Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 111

நேற்று ஆரம்பமான “Sri Lanka Skills Expo 2025” கண்காட்சி!

0

நமது சிறார்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களின் கடமையாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“Sri Lanka Skills Expo 2025” கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் நேற்று ஒக்டோபர் 10 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் இளைஞர்களிடையே நிலவும் தொழில்வாய்ப்பின்மை வீதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கண்காட்சி மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆகிய இரு தினங்களில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடத்தப்படுகின்றது. கைத்தொழில் துறை திறன் சபையும் (Industry Sector Skills Councils – ISSC), கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாம் ஆரம்பித்துள்ள கல்விச் சீர்திருத்தத்தில் இதுவொரு சிறப்பான சந்தர்ப்பமாகும். இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது, எமது பிள்ளைகளுக்குக் கல்வித் துறையில் காணப்படுகின்ற வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை மாத்திரமல்ல, அந்த வாய்ப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான பாதையைத் திறந்து விடுவதோடு, இந்த அனுபவங்களை கல்வி மூலம் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றோம்.

இந்தக் கண்காட்சி மூலம் உங்கள் எதிர்காலப் பயணத்திற்கான வழிகாட்டல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். உங்களதும் பெற்றோரினதும் விருப்பம், உங்களது திறமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இன்றைய உலகில் உருவாகும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நினைக்கிறேன்.

உண்மையில், இந்தக் காலகட்டத்தில் கல்வி கற்று சமூகத்தில் இணைந்து கொள்ளவிருக்கும் உங்களது தலைமுறையினர் முகம் கொடுக்க வேண்டிய பல சவால்கள் காணப்படுகின்றன. தொழில்நுட்பத்தின் காரணமாக உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக, எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் சமூகம் மாற்றம் பெரும்போது, மாறிவரும் அந்தச் சமூகத்தில் தொழில்களும் மாற்றமடைகின்றன. நாம் சிந்திக்கப் பழகியிருக்கும் பாரம்பரியப் பாதையில் பயணிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள இயலாது. ஆகையினால், மாறிவரும் சமூகத்தைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொண்டு எமது கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும்.

இதன் மூலமே எமது தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்வது சாத்தியமாகும். நாம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்த பயணிக்கும் பாதைகள் எவை என்பதை இந்த நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த அபிவிருத்திப் பொருளாதாரத் திட்டத்தில் நீங்கள் எங்கு இணைந்து கொள்ளலாம், எங்குப் பங்காளியாக இருக்கலாம், எந்தப் பாதையில் செல்லலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு மாத்திரமின்றி, உங்களது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரு புரிதலைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கான, சமூகத்திற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. உலகத்தின் புதிய போக்குகள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் நினைப்பதை விடச் சமூகத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன, உங்களுக்கென ஓர் இடம் இருக்கின்றது. அந்த இடத்திற்கு நீங்கள் வரும்வரை நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லுங்கள். நீங்கள் முன்னோக்கிச் செல்லும் அந்தப் பயணத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

எம்மால் செய்யக்கூடியது, உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதும், புதிய வாய்ப்புகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதுமே ஆகும். அந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே உங்கள் பொறுப்பாகும்.

இங்கு கூடியிருக்கும் சிறார்களாகிய உங்களுக்கு இந்தச் சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது என நான் நம்புகிறேன்.

நீங்களே அடுத்த தலைமுறையின் தலைமையை ஏற்கப் போகிறீர்கள். இது எல்லோரும் உங்களுக்குச் சொல்லும் விடயம் என்று நான் நினைக்கிறேன். ஆயினும், நாம் அதைச் சொல்வதோடு நின்றுவிடாது, அந்தச் சந்தர்ப்பங்களை, அந்தத் தலைமையைப் பெறக்கூடிய கல்விப் பின்னணி, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான பாதைகளை உங்களுக்காகத் திறந்து விடுகிறோம். பெரியவர்களாகிய எமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, இதை எப்படியாவது உங்களுக்குச் செய்துகொடுப்போம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுத்தந்திரீ, கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தில் சபரிமலை யாத்திரிகர்கள் நடாத்தும் மாநாடு!

வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையம் நடாத்தும் மாபெரும் மாநாடும் மகாகுரு ரவிசுவாமியின் கௌரவிப்பு நிகழ்வும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.

சபரி ஐயப்ப சீரடி சாவி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவரும், வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தலைவருமான தவத்திரு.தரணீஸ்வர குருசுவாமி தலைமையில் இன்று 11.10.2025 நடைபெறுகிறது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், குரு சுவாமிகள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ரிஷாட் எம்.பி நடத்திய இரண்டாவது பிரம்மாண்ட திருமண விழா!

0

“மவத்ததா வ ரஹ்மா” (பாசம் மற்றும் கருணை) எனும் தொனிப்பொருளின் கீழ் இரண்டாவது பிரம்மாண்ட திருமண நிகழ்வு கௌரவ திரு. நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் கடந்த 2025 அக்டோபர் 7 ஆம் தேதி வவுனியாவில் நடைபெற்றது.

