ஜுட் சமந்த
அமைதியான கிராமத்து வீடொன்றுக்குள் அதியுயர் திட்டமிடலுடன் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை, பல்லம பொலிஸார் மேற்கொண்ட மின்னல் வேக அதிரடிச் சோதனையின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.
பல்லம – வத்துப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் எவருக்கும் சந்தேகமில்லாத வகையில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று (26) மாலை குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினர், அங்கு முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத உற்பத்தியைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இந்த அதிரடிச் சோதனையின்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 69,000 மில்லிலீட்டர் (92 போத்தல்கள்) கசிப்பு, கசிப்பு உற்பத்திக்குத் தேவையான 210 லீட்டர் கோடா அடங்கிய பீப்பாய், செப்புச் சுருள் (Copper coil), எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
குறித்த சந்தேகநபர் இங்கிருந்து மிகவும் நுணுக்கமாக ஏனைய வெளிப் பிரதேசங்களுக்கும் கசிப்பை விநியோகித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் நிக்கினி போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் சூழலைப் பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த பாரிய உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட அனைத்து சான்றுப் பொருட்களையும் ஆனைமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்லம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரதீப் ஜயவர்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரே இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.


