இப்போது சர்வதேச அளவில் ஹண்டாவைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவில் உலகெங்கும் இதுவரை பரவவில்லை என்ற போதிலும், இப்போதே இது அலற வைத்து இருக்கிறது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா, குரங்கு அம்மை வரிசையில், இப்போது உல்லாசக் கப்பல் ஒன்றின் வழியாகப் பரவத் தொடங்கியிருக்கும் ஹண்டாவைரஸ் (Hantavirus) மரணப் பீதியைக் கிளப்பியுள்ளது. டச்சு உல்லாசக் கப்பல் ஒன்றில் பரவிய இந்தத் தொற்றால் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இப்போது கனடாவிலும் இதன் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கப்பலாக உலகைச் சுற்றி வந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற டச்சு கப்பல், இப்போது ஒரு நடமாடும் குவாரன்டைன் மையமாக மாறியுள்ளது. இந்தக் கப்பலில் பயணித்த பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் பயணித்த 4 கனடா நாட்டவர்கள் கடந்த மே 10ம் தேதி விக்டோரியா நகருக்கு வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லாதபோதும், முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அவர்களில் ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட தொடக்கநிலை பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதே கப்பலில் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் என மொத்தம் 3 பேர் இந்த ‘ஹண்டாவைரஸ்’ பாதிப்பால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே, உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை 42 நாட்கள் வரை தனிமைப்படுத்தப் பரிந்துரைக்கிறது. கனடா அரசு 21 நாட்கள் குவாரன்டைன் விதியை அமல்படுத்தியுள்ளது.
ஹண்டாவைரஸ் என்பது பொதுவாக எலிகள், சுண்டெலிகள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும். எலிகளின் சிறுநீர், எச்சில் மற்றும் மலம் ஆகியவற்றின் மூலமே இந்த வைரஸ் காற்றில் கலந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. உல்லாசக் கப்பல் போன்ற மூடிய குளிரூட்டப்பட்ட சூழலில், ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அது எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் இருக்கிறது.
இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தவுடன் காட்டும் ஆரம்பக்கால அறிகுறிகள் மிகவும் சாதாரணமானவை.. கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு என்று தொடக்கத்தில் அறிகுறி லேசாகவே இருக்கும். நோய்ப் பாதிப்பு தொற்று முதிர்ச்சியடையும் போது, அது ‘ஹண்டாவைரஸ் நுரையீரல் நோய்க்குறி’ (Hantavirus Pulmonary Syndrome – HPS) ஆக மாறி, நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடலின் உள் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படலாம்
இந்த வைரஸ் வேகமாகப் பரவாது என்ற போதிலும் இதன் இறப்பு விகிதம் (Mortality Rate) மிக அதிகம் என்பதால் தான் மருத்துவர்கள் அலறுகிறார்கள். இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படுவோரில் கிட்டத்தட்ட 50% பேர் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இது உலகளவில் பெரிதாக வெடிக்கும் முன்பு இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வல்லுநர்கள் இறங்கியுள்ளனர்.