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்வில், இலங்கையின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் 20 பௌத்த, கத்தோலிக்க மற்றும் இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஜோடிக்கும் அவர்களின் புதிய வாழ்க்கையை கண்ணியத்துடன் தொடங்க நிதி உதவியும் வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்தாபகத் தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் நினைவாக இந்த நீதி பங்களிப்பை ஷேக் மஹ்மூத் ஃபதே அப்துல்லா அல் கஜே வழங்கிவைத்தார்.

வவுனியாவில் சர்வமத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து முக்கிய மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் விழாவில் பங்கேற்று, தங்கள் ஆசீர்வாதங்களையும் ஒற்றுமையின் செய்திகளையும் வழங்கினர். இந்த நிகழ்வில் வண. மிகிந்தலே தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், இது அனைத்து சமூகங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் உணர்வைக் குறிக்கிறது.

“மவத்ததா வ ரஹ்மா” திட்டம் முதன்முதலில் 2025 ஆகஸ்ட் 24 அன்று புத்தளத்தில் தொடங்கப்பட்டது, அங்கு ஒரே தடவையில் 20 முஸ்லிம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். அந்த தொடக்க விழாவில் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதர் மாண்புமிகு காலித் நாசர் அல் அமேரி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த முயற்சியின் மூலம், கௌரவ ரிஷாத் பதியுதீன் சமூக நல்லிணக்கம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் இரக்கத்தை மேம்படுத்துவதையும், அனைத்து தரப்பு இளம் தம்பதிகளுக்கும் நடைமுறை ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார், இது செயலில் பாசம் மற்றும் கருணையின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

வெளியாகியது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

0

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1967 ஆம் ஆண்டு பிறந்த மரியா வெனிசுலாவில் முக்கியமான எதிர்கட்சித் தலைவராக உள்ளார். தொடர்ந்து, வெனிசுலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகம் மலர வேண்டுமெனவும் அமைதியாக போராடி அதில், வெற்றியும் கண்டுள்ளார். இத்தகைய சூழலில்தான், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.

கடந்த, சில மாதங்களாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு கொடுக்கப்பட்டு இருப்பது ட்ரம்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு பழைய மாணவிகள் நிதி உதவி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் அபிவிருத்திப் பணிக்காக அதே பாடசாலையின் பழைய மாணவர்களினால் ஒரு தொகை நிதி இன்று 10.10.2025 வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் கல்வி பயின்ற 2002 ஆம் ஆண்டு சாதரண தர மாணவிகளினால் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தொகை பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் அவர்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

பாடசாலையில் நிலவிவரும் நிதிப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டும், பாடசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்காகவும் குறித்த மாணவிகளினால் இந் நிதிப்பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாடசாலையின் பழைய ஆண் மாணவர்கள் மாத்திரமே அதிகமான நிதிப்பங்களிப்புகள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்திருக்கும் நிலையில், முதன் முறையாக பாடசாலையின் பழைய பெண் மாணவிகள் முன்வந்து இவ்வாறான நிதிப்பங்களிப்பை செய்துள்ளமை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

வட மாகாண ஆளுநரின் அதிரடி அறிவிப்பு!

கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC)/ அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களில் வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்யுமாறு உள்ளூராட்சி மன்றங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணித்தார்.

குடிபுகு சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமையால் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையாலும் உள்ளூராட்சி மன்றங்களால் வரி அறவிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையாலும் அதனால் ஏற்படும் வருமான இழப்பையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10.10.2025) நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

பருவமழை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக திட்டங்களை நிறைவுசெய்யுமாறு கோரினார். அத்துடன் இம்முறை குறைவான காலப் பகுதியினுள் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படக் காரணமாக இடங்களை அடையாளப்படுத்தி இம்முறை அந்தப் பாதிப்பை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படும் ஆவணங்கள் தொடர்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த விண்ணப்பங்களை கிடப்பில்போடாமல் சம்பந்தப்பட்ட பொதுமகனுக்கு உடனடியாகவே அழைப்பை மேற்கொண்டு அவற்றைப்பெற்று விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து முடிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபை அவ்வாறு சிசிரிவி கமராக்களைப் பொருத்தி அதன் ஊடாக தண்டப் பணத்தை அறவிட்டு வருவதாக சபையின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில், உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. ஒப்பந்தகாரர்களால் சில இடங்களில் வேலைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தப்போவையில் இன்று ஆரம்பமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை!

0

தப்போவ குளத்தை மையமாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட தப்போவ குளத்தை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறையின் துரிதப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று இன்று (10) தொடங்கி வைக்கப்பட்டது.

