Sunday, June 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 10

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

உயர்தர தொழிற்கல்விப் பாடப் பிரிவின் கீழ் தரம் 12இற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற்கல்விப் பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, ​​க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இதற்காக, அனுமதிக்காக எதிர்பார்க்கப்படும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

0

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தாக்குதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனிடையே, கடந்த 15ம் தேதி துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்தத்திற்கான நேரடி பேச்சுவார்த்தையில் முதல்முறையாக ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு கைதிகளை பரிமாறி கொள்வதில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நேற்று சுமி மாகாணத்தில் பஸ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. போரின் 3வது ஆண்டான கடந்த பிப்.,23ம் தேதி, உக்ரைன் மீது 267 டிரோன்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அதை விட கூடுதலான டிரோன்களில் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில்,’உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து ள்ளது. 88 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய டிரோன்கள் திரும்ப சென்று விட்டன,’ என தெரிவித்துள்ளது.

வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் இன்று (18)நடைபெற்றது.

வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி செயற்பாட்டாளர் அ.பமீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி இன்றைய இறுதி நாளில் வழங்கப்பட்டது.

மேலும் யுத்தம் முடிந்து 16வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி தர்மபுரம் பகுதியிலிருந்து ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இறுதிப்போரில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து பறந்த சுகாதார அமைச்சர்!

0

உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்.

இந்த மாநாடு இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்.

“ஒரு சுகாதாரமான உலகம்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் அந்த நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முன்வைக்கப்படும் திட்டங்கள், யோசனைகள் மற்றும் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், வரும் ஆண்டில் உலகம் முழுவதும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரைத் தவிர, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜயசிங்க, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முதல் செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் மாற்றம்?

0

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி

மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று “அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்றுவரை பார்த்து வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. தனி நபர் செல்வாக்கை விட கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகமென்பதால் அரசியல் முகவரி இழந்தவர்களும் அடைக்கலம் தேடும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.

மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்து பல சவால்கள், உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பங்களிலும் தனது நேசத்துக்குரியவர்கள் தனக்கு துரோகம் செய்த போதும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அரச ஆதரவோடு அதிகாரங்களைப்பெற்று முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக வந்த போதும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தக்கட்சிக்கும் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்.

இவ்வாறான சவாலான சந்தர்ப்பங்களில் தலைமைக்கு பக்க பலமாக தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இருந்தார் என்பதாலும், ரவூப் ஹக்கீமிடம் இருக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணங்கள், விவேகம், மும்மொழி தேர்ச்சி, சிறந்த அணுகுமுறை, சட்டஅறிவு போன்ற ஆளுமைகளை தனக்குள் வைத்திருப்பதைக்கூட இருந்து கண்காணித்ததன் காரணமாக தனக்குப்பின் இக்கட்சியை வழிநடாத்த சிறந்த தலைவராக பல சந்தர்ப்பங்களில் அஷ்ரப் அவர்களால் ரவூப் ஹக்கீம் அடையாளப்படுத்தப்பட்டார் என்பது உண்மை.

தலைவர் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் தலைமைத்துவப் போட்டி கட்சிக்குள் ஏற்பட்ட போது தான், தான் தலைவர் என சிலர் கோசமெழுப்பி தலைமைத்துவத்தை அடையமுயற்சித்த போது அவை வெற்றியளிக்கவில்லை.

மாறாக, மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்தெடுக்கப்பட்ட போராளிகளால் மர்ஹும் தலைவரின் விருப்பப்படி தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

அன்று தொடக்கம் இன்றுவரை தலைமைத்துவ சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு வருகிறார். தலைமைத்துவ போட்டியினால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சிலர் அரச ஆதரவோடு பிரிந்து தனிக்கட்சி அமைத்து தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொண்டாலும் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்குமான மௌசு குறைந்தபாடில்லை.

பல தடவைகள் பலரும் இக்கட்சிக்குள்ளிருந்து கொண்டும் வெளியிலிருந்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெற்றுக்கோசங்களை எழுப்பிய போதல்லாம் கட்சியின் போராளிகளாலும் ஆதரவாளர்களாலும் தலைமைத்துவம் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது எதார்தமான விடயமாகும்.

