இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி. எலசா III (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப்பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொங்கநத்த மற்றும் பாலுகத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காக கடந்த ஏப்ரல் (19) விசேட கள ஆய்வுப் பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தூய்மைப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஆர். பிரபாகரன் – வனத்தவில்லுவ பிரதேச செயலாளர், சமந்த குணசேகர – தலைவர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஜகத் குணசேகர – பொது மேலாளர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், சுசந்த குமார – பூக்குளம் கிராம அலுவலர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) கள உதவியாளர் ஷமில விக்ரமசிங்க மற்றும் விசேட அதிகாரிகள் குழுவினர்.
விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவை மீன்கள் மற்றும் ஆமைகளால் உணவெனத் தவறாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதால், கடல்சார் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து, கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. மணலில் கலந்துள்ள இந்த நுண் நெகிழிகளை அகற்றுவது சவாலான காரியம் என்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடல் வளத்தையும், கடற்கரை அழகையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.