தப்போவ குள வளாகத்தில் இருந்த ஜப்பானிய முடிச்சு மற்றும் கலப்பு அந்தாரா போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி கௌரவ சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க படபெந்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் சந்தன அபயரத்ன மற்றும் கௌரவ சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் திரு. அன்டன் ஜெயக்கொடி மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முஹம்மது பைசல், ஹிருணி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த செயல்முறை சுற்றுச்சூழல் அமைச்சகம், தூய்மை இலங்கை திட்டத்தின் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.

தப்போவ குளத்தை சுத்தம் செய்யும் பணி முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள், சுற்றுச்சூழல் விமானிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரம் பேரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயல்முறையின் முக்கிய முன்மொழியப்பட்ட பகுதிகள் காட்டு யானைகளின் வாழ்விடங்களை வளப்படுத்த ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல், வனவிலங்கு காப்பகங்களில் சீரழிந்த குள சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் யானைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை வளப்படுத்துதல், குறிப்பாக கிராமப்புற குழுக்கள் மற்றும் பிரதேச செயலாளர் மூலம். இந்த திட்டத்திற்கு இணையாக, நீர்ப்பாசனத் துறை தப்போவ ஏரியின் எல்லைகளை வரையறுக்கும் பணியைத் தொடங்கியது.

வன பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான கல்வில சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல் மற்றும் கல்வில சுற்றுச்சூழல் பூங்காவில் சமூக அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

கூடுதலாக, வனாத்தவில்லுவ எலாரிஸ் ஏரி மற்றும் அனத்தவெவ புதுப்பித்தல், கருவலகஸ்வெவ மின்சார வேலியின் இருபுறமும் உள்ள காடுகளை அகற்றுதல் மற்றும் வனாத்தவில்லுவ மின்சார வேலியுடன் சாலையைத் தயாரித்தல் ஆகியவை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும்.

(அரபாத் பஹர்தீன்)

குழந்தைகள் புத்தகங்கள் குறித்த தேசிய மாநாடு!

0

‘குழந்தைகள் இலக்கியம்’ என்பது குழந்தைகளின் சிந்தனை முறையை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகும்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளின் மனதில் வரும் வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் கதைகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக அமையும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தில் நிறுவப்பட்ட குழந்தைகள் புத்தகங்கள் குறித்த தேசிய மாநாட்டின் “புனைகதை அதிசயம்: குழந்தைகள் புனைகதை புத்தகங்களை உருவாக்குவதற்கான ஒரு விரிவான வழிகாட்டி” என்ற தலைப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“குழந்தைகளின் சிந்தனை முறைகளை வடிவமைக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாக குழந்தைகள் இலக்கியம் அறியப்படலாம். குழந்தைகளுக்கான வாசிப்பு ரசனையுடன் கூடிய ஆரோக்கியமான, உணர்திறன் மிக்க மனதை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். எனவே குழந்தைகள் இலக்கியம் எளிய வார்த்தைகளால் மட்டுமல்ல, குழந்தையின் மனதை பிரகாசமாக்கும் விமர்சனங்கள் மற்றும் மதிப்புகளுடன் உருவாக்கப்பட வேண்டும். “

இதுபோன்ற மிகவும் சரியான நேரத்தில் படைப்புகளை உருவாக்கி, அந்த புத்தகங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகள் இலக்கியப் படைப்புகளை எழுதும் எழுத்தாளர்கள் மிகவும் மேம்பட்ட படைப்புகளை உருவாக்க ஒரு குறிப்பைப் பெறுவார்கள், மேலும் குழந்தைகள் படிக்கவும் சிறந்த இன்பத்தை வழங்கவும் ஊக்குவிப்பது இந்த சகாப்தத்தில் ஒரு தேவையாக மாறியுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

சமீபத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட இந்தப் படைப்பு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம், “படிக்க அறை” நிறுவனம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் கூட்டாக இணைந்து திட்டத்தை தொடக்கிவைத்தனர்.

மாரவில பகுதியில் பிடிபட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகள்!

0

ஜூட் சமந்த

இந்தியாவிலிருந்து கடல் வழியாக திருட்டுத்தனமாக நாட்டிற்குல் கொண்டு வரப்பட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகளையும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90,000 சிகரெட்டுகளையும் மாரவில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாரவில, முடுகடுவ பகுதியில் இன்று 10 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பீடி இலைகள் 34 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், 450 சிகரெட் பண்டல்கள் அடங்கிய 09 பெட்டிகளில் சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் 04 சிறிய படகுகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் வென்னப்புவ – வைகாலவில் உள்ள கலால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிலாபத்தில் இடம்பெற்ற தீப்பந்தப் போராட்டம்!

0

ஜூட் சமந்த

நேற்று 9 ஆம் தேதி இரவு சிலாபம் நகர மையத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் புத்தளம் மாவட்ட கிளை ஊழியர்களால் இந்த தீப்பந்த போராட்டம் மற்றும் கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் அரச வங்கிகள் எதிர்கொள்ளும் தற்போதைய மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இந்த தீப்பந்த போராட்டம் மற்றும் கடவுள் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல அரச வங்கிகளின் ஊழியர்கள் இந்த தீப்பந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.