எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மகளிர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மகளிர் தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நேற்று 25.04.2026 மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்ந்நிகழ்வு, நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் எருக்கல பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் ஜனாப் இம்ரான் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பாரம்பரிய மற்றும் வினோத விளையாட்டுப் போட்டிகள் இதில் இடம்பெற்றன.
குறிப்பாக கயிறு இழுத்தல், கதிரை ஓட்டம், பலூன் உடைத்தல், சமநிலை ஓட்டம், கிடுகு மற்றும் பாய் இழைத்தல், தேங்காய் துருவுதல் போன்ற போட்டிகளில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 14 பெண் அரச அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட மொத்தம் 18 பெண் அதிகாரிகள் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஊரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இவர்களை அடையாளப்படுத்தி, பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மிகுந்த சிரமத்துடன் ஏற்பாடு செய்திருந்தபோதிலும் ஜனாப் அர்சத் மற்றும் ஜனாப் இஸ்மத் ஆகியோர் தாராளமான ஒத்துழைப்புக்களையும் இடவசதிகளையும் வழங்கி குறித்த நிகழ்வு சிறப்புற நடைபெற பெரும் பங்களிப்பு செய்தனர்.
நிகழ்வின் இறுதியில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் இம்ரான், செயலாளர் ரிபாஸ் ஆசிரியர் மற்றும் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் எம்.ஜே.எம் சிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி கௌரவித்தனர்.
பெண்களின் ஒற்றுமையையும் ஆளுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த விழா, கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







