ஜுட் சமந்த
பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள ஒரு கிராமத்து வீட்டில், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் முந்தல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மங்களஎலிய – நுகசெவன கிராமத்தைச் சேர்ந்த முருகன்கங்கானம்கே தேஷிகா (வயது 40) என்ற பெண் முந்தல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் தொழில் நிமித்தம் ருமேனியா நாட்டுக்குச் சென்றுள்ளதால், இவர் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி காலையும் வழமைபோல் வீட்டைப் பூட்டிவிட்டு அவர் பணிக்குச் சென்றுள்ளார்.
பணி முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவருக்கு வாயிலிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறைகள் கலைக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு பதறிப்போனார்.
உடனடியாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும், அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 70,000 ரூபா ரொக்கப் பணமும் சுருட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொள்ளையன் வீட்டின் முன்பக்கக் கதவை உடைக்காமல், எவருக்கும் சந்தேகம் வராத வகையில் வீட்டின் குளியலறை காற்றுத் துவார (Ventilator) ஜன்னல் ஊடாக மிக நைச்சியமாக வீட்டிற்குள் ஊடுருவியுள்ளான். பின்னர் தனது கைவரிசையைக் காட்டிவிட்டு, சமையலறையின் கதவைத் திறந்து கொண்டு தடையின்றி தப்பிச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனிமையில் வசிப்பதையும், பகல் வேளையில் அவர் வேலைக்குச் செல்வதையும் மிகத் துல்லியமாக நோட்டமிட்ட ஒருவரே இச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை வலைவீசிப் பிடிக்க பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


