ஜூட் சமந்த
ஆரச்சிக்கட்டுவ, உடப்பு கடற்கரைப் பிரதேசம் மீண்டும் ஒருமுறை பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தெற்கே பெருங்கடலாலும், மேற்கே முந்தலம் களப்பாலும் சூழப்பட்டுள்ள உடப்பு கிராமத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோரின் பிரதான வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் காணப்படுகிறது. கடலிலும் களப்பிலும் மீன்பிடித்தல் மற்றும் பிடிபடும் மீன்களை விற்பனை செய்தல் என இக்கிராமத்தின் பொருளாதாரம் முழுமையாக கடலைச் சார்ந்தே அமைந்துள்ளது. மேலும், உடப்புக் கடற்கரையில் அமைந்துள்ள மீன்பிடி வாடிகளில் பெருமளவிலான கருவாடு உற்பத்தி செய்யப்பட்டு தினசரி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கடலே தங்களின் உயிர்நாடி என்பதால், உடப்பு மக்கள் கடற்கரையைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். கடற்கரை அரிப்புக்குள்ளாவதால் மீன்பிடிப் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், மீன்பிடி வலைகளைச் சுத்தம் செய்வதற்கும், கருவாடு காயவைப்பதற்கான வாடிகளை அமைப்பதற்கும் இடமில்லாத சூழல் உருவாகியுள்ளமை அம்மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பருவக்காற்று காலங்களில் உடப்பு கடற்கரை கடும் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது குறித்து மக்கள் மற்றும் ஊடகங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த கற்பாறைகளை இட்டுத் தற்காலிகப் பாதுகாப்பை வழங்கியது.
இருப்பினும், தற்போது இடப்பட்டுள்ள அந்தப் பாறைகளுக்கு இடையினூடாக கடல் நீர் உட்புகுந்து கடற்கரை அரிக்கப்படுவது பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பருவக்காற்று காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இவ்வளவு மோசமான கடல் அரிப்பு ஏற்படுகின்றது என்றால், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும்,” என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடல் அரிப்பின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே கடற்கரையோரம் இருந்த பல வீடுகளும், கடற்கரைக்கு இணையாக இருந்த வீதியும் கடலுக்குள் மூழ்கியுள்ளன. அத்துடன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பல மின் கம்பங்கள் கடல் அரிப்பினால் சரிந்து விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த கடல் அரிப்பைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வொன்றை வழங்காவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையின் வரைபடத்திலிருந்து ‘உடப்பு’ என்ற கிராமம் மறைந்து போவது ஆச்சரியப்படுவதற்கில்லை என இப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.


