தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை பணத்திற்காக விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவரும், அவருடன் இருந்த ஆடவர் ஒருவரும் இணைந்து தமது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், வறுமை காரணமாக ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் அதனை விற்பனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை விற்பனை செய்யப்படுவதை அவதானித்த புன்னை நீராவி கிராம மக்கள், உடனடியாகச் செயற்பட்டு குறித்த தாயையும் அவருடன் இருந்த ஆடவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் தர்மபுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போது தர்மபுர பொலிஸார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்த தாய், அதற்கு உடந்தையாக இருந்த ஆண் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய நபர் என மொத்தம் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினரிடம் தற்போது இரண்டு வயது மதிக்கத்தக்க மற்றுமொரு பெண் குழந்தையும் உள்ளது. இதனால், விற்பனை செய்யப்பட்ட குழந்தை உண்மையில் இவர்களுடையதுதானா அல்லது கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பான பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வறுமையைச் சாட்டி இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





