Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 11

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மே 10ஆம் திகதி காலை 6:00 மணி முதல் மே 15ஆம் திகதி மாலை 6:00 மணி வரையிலான தரவுகளின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் 46 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தங்களினால் நாட்டின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 47 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 3,587 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 99 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. தற்போது 32 குடும்பங்களைச் சேர்ந்த 113 நபர்கள் 3 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு: திம்பிரிகஸ்யாய பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு வயது மற்றும் ஆறு மாத கால சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம்: ஆனமடுவ பகுதியில் வெள்ள நீரில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா: ஜா-எல மற்றும் கணேமுல்ல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

மன்னார் – மதவாச்சி மற்றும் ரம்புக்கனை – அஸ்கிரிவத்தை ஆகியவற்றுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைகள்:

கண்டியில் உடதெல்தொட்ட பாலம் இடிந்து விழுந்ததால் கண்டி-தலத்து ஓயா வீதி மூடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்கள்:

கடும் மழை காரணமாக நுவரவெவ, யான் ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வானிலை எச்சரிக்கைகள்

பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் கணிப்பின்படி, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், சுமார் 35,000 பேருக்கு குறுஞ்செய்திகள் (SMS) மூலம் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

புத்தளத்தில் மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 8,347 குடும்பங்களைச் சேர்ந்த 30,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.​

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 நலன்புரி முகாம்கள் (தற்காலிக தங்குமிடங்கள்) அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்களில் தற்போது 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்கியுள்ளனர் என்றும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.​

​தொடர்ச்சியான அதிக மழை வீழ்ச்சி காரணமாக தெதுரு ஓயா, இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.​

தெதுரு ஓயா நீர்த்தேக்கம்:

4 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 5,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.​

தப்போவ நீர்த்தேக்கம்:

12 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 4,480 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.​

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கம்:

2 வான் கதவுகள் 3 அடி வீதமும், மேலும் 2 வான் கதவுகள் 2 அடி வீதமும், மற்றுமொரு 2 வான் கதவுகள் 1 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வினாடிக்கு 6,000 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் திறந்து விடப்படுகிறது.​

வெள்ள அபாய எச்சரிக்கை​

தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மீ ஓயாவிற்குள் பாய்வதனால், மீ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக புத்தளம் மாவட்ட இடர் மேலாண்மை பிரிவு எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

0

வவுனியா மாவட்டத்தில் புதிய வீடுகள் 150 கட்டப்படுகிறது – ஒதுக்கீட்டு நிதி ரூபாய் 150 மில்லியன்

“தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் அரசு ஆரம்பித்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் 150 கட்டப்படுகின்றன.

இதற்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் வீடில்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் 150க்கு இவ்வருடம் புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த குடும்பங்கள் 05 ற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கற்குழி, அவுசதப்பிட்டிய, கலுகுன்னம்மடுவ, கூமான்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூபாய் 10 இலட்சம் வரை செலவிட்டுள்ளது. புதிய வீடுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொட்டித் தீர்க்கவுல்ல 150 மி.மீ. அளவு கனமழை!

0

இலங்கைக்கு வடகிழக்கு திசையில் குறைந்த தாழமுக்க வலயம் தொடர்ந்தும்…

இலங்கையின் வடகிழக்கு திசையில் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடிக்கும் என்றும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் தீவிலிருந்து அகன்று செல்லும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0

அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி நிலவரப்படி பெய்துள்ள பலத்த மழை காரணமாக, அத்தீவுப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

​அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • ​அந்த வகையில் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான, வத்தளை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​மேற்குறிப்பிட்ட தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அவசரத் தேவைகளுக்காகத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளம் தேங்கியுள்ள வீதிகளைக் கடக்கும்போது மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

​இந்த எச்சரிக்கை அறிவித்தல் 2026 மே 15ஆம் திகதி இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும்.

ஆதாரம்: நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம்.

சிலாபத்தில் பிடிபட்ட 200 கிலோ பிரம்மாண்ட ‘கொப்பரா’ மீன்!

0

ஜூட் சமந்த

சிலாபம் கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடை கொண்ட மிகப் பெரிய கொப்பரா (Koppara) மீன் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைச் சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம், லான்சி பள்ளிவாசல் (Lansi Palliya) மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 12-ஆம் தேதி மாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த ராட்சத மீன் சிக்கியுள்ளது.

இந்த மீன் சுமார் 200 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான கொப்பரா மீன் ஒன்று பிடிபட்டிருப்பது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த குறித்த மீனவர்,

“நானோ அல்லது லான்சி பள்ளிவாசல் துறைமுகத்தைச் சேர்ந்த வேறு எந்த மீனவரோ இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவிலான மீன் ஒன்றைப் பிடித்ததில்லை. இது எமது பகுதியில் பதிவான ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த ராட்சத மீனைப் பார்ப்பதற்காக பலரும் திரண்டிருந்ததுடன், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வைரல் ஆகி வருகின்றன.

