சான்றாகும்.
இலங்கை கிரிக்கெட் துறையில் நிலவும் இந்த முறைகேடுகள் குறித்த அவரது வெளிப்பாடுகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


