Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 10

இரண்டாம் வாரத்தில் தீவிரமடையும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தாபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும், தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இலட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானில் திரண்டு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் போரில் இதுவரை 1,255-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர். தெஹ்ரான் மற்றும் அராக் (Arak) நகரங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் தலைநகரில் நச்சுப் புகை சூழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தப் போர் “மிக விரைவில்” முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா இதுவரை ஈரானில் 5,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் 80-90 சதவீத ஏவுகணை ஏவுதளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உரிமை கோரியுள்ளார். இருப்பினும், ஈரானில் உள்ள “உறக்க நிலையில் இருக்கும் குழுக்களை” அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போரில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இடைமறித்து வருகின்றன. பஹ்ரைனில் குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

  • ஆஸ்திரேலியா: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏவுகணைகளை வழங்கவும், மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கண்காணிப்பு விமானங்களை அனுப்பவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.
  • லெபனான்: இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 486-ஐத் தாண்டியுள்ளது; சுமார் 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
  • துருக்கி: ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை நேட்டோ (NATO) பாதுகாப்பு அமைப்பு துருக்கிய வான்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியது.

இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை உயர்ந்தது, பின்னர் 90 டாலராகக் குறைந்தது.

போர் நிறுத்தம் தொடர்பாக சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈரானுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூங்கி எழுந்திருக்கும் போது எரிபொருள் விலை உயர்ந்துள்ளது!

0

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். 

இருப்பினும், இம்முறை டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: 

“தூங்கி எழுந்திருக்கும் போது திடீரென எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எமது போக்குவரத்து சங்கம் என்ற ரீதியில் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, ஒரு பாடசாலை மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவினால் அதிகரிக்கும். 22 ரூபா விலை அதிகரிப்பானது போக்குவரத்து துறையில் எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.” என்றார்.

இதேவேளை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்ந்த போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே அவ்வாறே நடைமுறையில் இருக்கும் என்றும் கலாநிதி நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பயில் 14 இலட்சம் பெறுமதி நகைகள் மற்றும் பணம் திருட்டு!

0

ஜூட் சமந்த

மாதம்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், 60,000 ரூபா பணம் மற்றும் 14 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக மாதம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரகொடியான – ரத்னகிரிய வத்தையைச் சேர்ந்த 59 வயதுடைய அகிலியஸ் புள்ளேகே ஜோசப் என்பவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதுடன், அவரும் அவரது மகளும் மாத்திரமே வீட்டில் தங்கியுள்ளனர். முறைப்பாட்டாளர் தும்பு தொழிற்சாலையிலும் (Fiber mill), அவரது மகள் ஆடைத் தொழிற்சாலையிலும் பணிபுரிகின்றனர்.

தனது மகளின் மேலதிக வகுப்புக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக, அலங்கார மேசையின் இழுப்பறையில் (Dressing table drawer) வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோதே, பணம் காணாமல் போயிருப்பதை அவர் கவனித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சோதனையிட்ட போது, மகளுக்குச் சொந்தமான தங்க நகைகளும் களவாடப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டின் கதவுகள் அல்லது ஜன்னல்கள் உடைக்கப்படவில்லை எனவும், வீடு திறந்திருந்த நேரத்தில் யாரோ உள்ளே புகுந்து இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும், அயலவர் ஒருவர் அண்மைக்காலமாக அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருவதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாதம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தளம் – அனுராதபுரம் வீதிப் பாலம் மீண்டும் சேதம்!

0

ஜூட் சமந்த

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 9ஆம் மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவிய ‘டித்வா’ (Ditwa) சூறாவளியின் போது இந்தப் பாலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அதிகாரிகளால் தற்காலிகப் பாலமொன்று அமைக்கப்பட்டு, சில நாட்களிலேயே போக்குவரத்துச் சீர்செய்யப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி, கருவலகஸ்வெவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்தப் பாலம் மூன்று இடங்களில் வெடிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு பொலிஸாரால் உடனடியாக அறிவிக்கப்பட்டது.

பாலத்தின் அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, கடந்த 9ஆம் திகதி மாலை முதல் இலகுரக வாகனங்கள் மாத்திரம் பாலத்தின் ஊடாகச் செல்ல வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை, கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவை தமது பயணங்களுக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். 

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. 

இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார். 

கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, 2011 இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டினார். 

மேலும், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக (2011-2013) இருந்தபோது, அந்த அணியை அனைத்து வகையான போட்டிகளிலும் முதலிடத்திற்கு இட்டுச் சென்றார். 

2026 ஐசிசி (ICC) ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தின் போது நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். 

1993 முதல் 2004 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்களும் 13 ஒருநாள் சதங்களும் அடங்கும். 

2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரின் முதன்மையான பொறுப்பாகும். 

