இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட டீசல் இறக்குமதியின் போது பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளால் இந்த முறைப்பாடு இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த டீசல் இறக்குமதி நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசீலிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும் எனவும், இந்த நஷ்டத்திற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