தேர்தல்களில் தோல்வியடையாது தொடராக மக்கள் ஆதரவோடு வலம் வரும் ரவூப் ஹக்கீமைத்தோற்கடிக்க காலத்திற்கு காலம் அரச அனுசரணையில் பலர் முயற்சித்து தோல்வி கண்ட நிலையில், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் அனுர அலையில் ரவூப் ஹக்கீமை கண்டியில் மூழ்கடித்து விடலாம் என எதிரிகளை விட கட்சிக்குள்ளிருக்கும் துரோகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட துரோகிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டவேளையில் இறை உதவியோடு மக்களின் ஆதரவோடு வெற்றிவாகை சூடினார்.

தற்போது உள்ளூராட்சித்தேர்தல் முடிந்த கையோடு ஒரு சிலர் மீண்டும் வெற்றுக்கோசங்களை எழுப்புவதை முகநூல்களில் காணலாம். அது எவ்வாறிருக்கிறது என்றால் “ஆடு நனையிது என ஓநாய் அழுத” கதையாகத்தான் இருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று சுகயீனப்பட்டாரே தவிற, பலவீனப்படவில்லை. இறை உதவியோடு பலமான தலைவராக தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தேசியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற போது அங்கு நினைவு படுத்தப்படும் நாமம் ரவூப் ஹக்கீம் என்ற நாமம்தான். தேசிய முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கும் தலைவர் என்றால் ரவூப் ஹக்கீம் என்பதில் கடந்தகால நிகழ்வுகள் சாட்சியங்களாக இருக்கின்றது.

ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் துரோகிகளை விட எதிரிகள் தற்போதைய சூழலில் இலங்கையின் அரசியலில் ரவூப் ஹக்கீமின் அவசியத்தைப்புரிந்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்காக ரவூப் ஹக்கீமை அன்று தொடக்கம் இன்றுவரை எதிர்க்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்ப்பும் வெற்றுக்கோசங்களும் ரவூப் ஹக்கீமை பலப்படுத்துமே தவிர, ஒரு போதும் பலவீனப்படுத்தாது.

கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள், நடுநிலையானவர்கள், சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் தற்கால அரசியலில் ரவூப் ஹக்கீமின் வகிபாகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.

வெளியான காலநிலை குறித்த எச்சரிக்கை!

0

பலத்த மழை தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு இன்று (18) காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களும் அவதானமாக இருக்குமாறு குறித்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், அதன் தாக்கம் காரணமாக, இன்று (18) மற்றும் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவு இன்று!

0

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

2009 மே மாதம் வரை நீடித்த யுத்தம், நந்திக்கடல் பகுதியில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது. 

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையில் விடுதலைப் புலிகளால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை விடுவித்த பெருமையும் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உண்டு. 

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் “தேசிய வெற்றி கொண்டாட்டம்” நாளை (19) நடைபெறவுள்ளது. 

இந்த நினைவு நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்த தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வில், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முப்படைகளையும் வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். 

இதற்கிடையில், தேசபக்தி தேசிய முன்னணி நேற்று ஒரு ஊடக சந்திப்பை நடத்தி, தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தது.

திடீரென அதிகரித்த கொரோனா தொற்று!

0

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளில் புதிய கொரோனா தொற்று அலை பரவி வருகிறது’ என சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஹாங்காங்கில் 31 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கழிவுநீர் தான் காரணமாக கூறப்படுகிறது. அதேபோல, சிங்கப்பூரிலும் புதிய கொரோனா தொற்று தென்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தை விட 28 சதவீதம் அதிகம். தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால், ‘உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், பூஸ்டர் டோஸ் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மே 4 வரையிலான ஐந்து வாரங்கள் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்காக கடும் போட்டி!

0

உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூன் 2 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இருப்பினும், நாட்டின் முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியால் 50% வரம்பைத் தாண்ட முடியாத பின்னணியில், இது தொடர்பில் எதிர்க்கட்சி கட்சிகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. 

அரசியல் கட்சிகள் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தங்கள் அதிகபட்ச ஆற்றல்களை வௌிப்படுத்தி வருவதால் இந்த தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில், அரசியல் கட்சி உறுப்பினர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் வரபிரசாதங்களை வழங்க சில தரப்பினர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், உள்ளூராட்சி ஆணையரால் நடத்தப்படும் தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் அரசாங்க அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி தனிக் கட்சியாக 48 ஆசனங்களை வென்ற, அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

494 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

0

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் சுகாதார அமைச்சில் நடைபெற்றுள்ளன. 

அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்காக இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு 294 பேரையும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 200 பேரையும் பணியமர்த்த சுகாதார அமைச்சு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி, இன்று நடைபெற்ற நேர்காணலில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அந்தப் பதவிகளுக்கு அமைவான மாற்றீடு மற்றும் சேர்க்கை கற்கைநெறிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.