தேசிய உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்கும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்ணுரிமை: உலகிற்கு இஸ்லாம் வழங்கிய புரட்சிகரமான உரிமைகள்!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்ணுரிமை என்பது நவீன காலத்து கண்டுபிடிப்பு என்ற பிம்பம் பரவலாக உள்ளது. ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, பெண் குழந்தைகளை பாரமாகவும் அவமானமாகவும் கருதி உயிருடன் புதைத்த அறியாமைக் காலத்திலேயே, பெண்ணுரிமைக்கான முதல் குரலை இஸ்லாம் மிக அழுத்தமாகப் பதிவு செய்தது. பெண்களை வெறும் மோகப் பொருளாக கருதிய ஒரு சமூகத்தில், அவர்களுக்குச் சட்டப்பூர்வமான அந்தஸ்தையும், கண்ணியத்தையும் வழங்கி உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது இஸ்லாம்.

அறிவார்ந்த சுதந்திரமும் தலைமைத்துவமும்

கல்வி உரிமை என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்த்திய இஸ்லாம், “கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் மீது கடமையாகும்” என்ற நபிமொழியின் ஊடாகப் பெண்ணுக்கு அறிவார்ந்த சுதந்திரத்தை வழங்கியது. இதற்குச் சிறந்த உதாரணமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள். அவர்கள் அக்காலத்தின் மிகப்பெரிய சட்ட நிபுணராகவும், மருத்துவக் குறிப்புகளை அறிந்தவராகவும், ஆயிரக்கணக்கான நபிமொழிகளை உலகிற்கு போதித்த ஆசிரியராகவும் விளங்கினார்கள். இதன் மூலம், ஒரு பெண் சமூகத்தின் உயரிய பொறுப்புகளை வகிக்க முடியும் என்பதை இஸ்லாம் அன்றே நிரூபித்தது.

பொருளாதாரத் தற்சார்பு

பொருளாதார ரீதியாகப் பெண்கள் தங்கி வாழும் நிலையை மாற்றி, அவர்களுக்குச் சொத்துரிமையை வழங்கிய முதல் மார்க்கம் இஸ்லாம் ஆகும். மேலைநாடுகள் 19-ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற சொத்துரிமையை, 7ஆம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் பெண்களுக்கு சட்டமாக்கியது. தந்தை, கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்தில் பெண்ணுக்குப் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தியதோடு, ஒரு பெண் தனது உழைப்பின் மூலம் ஈட்டும் வருமானத்தை அவளே முழுமையாக நிர்வகிக்கும் சுதந்திரத்தையும் வழங்கியது. அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ஒரு வெற்றிகரமான வணிகப் பெண்ணாகத் திகழ்ந்தது இதற்குச் சான்றாகும்.

நவீன காலச் சவால்களும் இஸ்லாமியத் தீர்வுகளும்
இன்றைய நவீன உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் ‘பணிச் சுமை’ மற்றும் ‘மன அழுத்தம்’ ஆகியவற்றிற்கு இஸ்லாம் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகிறது:

கூட்டுப் பொறுப்பு: வீட்டு வேலைகள் என்பது பெண்ணின் தனிப்பட்ட கடமை அல்ல; அது ஒரு கூட்டுப் பொறுப்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது வீட்டின் பணிகளில் உதவியாக இருந்தார்கள் என்ற முன்மாதிரி, இன்றைய ஆண்களுக்கு ஒரு பாடமாகும்.

ஆலோசனை வழங்கல்: குடும்ப மற்றும் சமூக விவகாரங்களில் பெண்களின் ஆலோசனைகளுக்கு இஸ்லாம் மதிப்பளித்துள்ளது. ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கையின் போது அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் ஆலோசனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது, பெண்களின் அறிவுசார்ந்த பங்களிப்பிற்குச் சான்றாகும்.

மறுவாழ்வுக்கான உரிமை: இன்றும் சமூகத்தில் விவாகரத்து பெற்ற அல்லது கணவனை இழந்த பெண்கள் ஒருவிதப் பாராமுகத்துடன் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், இஸ்லாம் அவர்களுக்குக் கண்ணியமான மறுவாழ்வு பெறுவதை ஒரு உரிமையாகவே வழங்கியுள்ளது.

சமூக அந்தஸ்தும் பாதுகாப்பும்
பெண்ணைத் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் உயரிய இடத்தில் இஸ்லாம் வைத்தது.அதேபோல், திருமண ஒப்பந்தத்தில் பெண்ணின் சம்மதம் இன்றி எவரும் அவளைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற விதியை உருவாக்கி, அவளது விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்தது.

