வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் முன்னரே, அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்பினருக்கு நாணயக் கடிதங்கள் (LC) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான பொருளாதார நிர்வாகம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) தற்போதைய அரசாங்கத்திற்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்திருந்த போதிலும், உள்நாட்டு சந்தையில் டொலரின் பெறுமதி கணிசமாகக் குறையாதது கவலைக்கிடமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தையில் நிலவும் நம்பிக்கையின்மை மற்றும் எதிர்கால பொருளாதார நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் தங்களிடம் உள்ள டொலர்களை சந்தைக்குள் விடாமல் வைத்திருப்பதாக கூறினார்.
மேலும், வாகன இறக்குமதி தொடர்பாக 1,700 வாகனங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு முக்கியமான விடயமாக, ஜனாதிபதி மே 16ஆம் திகதி வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னரான மே 15ஆம் திகதியே 1,600 வாகனங்களுக்கான நாணயக் கடிதங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் அம்பலப்படுத்தினார்.
இந்த தகவல் முன்கூட்டியே சிலருக்கு வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.
அதேவேளை, வெள்ளிக்கிழமைகளில்தான் அதிகளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்தை நிராகரித்த முஜிபுர் ரஹ்மான், அது “பச்சைப் பொய்” என விமர்சித்தார். உண்மையில் வாரத்தின் ஏனைய நாட்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமைகளில்தான் குறைவான அளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்த சிலருக்கு, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடிதங்களை திறக்க அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது ஜனாதிபதியின் “நண்பர்களுக்கான பொருளாதாரக் கொள்கை” எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்தார்.
ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கு நெருக்கமானவர்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தி, சாதாரண மக்களின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணித்து வருகின்றனர் என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறது என்பது தற்போது கவனிக்கப்படும் முக்கிய விடயமாக மாறியுள்ளது.