அவசரமாக மூடப்பட்ட புத்தளம் வைத்தியசாலையின் ICU பிரிவு!

0

செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் (Base Hospital) இயங்கி வந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) கட்டடப் பகுதி ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததை அடுத்து, அந்தப் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

வைத்தியசாலையின் பழைய கட்டடம் ஒன்றில் 06 படுக்கை வசதிகளுடன் இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வந்தது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, குறித்த கட்டடத்தின் கொன்கிரீட் கூரைப் பகுதி ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நான்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த இடிபாடுகளினால் நோயாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளனர்:

அந்தவகையில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், மற்றுமொருவர் கல்கமுவ மகா வைத்தியசாலைக்கும் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கிய கட்டடம் மிகவும் பழமையானது என்றும், அதன் ஆபத்தான நிலை குறித்து ஏற்கனவே சுகாதார அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலைக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் லசந்த லியனகே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் ஆலோசனைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இறுதி எச்சரிக்கை! முடிவை அறிவிக்க ஜூன் 15 கடைசித் திகதி!

0

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் பணியாட்டொகுதி பிரதானி மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் இணைந்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தீர்மானத்தை அறிவிக்க காலக்கெடு

திட்வா சூறாவளி அனர்த்தத்தினால் வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) அதிக ஆபத்துள்ள வலயங்களில் வசிப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றம் குறித்து இந்த அறிவித்தல் கவனம் செலுத்துகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினர், தங்களின் மீள்குடியேற்றம் அல்லது இழப்பீடு தொடர்பான இறுதித் தீர்மானத்தை இதுவரை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தங்களது விருப்பத்தேர்வு அல்லது தீர்மானத்தை இதுவரை அறிவிக்காத குடும்பங்கள், எதிர்வரும் 2026 ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திகதிக்குள் தங்களது தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பது அவசியம் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

“2026.06.15 ஆம் திகதிக்குப் பின்னர் தங்களது தீர்மானத்தை அறிவிக்கும் குடும்பங்கள், முழுமையான வீட்டு வசதி இழப்பீட்டுக்கோ அல்லது அரசினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றத் திட்டங்களுக்கோ உள்வாங்கப்பட மாட்டார்கள்.”

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வினை உடனடியாக வழங்குமாறும், மீள்குடியேற்றப் பணிகளில் எவ்வித தாமதமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரதேச செயலகங்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 27,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

0

ஜூட் சமந்த

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம், வனாத்தவில்லுவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:

  • விசுத்தாராம விகாரை: 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 நபர்கள்.
  • இந்து கோவில் (புத்தளம் தெற்கு): 2 குடும்பங்களைச் சேர்ந்த 5 நபர்கள்.

தற்போது முகாம்களில் தங்கியுள்ள 52 நபர்களுக்கும் தேவையான சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளை இடர் நிவாரண சேவை உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் நீரில் மூழ்கின

வெள்ள நீர் ஊடுருவியதால் புத்தளம் நகரின் முக்கிய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக:

  • புத்தளம் ஆதார வைத்தியசாலை
  • பொலிஸ் நிலையம்
  • பிரதேச செயலகம்
  • வானிலை ஆய்வு அலுவலகம்
  • சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்
  • அரச உத்தியோகத்தர் விடுதிகள்

அத்துடன், இந்துக்கல்லூரி, பாத்திமா மத்திய மகா வித்தியாலயம், சாகிரா கல்லூரி மற்றும் ஆண்ட்ரூ ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.

போக்குவரத்து பாதிப்புகள்

மழைவெள்ளம் காரணமாக வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

  • புகையிரத பாதை: வெள்ள நீர் காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • பிரதான வீதிகள்: புத்தளம் – அனுராதபுரம், புத்தளம் – குருநாகல் மற்றும் புத்தளம் – சிலாபம் ஆகிய பிரதான வீதிகளின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த 36 மணித்தியாலங்கள் மிக முக்கியம் – திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை!

0

இலங்கைக்கு வடகிழக்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தத் தொகுதி, இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்றாலும், இதன் தாக்கம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் காற்றின் நிலை
  • மழைப்பொழிவு: நாட்டைச் சூழவுள்ள அனைத்து கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
  • காற்றின் வேகம்: பொதுவாக காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 25-35 கி.மீ வரை காணப்படும்.
  • பலத்த காற்று: காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடல் கொந்தளிப்பு மற்றும் அலைகளின் சீற்றம்

காங்கேசந்துறை முதல் பொத்துவில் வரையான (தென்மேற்கு மற்றும் தெற்கு) கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பகுதிகள் மிதமான அலையுடன் காணப்படும்.

முக்கிய அறிவிப்பு: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.