ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திறைசேரியில் இருந்து காணாமல் போன விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு பாரிய நிதி மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட வேண்டிய 625,000 அமெரிக்க டொலர் நிதி காணாமல் போயுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட 625,000 டொலர் நிதி, உரிய தரப்பைச் சென்றடையவில்லை. தங்களுக்குரிய பணம் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க தபால் சேவை விடுத்த முறைப்பாட்டையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பில் தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. குறித்த பணம் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட போதிலும், அவை எங்கே சென்றன என்பது குறித்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய நிதியில் இடம்பெற்ற மோசடிக்கும், இந்தச் சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
“நிறுவன ரீதியாக இவ்வாறான சம்பவங்கள் அறிக்கையிடப்படும் போது, அவை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து விடயங்களும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதில்லை. எனினும், இந்த மோசடிகளில் தொடர்புடைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்படும்,” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.
அரசின் முக்கிய திணைக்களங்களில் இருந்து தொடர்ச்சியாக இவ்வாறு நிதி காணாமல் போவது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


