இஸ்லாமிய வரலாற்றின் தியாகத்தையும், உண்மையை நிலைநாட்டுவதற்காய் வாழ்ந்த உன்னத மனிதர்களையும் நினைவுகூரும் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு, புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் விசேட ஆன்மீக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
மாணவர்களின் ஆளுமையையும் ஆன்மீக சிந்தனையையும் தூண்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, ஒட்டுமொத்தப் பிரதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாடசாலை மேடையை அலங்கரித்த மாணவர்களின் முஹர்ரம் கலாச்சார நிகழ்வுகள், நெஞ்சைத் தொடும் கவிதைகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் உரைகள் என அனைத்தும் வந்திருந்தோரை கட்டிப்போட்டன. ஆன்மீக அதிர்வுகளோடு, கல்வி சார் ஒழுக்க விழுமியங்களையும் ஒருசேர விதைத்த பெருமை இந்த நிகழ்வைச் சாரும்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி-புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ சகோதரர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அரங்கமே உற்றுநோக்கிய அந்த தருணத்தில், மேடையேறிய நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள், மாணவர்களின் எதிர்காலப் பாதைக்கான திசைகாட்டியைத் தன் உரையில் மிக அழகாகப் பொதித்து வைத்தார்.
“முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின், பொறுமையின் மற்றும் உண்மையின் பக்கம் நிற்கும் உன்னத மாதமாகும். கர்பலா சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாம் எப்போதும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என உணர்ச்சிப் பூர்வமாகத் தனது உரையைத் தொடங்கினார். அத்தோடு நின்றுவிடாமல், சமகாலப் போட்டி உலகில் கல்வியின் அவசியத்தையும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த எதார்த்தமான உரை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மக்களின் பலத்த பாராட்டுக்களுக்கு மத்தியில், இந்த உன்னத விழாவானது பாடசாலைச் சமூகத்தின் கூட்டு முயற்சிக்குச் சான்றாக அமைந்தது.
பாடசாலை அதிபர், உப அதிபர், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முழுமையான வெற்றியாக மாற்றிக் காட்டினர்.