சுருக்கமாகக் கூறினால், பெண்ணுரிமை என்பது மேலைநாட்டிலிருந்து இறக்குமதியான கருத்து அல்ல; அது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வகுத்த வாழ்வியல் நெறியாகும். பெண் சிசுக்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களுக்கு வாழ்வுரிமை, கல்வி உரிமை, சொத்துரிமை மற்றும் சமூகத் தகுதியை வழங்கியதன் மூலம், உலக வரலாற்றிலேயே பெண்ணுரிமையை முதன்முதலில் சட்டப்பூர்வமாக்கிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த வரலாற்று உண்மைகளை உரக்கச் சொல்வதே இந்த மகளிர் தினத்தின் உண்மையான நோக்கமாக அமைய வேண்டும்.

ரியாத், டுபாய்க்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. 

இதன்படி, ரியாத்துக்கான தினசரி விமான சேவைகள் இன்று இரவும், டுபாய்க்கான சேவைகள் நாளையிலிருந்தும் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. 

மத்திய கிழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இயக்கப்படவுள்ள விமானங்களின் விபரங்கள் பின்வருமாறு: 

UL265   Colombo–Riyadh   18:15 hrs 

UL266   Riyadh–Colombo   22:35 hrs 

UL231   Colombo–Dubai 1  2:40 hrs 

UL232   Dubai–Colombo   17:00 hrs 

மேலதிக விபரங்களுக்கு பொதுமக்கள் www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

ஆழ்கடலில் 100 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் பறிமுதல்!

0

“முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயற்திட்டத்தின் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களுடன் உள்ளூர் மீன்பிடி படகு ஒன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் வைத்து நேற்று (08) கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஆறு (06) நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் (PNB) நிபுணத்துவ ஆய்வுகளின்படி, ஹெராயின்: சுமார் 102 கிலோகிராம், கொகைன்: 900 கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த விசேட சுற்றிவளைப்பை ஆய்வு செய்ய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோர் நேரில் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்த அமைச்சர், கடற்படையினர் மட்டும் கடந்த ஆண்டு சுமார் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் கடல் விபத்துக்களுக்கு மத்தியிலும், இலங்கை கடற்படை சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்களையும் இளைஞர்களையும் பாதுகாக்க இரவு பகலாக உழைத்து வருவதாகவும் அவர் பாராட்டினார்.

போதைப்பொருள் ஒழிப்பு என்பது தனித்து ஒரு துறையின் பொறுப்பல்ல, மாறாக அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று அமைச்சர் வலியுறுத்தினார்:

  • மறுவாழ்வு: போதைக்கு அடிமையானவர்களை மீட்க பெருமளவு நிதி செலவிடப்படுவதால், இளைஞர்கள் இந்த அழிவுப் பாதையைத் தவிர்க்க வேண்டும்.
  • பொதுமக்கள் பங்களிப்பு: கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை 1818 அல்லது 1997 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
  • ஊடகங்களின் பங்கு: விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் காட்டும் பொறுப்புணர்வை அவர் இதன்போது பாராட்டினார்.

கைப்பற்றப்பட்ட 102 கிலோ ஹெராயின், 900 கிராம் கொகைன், பல நாள் மீன்பிடி படகு மற்றும் கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோவால் சிக்கிய இளைஞர்!

0

ஜூட் சமந்த

வீதியில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மிகவும் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சந்தேக நபர் ஒருவரை நவகத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பழைய இரும்பு சேகரித்து மீண்டும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ – நவகத்தேகம வீதியில் ஏனைய வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், குறித்த இளைஞர் மிக மோசமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அந்தச் சம்பவம் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், நவகத்தேகம பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உயர்மட்ட உத்தரவின் பேரில் விரைந்து செயற்பட்ட நவகத்தேகம பொலிஸார், சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு எதிராக, அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் அதன் மூலம் சாவற்ற நரஹத்தி (கொலை முயற்சி) செய்யத் தூண்டியமை ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ், ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமருடனே பேசி முடிவெடுப்பேன்!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரை எப்போது முடிவுக்கு கொண்டு வருவது என்பது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் “பரஸ்பர” (mutual) முடிவாக இருக்கும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் (The Times of Israel) ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், இந்த மோதலைத் தீர்ப்பதில் நெதன்யாகுவின் ஆலோசனைகளும் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த டிரம்ப், “இது ஒரு கூட்டு முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இது பற்றி பேசி வருகிறோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன், ஆனால் அனைத்து காரணிகளும் முறையாகக் கணக்கில் கொள்ளப்படும்” என்று கூறினார்.

இந்தச் செய்தியை பீட் ஷ்ரோடர் அறிக்கையிட, கிறிஸ்டியன் ஷ்மோலிங்கர் தொகுத்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ள சூழலில், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே முந்தைய தகவல்களின்படி, இஸ்ரேலிய பிரதமர் ஈரானிய ஆட்சியை நிலைகுலையச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்ததுடன், ஈரானுடன் பேசுவரத்தை என்பது காலம் கடந்தது என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.